சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
அந்தப் பெரியவர், "எனக்கு இரண்டு மகன்கள். இருவரையும் பொறியியல் படிக்கவைத்தேன். இருவரும் படிப்பை முடித்துவிட்டார்கள். பெரிய மகன் படித்து முடித்ததுடன், ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அவனுக்கு திருமணமும் செய்துவைத்து விட்டேன். இளைய மகனுக்கு இப்போது 28 வயதாகின்றது. இன்னும் அவனுக்குச் சரியான வேலை கிடைக்க வில்லை. வயது கூடிக்கொண்டே போகின்றது. வேலையில்லாததால், திருமணமும் தடையாகிக்கொண்டே போகின்றது. வேலை கிடைத்துச் சென்றாலும், நிரந்தரமாக வேலை செய்யாமல், வேலையைவிட்டு வந்துவிடுகின்றான். அவனுக்கு வேலை கிடைக்குமா? திருமணம் நடக்குமா? அவனின் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதையும், அவன் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி, பலன்கூறத் தொடங்கினார்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் படிப்பு என்பது வேறு, அவன் ஜீவனம் செய்ய, பணம் சம்பாதிக்கும் தொழில் வேறு என்பதை இவன் புரிந்துகொள்ளட்டும். இந்த மகன் பொறியியல் தொழிற்க் கல்வி படித்து இருந்தாலும், அவன் படித்த படிப்பிற்கேற்ற தொழில் செய்து பணம் சம்பாதித்து வாழமுடியாது.
பள்ளி, கல்லூரி படிப்பு என்பது, ஒரு தொழில் செய்ய, தகுதியை அடைய, அரசாங்கம் நிர்ணயித்த அளவுகோல்தானே தவிர, அந்த படிப்பைக்கொண்டு ஒருவன் வாழ்வில் பிழைக்க முடியாது. இவன் பிறப்பின் விதிப்பிடி, இவன் அடிமைத் தொழில் செய்யமாட்டான். இவன் தன் அறிவு, உழைப்பு முயற்சியால், சுயமாகத் தொழில்செய்து, பணம் சம்பாதித்து வாழவேண்டிய விதி அமைப்புள்ளவன். இவனுக்கு தகுந்த தொழிலைக் கூறுகின்றேன். அதை அமைத்துக்கொடுக்கச் சொல்.
அந்தப் பெரியவர், என் மகன் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வழிகேட்டால், அகத்தியர் சுயமாகத் தொழில் செய்யும் படி கூறுகின்றாரே. என்னால் பணம் முதலீடுசெய்து அவனுக்கு என்ன தொழிலை அமைத்துக் கொடுக்கமுடியும். என்னால் செய்ய முடியாததை அகத்தியர் கூறுகின்றாரே என்றார்.
அவர் கூறியதைக் கேட்டுவிட்டு, ஓலையைத் தொடர்ந்து படித்தேன்.
அந்த மகன் படித்த படிப்பிற்கேற்ற தொழிலை, இவன் வேறு இடத்தில் சென்று பணி செய்யமாட்டான். இவன் படித்த படிப்பு வாகனங்கள் சம்பந்தமான தொழிற்படிப்பு ஆகும். இவன் வாகன உதிரி பாகங்களை விற்கும் கடையை வைத்து வியாபாரம் செய்யச் சொல். இவனுக்கு வியாபாரம் சம்பந்தமான அளவு அதிகமுண்டு. மிகப்பெரிய தொகை பணம் போட்டு, கடையை ஆரம்பிக்க வேண்டாம். ஒரு சிறிய தொகையை முதலீடுசெய்து வியாபாரத்தை ஆரம்பிக்கட்டும். இவனின் இந்த பிறவி விதிப்படி இவனுக்கு அமையவேண்டிய தொழில் என்பதால் வியாபாரத்தில் நட்டம் வராது. வெகு சீக்கிரத்திலேயே உயர்வடைவான். தொழில் வளரும். இவனுக்கு கீழே பலர் வேலை பார்த்து பணிபுரிவார்கள். அவர்களுக்கு இவன் சம்பளம் தருவான்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த இவன், தன் வாழ்வில் பிரசித்தமான நபராக வாழ்வான். பல இடங்களில், வியாபார கிளைகளை உருவாக்குவான். ஒரு முதலாளியாக வாழ வேண்டிய இவன், பிறரிடம் அடிமைத் தொழில் செய்யமுடியாது. அதனால் தான், இவன் இதுவரை வேலைக்கு சென்ற இடத்தில் நிலைத்திருக்க முடியவில்லை என்ற காரணத்தையும் கூறினார்.
அகத்தியர் கூறியபடியே செய்கின்றேன். அவன் திருமணம் எப்போது? எப்படி நடக்கும் என்பதையும் அகத்தியர்தான் கூறவேண்டும் என்றார்.
இந்த மகன் முத-ல் தொழிலை தொடங்கட்டும். 30 வயதிற்கு மேல்தான் திருமணம் நடைபெறவேண்டும் என்பது இவன் விதி. இன்னும் இரண்டும் வருடம் சென்று வரச்சொல். இவனுக்கு திருமணம் எப்போது? எப்படி நடக்கும்? யார் மனைவி என்பதையெல்லாம் விளக்கமாகக் கூறுகின்றேன் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடியே அனைத்தையும் செய்கின்றேன் என்று கூறி என்னிடம் விடை பெற்றுச் சென்றார்.
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு படிப்பை படித்துவிட்டு, வேலையைத் தேடியலையாமல், அவரவர் வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு விதிப்படி அமைந்த தொழிலைச் செய்தால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டமே இராது. இன்றையநாளில் பிரசித்தமான, ஆங்கிலவழிப் பள்ளிகளில் பல லட்சங்கள் செலவுசெய்து படித்தவர்களில் பலர் ஆட்டோ ஓட்டுவதும், பலர் வாகனம் ஓட்டுவதும், பி.இ படித்தவன் வி.ஏ.ஓ.வாக உத்தியோகம் பார்ப்பதும், எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் அரசு பணியில் இருப்பதும் அவரவர் விதிப்படி அமைந்துதான் என்பதை நானும் புரிந்துகொண்டேன்.
ஒருவன் படித்த வேலையும், அவரவருக்கு பிடித்த வேலையும் உயர்வை தராது. விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட தொழில், வேலைதான் உயர்வைத் தரும்.
செல்: 99441 13267