சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர், தன் மனைவி, மகளுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். "என்ன காரியமாகப் பலன் கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
ஐயா, "என் மகளின் வாழ்க்கையில் தடை, பிரச்சினை ஏற்பட்டு, எங்களை மனநிம்மதியில்லாமல், வாழ செய்துவிட்டது. பல விதமான பரிகார, பூஜைகள் செய்தும் பலனில்லை. என் மகளின் எதிர்காலம் நல்லவிதமாக அமைய அகத்தியர் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையில் தங்களை நாடி வந்தோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலைக் கட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்துவடிவாகத் தோன்றி, பலன் கூறத் தொடங்கினார்.
இந்த மகள் தொழிற்கல்வி முடித்து, ஒரு வெளிநாட்டு அலுவலகத்தில் (ஐ.டி) பணிசெய்து வருகின்றாள். இவள் இதற்குமுன்பு, வேலை செய்த இடத்தில் உடன்பணிபுரிந்த ஒருவன்கூட பழக்கம் ஏற்பட்டது. அவன் வேற்று மொழிபேசும், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவன். இருவரும் ஒருவரையொருவர் நேசித்து, மிக நெருக்கமாகப் பழகி, திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தார்கள்.
இந்த மகள், தன் பெற்றோரிடம், அவனை திருமணம் செய்துகொள்ள அனுமதி தரவேண்டும் என்று கேட்டாள். பெற்றவர்களாகிய இவர்கள், அவனை திருமணம்செய்ய அனுமதிக்காமல், பல புத்திமதிகளையும் கூறினார்கள். இந்த மகள் கேட்கவில்லை. நான் அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன். வேறுயாரையும் திருமணம் செய்யமாட்டேன். நீங்கள் சம்மதம் தராவிட்டால் இனி எனக்கும், உங்களுக்கும், எந்த உறவும் இல்லை. இனி வீட்டிற்கு வரமாட்டேன் என கூறி சென்றுவிட்டாள்.
இவளை பெற்றவர்களாகிய இவர்கள், நமக்கு இருப்பதோ, ஒரு மகள்தான். இருவரின் ஜாதகத்தையும், ஒரு ஜோதிடரிடம் கொடுத்து, இருவருக்கும் திருமணம் செய்துவைத்தால், நல்ல வாழ்க்கை அமையும் என்று கூறினால் அவள் விருப்பப்படியே திருமணம் செய்துவைத்துவிடலாம் என்று தீர்மானித்து, தங்களுக்குத் தெரிந்த ஒரு ஜோதிடரிடம் கொடுத்துப் பலன் கேட்டார்கள்.
ஜோதிடர் இருவரின் ஜாதகங்களையும், ஒப்பிட்டுப் பார்த்து, ஏழு பொருத்தங்களும், நட்சத்திரப் பொருத்தமும் சரியாக உள்ளது. மகளுக்கு திருமண யோகம் வந்துவந்துவிட்டது. திருமணம் செய்துவைத்தால் சிறப்பாக வாழ்வார்கள் என்று, ஜோதிடர் கூறியதைக்கேட்டு மகளின் விருப்பப்படியே திருமணம் செய்துவைத்தார்கள்.
இந்த மகளின் திருமணம் முடிந்து, சில மாதங்களிலேயே, இருவருக்கும் காதலித்தபோது இருந்த பாசமும், நேசமும் மாறி, வெறுப்பாகி கருத்து வேறுபாடு உண்டாகி வேறு ஊருக்கு, மாற்றல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டாள். இப்போது கடந்த இரண்டு வருடங்களாகத் தன் பெற்றோருடன் வசித்துவருகின்றாள். அகத்தியன் கூறியது உண்மையா என்று கேள்.
"அகத்தியர் கூறியது அனைத்தும் உண்மைதான். இவளின் வாழ்வில் ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் என்ன? இவளின் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும்? நல்ல வாழ்க்கை இவளுக்கு அமைய அகத்தியர்தான் வழிகாட்ட வேண்டும்'' என்றார்.
இவர் செய்த பாவம்தான், மகளின் வாழ்வை கெடுத்து, தடுத்துவருகின்றது. இவருக்கு சுமார், எட்டு வயது இருக்கும்போது, இவனின் தந்தை இறந்துவிட்டார். இவனும் இவன் தாயும், தந்தைவழி உறவுகளால் கைவிடப்பட்டார்கள். இவன் தாய் இவனை அழைத்துக்கொண்டு, தன் பிறந்த வீட்டிற்கே வந்து, அவர்கள் பாதுகாப்பில் வாழ்ந்தார்கள். தாய்மாமன் இவனை, பெற்ற மகனைப்போல் காப்பாற்றி வளர்த்தார். இவரும் படித்து, பட்டம் பெற்று, அரசுப்பணியில் சேர்ந்தார்.
இவனை வளர்த்த தாய்மாமன், தன் மகளை இவனுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டார். தாயும் தன் சகோதரன் மகளையே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்.
ஆனால், இவன் தன்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணை விரும்பி, அவளையே திருமணம் செய்துகொண்டான். தாய்மாமன் மனம் வெறுத்து சாபமிட்டான். அந்த சாபம் செயல்படத் தொடங்கியது. அவனுக்கு இந்த ஒரு பெண் பிறந்தபின்பு, இவரின் மனைவி நோயாளியானாள். இவரின் தாம்பத்தியம் தடைப்பட்டது. அந்த சாபம்தான் இப்போது இவர் மகள் வாழ்க்கையையும் தடுத்துவருகின்றது.
இந்த மகளின் வாழ்க்கை இனியாவது, நன்கு அமைய, இவர் பெற்ற மாமன் சாபத்தை நிவர்த்தி செய்யவேண்டும். சாப நிவர்த்திபெற வழிகூறுகின்றேன்.
அதை செய்யச்சொல். இவனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றே வளர்ந்த மாமன் மகளை, வேறு ஒருவருக்கு மணமுடித்து வைத்தார்கள். இப்போது அவளுக்கும், திருமண வயதில் ஒரு பெண் இருகின்றாள். அந்தப் பெண்ணிற்கு இவரே ஒரு நல்ல மாப்பிள்ளை பையனைப் பார்த்து, அவள் திருமணத்திற்கு ஆகும் மொத்த செலவையும், இவரே செய்து, திருமணத்தை முடித்துவைத்தால், தாய்மாமனுக்கு இவர் பட்ட கடன் தீரும். தாய்மாமனின் ஆத்மாவும் சாந்தியடையும், தாய்மாமன் சாபம் நிவர்த்தியாகும்.
அதன்பிறகு இவர் மகளுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். அகத்தியர், கூறியபடியே செய்துவிடுகின்றேன். என் மகளுக்கு அடுத்து ஒரு மாப்பிள்ளை எங்கிருந்து? எப்படிப்பட்டவன் அமைவான் என்று கூறுங்கள் என்றார்.
நான் கூறியபடி, செயல்பட்டு, தாய்மாமன் சாபத்தை நிவர்த்திசெய்து முடித்துவிட்டு வரச்சொல், அதன்பின்பு, எதிர்கால வாழ்க்கையில் இவளை மணமுடித்து வாழப் போகின்றவனைப் பற்றிக் கூறுகின்றேன் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
ஐயா, "அகத்தியர் கூறியபடி சாப நிவர்த்தியை செய்யுங்கள். சாபம் நிவர்த்தி அடையாமல் வாழ்க்கையில் சங்கடங்கள் தீராது'' என்று கூறி அனுப்பிவைத்தேன்.
செல்: 99441 13267