ஒரு தம்பதியினர், நாடியில் பலனறிய வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன் தெரிந்துகொள்ள வந்தீர்கள்'' என்றேன்.
தென்மாவட்டம் ஒன்றில், ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவன் நான். நல்ல படிப்பால் அரசு உத்தியோகம் கிடைத்தது. இவள் எனது மனைவி. இங்கு வாடகை வீட்டில் வசித்தோம். கணவன்- மனைவி, குழந்தைகள் என யாராவது ஒருவரால் வீட்டில் கருத்து வேறுபாடு, பிரச்சினை, நோய் தொல்லை, பண விரையம் என ஏற்பட்டு வருகின்றது. வீட்டில் நிம்மதி யில்லை. வீட்டைவிட்டு, வெளியில் சென்றாலும், விசேஷங்களுக்கு குடும்பத்துடன் வெளியூர் சென்றால் அனைவரும் சந்தோஷமாக, பாசத்துடன் உள்ளோம். ஆனால் வீட்டிலிருந்தால், நிம்மதியில்லாத நிலை. வசிக்கும் வீட்டில் தோஷம் என்று வீடு மாறி, எந்த வீட்டிற்குச் சென்றாலும் இந்த நிலைதான். பணம் சேர்த்து, சொந்தமாக ஒரு வீடு வாங்கி வசித்தோம். அங்கும் இதே நிலைதான். இப்போது புதிதாக, நிலம் வாங்கி, சாஸ்திர, சம்பிரதாயப்படி, பூமி பூஜைசெய்து, வீடுகட்டி, கிரகப் பிரவேசம் செய்யும்போது, கணபதி ஹோமம், நவகிரக பூஜை, லட்சுமி குபேர பூஜைசெய்து வசித்துவருகின்றோம். வீடுதான் மாறுகின்றோமே தவிர, பிரச்சினை, கஷ்டம் விரையம் தீரவில்லை. இதற்கு காரணம் அறிந்தகொள்ளவும், கஷ்டம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவ வழிகேட்டு வந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவன் தந்தையைப் பெற்ற பாட்டனாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன், மகள் இருந்தார்கள். முதல் மனைவி, குழந்தைகள் இருக்கும்போதே, இவன் பாட்டன் இரண்டாவதாக, ஒரு பெண்ணை மணந்துகொண்டான். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன்தான் இவன் தந்தை. இரண்டாவது திருமணத்திற்குப்பின்பு, அவள் பேச்சைக்கேட்டு, முதல் மனைவியையும், குழந்தை களையும், வீட்டைவிட்டு விரட்டிவிட்டான். முதல் மனைவி தன் குழந்தைகளுடன் தனியே சென்று வசித்துவந்தாள். சிறிது காலத்திற்கு பின்பு தனக்கும், தனது குழந்தைகளுக்கும், வீடு, நிலம், சொத்தில் பங்கு கேட்டு, முதல் மனைவி, கிராம பெரியவர்களிடம், பஞ்சாயத்துப் பேசி கணவனிடம் இருந்து, பங்கு வாங்கித்தருமாறு பிரச்சினை செய்தாள்.
பாட்டனின் இரண்டாவது மனைவி, அதாவது இவன் தகப்பனைப்பெற்ற தாய், முதல் மனைவிக்கு சொத்தில் பங்கு தரக்கூடாது என்று கணவனிடம் கூறினாள். இவள் இருந்தால் தானே, பங்கு கேட்பாள் என்று எண்ணி, அவளைக் கொலைசெய்ய முடிவெடுத்து, நல்லவர்கள்போல் நடித்து, பங்கு தருகின்றோம், பஞ்சாயத்து வேண்டாம் என்று கூறி, வீட்டிற்கு வரச்செய்து, தங்கவைத்து, அன்றிரவு அவளுக்கு அரளிக்காய் விஷம்வைத்துக் கொன்றுவிட்டு, இயற்கையாகவே அவள் மரணம் அடைந்துவிட்டதுபோல், ஊராரை நம்ப வைத்துவிட்டார்கள். அதன்பிறகு முதல் மனைவியின் குழந்தைக்கு பங்கு தராமல் ஏமாற்றிவிட்டார்கள்.
பெற்ற குழந்தைகளை அனாதை களை போல் விட்டுவிட்டு கட்டிய கணவனால் துர்மரணம் அடைந்த அவளின் ஆத்மா, சாந்தியடையாமல், கோபத்துடன் அந்த வீட்டையை சுற்றி அலைந்தது. அவள் இறந்த வீட்டில் வசித்த இவன் தாய்- தந்தைக்கு பல சிரமங்களைத் தந்தது. அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறி, வேறு ஊரில் சென்று வசித்தார்கள். முதல் மனைவியின் சொத்தை அபகரித்த இவன் தாய், இறுதி காலத்தில் மனநிலை சரியில்லாமல், பைத்தியமாகி இறந்தாள்.
குடும்பத்திற்கு கொலை பாவம் பற்றியது.
முன்னோர் சொத்திற்கு வாரிசாகி அனுபவிக்கும் இவனுக்கு, அந்த கொலை பாவமும் தொடர்ந்து, இவனை அனுபவிக்கச் செய்து வருகின்றது. தன் கோபத்தை இவன்மூலம் தீர்த்துக் கொள்கின்றது. இவன் இந்த பூமியில், எங்குசென்று வசித்தாலும், வாடகை வீடானாலும், சொந்த வீடானாலும், எந்த வீட்டில் வசித்தாலும், அந்த ஆத்மா நிம்மதியாக வாழவிடாது. பெரும் பாலும் பெண்களை அதிகமாக பாதிக்கச் செய்யும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு, கணவன்- மனைவி பிரச்சினை, நோய் தாக்கம், பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறுவது, பணவிரையம் போன்றவை உண்டாகும். இவனின் குலதெய்வமும், கடவுள் பக்தியும், வேத மந்திர பூஜைகளும், அந்த ஆத்மாவின் செயலை தடுக்கமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளச் சொல். நான் கூறிய அனைத் தும் உண்மையா? தெரியுமா? முன்னோர்கள் வாழ்வில் நடந்து உள்ளதா? என்று கேள்.
அகத்தியர் கூறியதில் எனது பெரிய தாயார் இறப்பு உண்மையா? பொய்யா? என்று எனக் குத் தெரியாது. ஆனால் எங்கள் பூர்வீகத்தை விட்டு வேறு ஊரில் சென்று வசித்தோம். என் தாயாரும் நிம்மதியாக வாழவில்லை. இப்போது நாங்களும் நிம்மதியாக வாழமுடியவில்லை. என் பூர்வீக சொத்துகள் இருந்தும், அதை அனுபவிக்க முடியவில்லை. சொத்துகளிலும் பிரச்சினைதான். எங்கள் கஷ்டம் தீரவும், பெரிய தாயாரின் கோபம் தனியவும், சாந்தியடைய சரியான வழியை அகத்தியர்தான் கூறவேண்டும்.
சொத்தை இழந்த, முதல் மனைவியின், மகன் வயிற்றுப் பேரன், இப்போது உயிருடன்தான் வாழ்ந்துவருகின்றான். பூர்வீக சொத்தில் இவன் விரும்பும் பங்கினை அவனுக்கு கொடுக்கச் சொல். இவன் பெரிய தாயாரின் ஆத்மா, கோபம் தணிந்து, சாந்தியடைய, சில பிரார்த்தனைகளைக் கூறி, அதை எப்படி செய்யவேண்டும் என்று கூறி நான் சொல்லியபடி செய்தால் அந்த ஆத்மா சாந்தியடையும். இல்லையேல் அதன் கோபம் வம்சம் இருக்கும் வரை, வாரிசுகளை தொடர்ந்து பாதிப்பு அடையச் செய்யும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
வம்சத்தில் குடும்ப உறவுகளுக்கு செய்த பாவம், அனுபவித்தவர் இறந்து, உடல் அழிந்து போனாலும், பாதிக்கப்பட்ட ஆத்மா, பழிவாங்கும் நோக்குடன் தான் வாழ்ந்த வீட்டை, வம்ச வாரிசுகளை சுற்றியே அலையும். பாதிப்பு அடையச் செய்யும்.
அகத்தியர் கூறியபடி செய்யுங்கள்; வாழ்வில் நிம்மதி யடைவீர்கள் என்று கூறினேன். அவரும் அப்படியே செய்கின்றேன் என்று கூறிவிட்டு என்னிடம் விடை பெற்றுச் சென்றார்.
உடல் அழிந்தாலும், ஆத்மா அழியாது என்பதை நானும் புரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267