கணவன்- மனைவி இருவர், ஜீவநாடியில் பலன்கேட்க வந்தனர். அவர்களிடம் என்ன பலன்கேட்க வந்துள்ளீர்கள் என்றேன்.
ஐயா, "எங்கள் மகன் மதுபழக்கத்திற்கு அடிமையாகி, அதிகமாக மது அருந்துகிறார்.
ஒருசில மாதங்கள், சாராயம் குடிக்காமல், ஒழுங்காக தன் வேலைகளைச் செய்கின்றார்.
திடீரென்று மது அருந்துகின்றார். அவர் ஒரு முறை சாராயம் குடித்துவிட்டால். தொடர்ந்து, சில நாட்களுக்கு இரவு- பகல் பாராமல் குடித்துக்கொண்டே இருக்கின்றார். குடிக்க பணம் இல்லையென்றால், கண்ணில் பார்த்தவர்களிடம் எல்லாம் சாராயம் குடிக்க பணம் கேட்கின்றார்.
இவரின் இந்த செயலால் எங்களையும், அவரையும், குடும்பத்தையும், ஊரில் உள்ளவர்கள் மிகவும் கேவலமாக நினைத்துப் பேசுகின்றார்கள்.
இவர் சாராயம் குடிக்கும் நாட்களில், இரவில் தூங்குவது இல்லை. போதை இருக்கும்வரை படுத்திருப்பார். போதை குறைந்துவிட்டால், இரவில் அவராகவே எழுந்துசென்று வெளியில் சுற்றுகின்றார்.
சில நாட்கள் மது அருந்திவிட்டு, இதுபோன்று செயல்படும் இவர், பின் தானாகவே சரியாகி நல்ல இயல்பான நிலைக்கு வந்துவிடுகின்றார். நாங்களும் எங்களால் முடிந்த புக்திமதிகளை அப்போது கூறுகின்றோம். ஆனால் இந்த செயல் மாறவில்லை. எனது மகனின் இந்த நிலைக்கு காரணம் என்ன? என்பதை அறிந்துகொள்ளவும், மது குடிக்கும் பழக்கம் மாறி அவர் எப்போது, நல்ல நிலையில், சுயநினைவில் இருக்கவும், இனிவரும் வாழ்க்கை அவருக்கு நல்ல நிலையில் அமையவும்தான் வழிகேட்டு அகத்தியரிடம் வந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
ஓலையில் எழுத்து வடிவில் தோன்றிய அகத்தியர் பலன் கூறத் தொடங்கினார்.
இந்த தேசத்தை அன்னியர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில், அதாவது இவரின் சுமார் மூன்று தலைமுறைக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள், மனிதர்களின் மதியைக் கெடுக்கும், போதையை தரும், கள், சாராயம் விற்க அரசாங்கத்திடம் அனுமதிபெற்று, சாராயம் விற்று பெரும் பணத்தை சம்பாதித்து, நிறைய நிலபுலன்கள், சொத்துகளை வாங்கி சேர்த்து, வசதியுடன் வாழ்ந்தார்கள். இவர்கள் விற்ற கள், சாராயத்தை வாங்கிக்குடித்த பல குடும்பங்கள், தங்களது பணம் சொத்துகளை இழந்து, வறுமை நிலையை அடைந்தார்கள். ஆண்களின் குடிபழக்கத்தால் பல குடும்பங்களில், மனைவி, குழந்தைகளின் நலன்கள் பாதிக்கப்பட்டு, அவர்கள் வாழ்வில் கஷ்டப்பட்டார்கள். இன்னும் பலர் சாராயம் குடித்துக்குடித்தே உடல்நலிவுற்று உயிரை விட்டார்கள்.
இவனின் முன்னோர்கள் பல குடும்பங்கள் வறுமைநிலையை அடைந்தது, பலரின் குடும்பத்தை குலைத்தது, இன்னும் பலர் உயிரை துறக்க காரணமானது கள், சாராயம்தான். இதனை வியாபாரம் செய்த இவர்கள் குடும்பத்தையே மதியை மயக்கி, அந்த பாவங்கள் செயல்பட்டு, தாக்குகின்றது. மேலும் கள், சாராயம் விற்று சம்பாதித்து முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகள் அனைத்தையும் இப்போது இழந்து, இவன் வம்சத்தினர் அவரவர் சம்பாதித்து சாப்பிட்டு வாழவேண்டிய நிலையில் குடும்பம் உள்ளது.
இவர்களின் மகன் மதுபோதைக்கு அடிமையாகி, மதி இழந்து வாழ்வதற்கு முன்னோர்கள் தங்கள் வாழ்வில் பணத்திற்காக செய்த செயல்தான் காரணம் என்பதைக் கூறினேன். குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதனை மறக்கவும், குடியால் இழந்துபோன சரீர சக்தியை மீட்டெடுத்து உடல்பலம் அடைவதற்கும் சித்தர்களாகிய நாங்கள் அறிந்து கூறியுள்ள சில மூலிகைகளைக் கொண்டு நலம்பெறலாம். வாழ்வில் மறுபடியும் நல்ல மனிதனாக வாழலாம்.
சித்தர்கள், நாங்கள் கூறிய மூலிகைகளை இப்போது இவர்கள் தேடி அலைந்து, கண்டுபிடிக்க முடியாது. ஞானி ராகவேந்திரனின் பக்தன் ஒருவன் அந்த மூலிகைகளை அறிந்து, அவைகள் இருக்குமிடம் தேடிச்சென்று, பறித்து வந்து, இவனைப் போன்று மதுபோதையினால் பாதிக்கப்பட்டு, இனி மது அருந்தக்கூடாது என்று எண்ணுபவர்களுக்கு கொடுத்து, கள், சாராயம் குடிக்கும் எண்ணத்தை மறக்கச் செய்துவருகின்றான். அவனிடம் சென்று சித்த மூலிகை மருந்தை வாங்கி, இவனை முறையாகச் சாப்பிட வைத்து மதுப்பழக்கத்தில் இருந்து விடுபடச் செய்துகொள்ளச் சொல் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து அகத்தியர் மறைந்தார்.
அகத்தியர் நாடி ஓலையில் கூறியதை அவர்களிடம் கூறி அனுப்பிவைத்தேன்.
பொதுவாக கள், சாராயம் போன்ற இன்னும் பல போதைப் பொருட்களை விற்று பணம், சொத்துகள் என எவ்வளவு சம்பாதித்தாலும், அவர்கள் வாழ்வில் உயர்வைத் தந்தாலும், அவர்களின் மூன்றாவது தலை முறை வம்ச வாரிசுகளின் வாழ்க்கையில் அனைத் தையும் இழந்து போய் இருப்பார்கள். சொத்துகள் அழிந்து போய் இருக்கும். நேர்மையாக சம்பாதித்து சேர்த்து வைக்கும் சொத்துகள் கொஞ்சமாக இருந்தாலும் அந்த சொத்துகள் பல தலைமுறை வாரிசுகளுக்கு நல்ல பலனைத் தந்து காப்பாற்றும்.
நேர்மையாக பணம் சம்பாதிப்போம்; நீண்டகாலம் சுகமாக வாழ்வோம்.
செல்: 99441 13267