10. மகம்
இது சிம்ம ராசியில் 13.20 டிகிரிவரை உள்ளது. இதன் சார அதிபர் கேது ஆவார்.
உங்கள் பிறந்த ஜாதகத்தில் எந்த லக்னம், எந்த ராசியாக இருப்பினும், ராகுபகவான் சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால், எவ்வித பலன் உண்டாகும். எனின் இது ராகு+கேது எனும் நிலை கொண்டிருக்கும்.
மச்சம்: மக நட்சத்திரத்தில் ராகு இருப்பின், உங்களுக்கு தாடை, உதடுகள் இவற்றில் மச்சம் அமைந்திருக்கும்.
குணம்: ராகு எனும் பாம்பு கிரகம், மகம் எனும் கேது சார நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கும்போது, அது இரு பாம்பு சம்பந்தம் கொண்டதாக அமையும். எனவே இந்த ஜாதகர்கள், எதையும் எளிதில் நம்பமாட்டார்கள். இந்த நம்பிக்கையின்மை, எதிலும் பற்றுதல் இல்லாமல் செய்யும். இந்த பற்றற்ற தன்மை, மன விரக்தியில் தள்ளிவிடும். மன விரக்தி, மனிதர்களிடமிருந்து, விலக்கி வைக்கும். எனவே மக நட்சத்திரத்தில் அமரும் ராகுபகவான், அந்த ஜாதகரை தனிமையாக்கிவிடும். சிலர் மனநல மருத்துவமனையிலும், சிலர் சிறையிலும், சிலர் மந்திரவாதிகள் முன்பும் அமர்ந்திருப்பர்.
நல்ல பலன் மற்றும் தொழில்கள்: இவர்கள் எந்த ஒரு சின்ன விஷயத்தையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதால், எதையும் நம்ப மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்ற இயலாது. இந்த ஆழ்ந்து யோசிக்கும் புத்தி, பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி போன்ற சிக்கலான துறைகளில் மிளரச் செய்யும். ஒற்றர் சம்பந்த துறைகளில் முதன்மை அடையச் செய்யும். சில கிரிமினல் வக்கில்களை உலகுக்கு இனங்காட்டும். சிறைத்துறை அதிகாரிகளாக இருக்கச் செய்யும். மனோத்துவ துறையில் ஈடுபடுத்தும். ஹோமியோபதி மருத்துவராக மாற்றும் சிலரை அறுவை சிகிச்சை நிபுணராக்கும். பத்திரிகையில் கிசுகிசு எனும் ரகசிய செய்திகளை எழுதுபவராக மாற்றும். ஆக, இந்த இரு பாம்புகள் சம்பந்தம், சிம்மம் எனும் சூரியனின் வீட்டில் இடம்பெறும்போது, யாரும் செய்யமுடியாத வேலைகளை செய்ய செய்யும். ராகு, சுப சம்பந்தம் பெற்றிருக்கவேண்டும்.
கெட்ட பலன்கள்: மக நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது, எல்லாரையும்போல் உலகின் போக்கில் செல்ல இயலாமல், பிறழ் தன்மை கொண்டவர்களாக மாறிவிடுவர். இதனால் மனிதர்களின் தொடர்பு அற்றுவிடுவர். இந்நிலை, சிலசமயம், வெகுசிலரின் கட்டுப்பாட்டிற்குள் இவர்களை கொண்டுவந்துவிடும். இதனால் பொஜன நீக்கு போக்கு புரிபடாமல் மன ஊனம் ஆகிவிடுவர். மனமும், புத்தியும் சுருங்கிவிடும். காலப்போக்கில் யோசனைகள் துருப்பிடித்தவர்களாக மாறிவிடுவர். ராகு அசுபர் பிடியில் இருப்பார்.
நோய்: மக நட்சத்திரத்தில் செல்லும் ராகு, ரத்தம் கெட்டுப்போதலையும், ரத்த குழாய் உறைதலையும், முதுகுத் தண்டு பிரச்சினையும் இதனால் உணர்வற்ற மயக்க நிலையையும் கொடுப்பார்.
நாடி ஜோதிடம்: நாடி ஜோதிடம் ராகு, கேதுக்களை பாட்டனார்களாக பாவிக்கிறது. ராகு பெரும் போக்கான செயல்களையும், கேது சன்யாச விஷயத்தையும் குறிப்பிடும். ராகு இஸ்லாமியர்களையும், கேது கிறிஸ்துவர்களையும் குறிப்பதால், பிறமத சம்பந்த விஷயங்கள் நடக்கும் எனலாம்.
பரிகாரம்: நாகூர் ஸ்ரீ நாகராஜ சுவாமியை தரிசிக்கலாம். அருகிலுள்ள கோவிலில் இரு பாம்புகள் இணைந்துள்ள விக்ரகத்துக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்யலாம்.
11. பூரம்
இந்த நட்சத்திரம் சிம்ம ராசியிலுள்ளது. 13.20 டிகிரிமுதல் 26.40 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் சுக்கிரன் ஆவார்.
நீங்கள் எந்த லக்னம், எந்த ராசியில் பிறந்திருப்பினும், உங்கள் ஜாதகத்தில் ராகு சிம்ம ராசியில், பூர நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் உள்ள பலன் ராகு+சுக்கிரன் என்றாகும்.
மச்சம்: உங்கள் வலது கையில் மச்சம் அமைந்திருக்கும்.
குணம்: பூரம் என்பது ஒரு சுக்கிர சார நட்சத்திரம். இங்கு அமரும் ராகு, அழகுணர்ச்சியை தூண்டுவார். ரசனையை மேம்படுத்துவார். வெகு ஜன பழக்கத்துக்கு ஆவலாக இருப்பர். எதிர்பாலாரிடம் பேரன்பு கொள்வர். முக்கியமாக கலை நுணுக்கங்கள் தெரிந்தவராக இருப்பர். நாடகம், சினிமா போன்ற ஆர்வம் மிருந்திருக்கும். இவர்கள் கருப்பே அழகு, காந்தாலே ருசி என்று, எந்த நிறத்தில் மனிதர்கள் இருந்தாலும், அவர்களையும் அழகாக்கி விடுவர். நல்ல காரசார உணவுகளைத் தயாரிப்பதிலும், சாப்பிடுவதிலும் வெகு ஆசை உள்ளவர்கள்.
நல்ல குணம்+தொழில்: சாரநாதர் சுக்கிரன் சுபத்தன்மை பெற்றால் பூர நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது, எந்த விஷயத்தையும் கலை நயத்தோடு, நுணுக்கமாக செய்யும் ஆற்றல் வந்துவிடும். எனவே இவர்கள் கலை சம்பந்தமான தொழில் கொண்டவர்கள். அது அனேகமாக சினிமா, நாடகம் சம்பந்தப்பட்டதாக அமையும். நிறைய ஜாதகர்கள், புகைப்படக் கலையில் முதன்மை பெறுவர். அது சினிமா டைரக்ஷன் அல்லது கலை நிர்வாகம் போன்று அமையும். ராகு ஏறுக்கு மாறான கிரகம். எனவே, அழகான பெண்களை அசிங்கமாக மாற்றியும், சுமாரான ஆட்களை அழகாக படம் பிடித்தும் காட்டுவர். விளையாட்டு துறையில் பிரபலமாவார்கள். இசைக் கருவிகளில் புதுமை செய்வர். பழங்கால இசையை மீட்டெடுப்பர். யாரும் செய்யத் தயங்கும் செயல்களைச் செய்வர். இதன்விளைவாக கின்னஸ் புக்கில் இடம்பிடித்துவிடுவர். சிலர் பழங்கால நகைகளை புதிய டிûஸனில் கொண்டுவருவர். ஆக, ஒரு சுக்கிர கிரகத்தின் காலில், பெரும் போக்கான ராகு செல்லும்போது, கலை சம்பந்தமான வேறுபாடான செயல்களைச் செய்யத் தூண்டுவார். இவர் பிறருக்கு உதவுவதிலும் மிகத் தாராளமாக நடந்து கொள்வார். அதற்கு மனுசன்தான் முக்கியம். பணம் ஒரு விஷயமேயில்லை. பணம் இன்னிக்கு வரும். நாளைக்கு போகும். மனுசன் அப்படியா எனத் தத்துவம் பேசுவர்.
கெட்ட பலன்: சாரநாதர் சுக்கிரன் அசுபத்தன்மை பெற்றால் ராகு பகவான், ஏற்கெனவே ஒரு மாதிரியான கிரகம்தான். அவர் ஜாலி குணமுடைய சுக்கிர சாரத்தில், சிம்ம ராசியில் செல்லும்போது, கேட்கவே வேண்டாம். ரொம்ப, ரொம்ப ஜாலியாக இருப்பர். உலகிலுள்ள அனைத்துவகை மதுவையும் குடித்து பார்ப்பதில் வெகு ஆர்வமிருக்கும். அதேபோல் உலக சினிமாக்களை, அட, அது மொழியே இன்னதென்று புரியாவிட்டாலும், அதையும் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பர். அதுபோல் உணவு திருவிழாக்களுக்கு சென்று, எல்லா நாட்டு சாப்பாட்டையும் ருசித்துப் பார்ப்பர். வகை தொகையின்றி பணத்தை செலவுசெய்வர். பழங்கால இசையை, நவீனப்படுத்துவர். அதுபோல் காதல் விவகாரத்தில், இவர்களை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. மாசத்துக்கு ஒரு காதலியை மாற்றும் அதி பண்பாளர்கள். ஆக எதிலும் ஒரு நிலையாக, வேர் பிடிக்காமல், ரசனை உலகின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பர். கடைசியில் எதுவும் நிலைக்காமல், தனித்து நிற்பர்.
நோய்: இவர்கள் அனேகமாக கண் நோய்களால் அவஸ்தைப்படுவர். ஒரு சிலர் பாலின நோய்கள் வந்து துன்புறுவர். இதய துடிப்பு, ரத்தம் ஓட்டம் தடைப்படுவது எனவும் நோய் வரக்கூடும்.
நாடி ஜோதிடம்: நாடி ஜோதிடம் சுக்கிரனை மனைவியாக குறிப்பிடுகிறது. எனவே இவ்வமைப்பு உள்ளவர்களுக்கு, பிற மத, பிற இன பெண் மனைவியாக வரக்கூடும். சிலர் வெளிமொழி கலை சம்பந்தம் பெறுவர். வெளிநாட்டில் திருமணம் நடக்கும். அல்லது வெளிநாட்டினரோடு திருமணம் நடக்கும். உங்களின் சில பாட்டனார்கள் பல பெண்களின் ரகசிய தொடர்பு கொண்டவராக இருந்திருப்பர்.
பரிகாரம்: பட்டீஸ்வரம் துர்க்கையை தரிசிப்பது நல்லது. அருகிலுள்ள துர்க்கையை, குங்குமம், கற்கண்டுடன், வழிபட்டு விநியோகம் செய்யலாம். துர்க்கைக்கு விளக்கேற்றுவது அதிலும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றுவது நன்று.
12. உத்திரம்
இந்த நட்சத்திரத்தின் 1-ஆம் பாதம் சிம்மத்திலும், 2, 3, 4-ஆம் பாதம் கன்னியிலும் கலந்து பரவியுள்ளது. சிம்மத்தில் 26.40 டிகிரியிலிருந்து, 30.00 டிகிரிவரையும் (146.40 டிகிரிமுதல் 150.00 டிகிரிவரை) உள்ளது. இது கன்னியில் 150.00 டிகிரிமுதல் 160.00 டிகிரிவரை உள்ளது. வெறும் 10.00 டிகிரி மட்டும் கன்னியில் உள்ளது.
ஆக, உத்திரம் நட்சத்திரத்தில் ராகு செல்லும்போது, அது ராகு+சூரியன் எனும் கணக்காகும்.
நீங்கள் எந்த லக்னம், எந்த ராசியாக இருப்பினும், உங்கள் ஜாதகத்தில், உத்திர நட்சத்திரத்தில் ராகு இருப்பின் ஏற்படும் பலன்கள்.
மச்சம்: இடது கையில் மச்சம் தென்படும்.
குணம்: இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு இரண்டுவித குணங்கள் இருக்கும். சிலர், வாழ்வின் தளத்தில் எந்த நிலையில் இருப்பினும், தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பர். ஒரு கலெக்டர் ஆபிஸில், கலெக்டர் அமைதியாக வர, அவரின் ப்யூன் ஆ, ஊ என்று சத்தமிட்டும், மிரட்டிக்கொண்டும் வருவார். கடைசியில் கலெக்டரின் பயம் போய், ப்யூன் பார்த்து எல்லாரும் பயப்படுவார்கள். நீங்கள் நிறைய அலுவலகங்களில் கவனித்திருப்பீர்கள். அந்த மேலதிகாரி அமைதியாக இருக்க, கீழ்நிலை ஊழியர் அல்லது உதவியாளர்கள் படுத்தும்பாடு சொல்லில் அடங்காது. இதன் மறுபுறமாக, சில உயர்ந்த மனிதர்களும் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பர். இதற்கு காரணம் பல இருக்கலாம். வெட்டி பந்தா எதற்கு என நினைக்கலாம். அல்லது வெளியே தெரியாமல் இருப்பதே நல்லது என யோசிக்கலாம். வீண் விளம்பரம் தேவையில்லை என முடிவு எடுக்கலாம். காரணம் ஏதோ ஒன்றாக இருப்பினும், சூரியன்+ராகு ஒரு கிரகண நிலையை தருவதால், இவ்வமைப்பு ஜாதகர்கள். தங்களையும் அறியாமல், திரைக்குப் பின்னே மறைந்துகொள்வர்.
நல்ல பலன்+தொழில்: சூரியன் சாரநாதராக சுபமாக இருப்பின் உத்திரம் நட்சத்திரத்தில் செல்லும் ராகு ஜாதகர்களை அரசியல் வகையில் ஈடுபடச் செய்வார். உத்திரம் என்பது சூரிய சார நட்சத்திரம். இதில் ராகு எனும் எதிர்மறைத் தன்மையுடைய கிரகம் செல்லும்போது, அங்கு அரசியல் எனும் செயல் பிறந்துவிடுகிறது. இவ்வமைப்பு ஜாதகர்கள், அரசியலின் அடி ஆழம் வரை நுணுக்கி ஆராய்ந்து, எந்தவழியில் யார்மூலம், எவரின் காலை வாரிவிட்டு, எவனை ஏறி மிதித்துவிட்டு, எந்த நபரை அரசியல் தளத்திலிருந்து விலக்கிவிட்டு, நான் மட்டும் முன்னேற வழிவகைகளை கச்சிதமாக கண்டுபிடித்துவிடுவர். இவ்வமைப்பு ஜாதகர்கள் அரசியலில் நீண்டகாலம் நிலைத்திருப்பர். அது சரி, இவரை எதிர்ப்பவர் யாராவது வந்தால், அவரை ஒரே மிதியாக மிதித்து தள்ளிவிடுவர். இவர்கள் அரசியல் தவிர, அரசு பணியில் சேர்ந்தாலும், மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவது எப்படி என புத்தகம் போட்டுவிடுவர். அட, பணி மூப்பு அடைந்த பிறகும், அரசுப்பணி தொடர்ந்து வேலை செய்யும் பேராற்றல் பெற்றவர்கள் இவ்வமைப்பினர். வாழ்வின் எந்த தளத்தில் இருப்பினும், அரசு, கோவில் தர்மம் இவை சார்ந்து, அகடவிகடம் செய்து, முதன்மைக்கு வந்துவிடுவர். எதிர்ப்பவர்களை, எதிர்த்து நீக்கிவிட்டு, முன்னேறுவதே இவ்வமைப்பின் நல்ல குணமும், தொழிலும் ஆகும்.
கெட்ட பலன்: உத்திரம் நட்சத்திரத்தில் செல்லும் ராகு, ஒரு கிரகண நிலையை உண்டாக்குவார் என கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வமைப்பில் சிலர், எந்த விஷயம் செய்தாலும், அது அரசை ஏமாற்றும் விதத்தில் அமையும். சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வர். வரி ஏய்ப்பு, மணல் கடத்தல், போதை பொருள் விற்பனை, கள்ள கடத்தல், போலி பணம் அச்சடித்து விநியோகம் செய்தல், அதிக வட்டி தருவதாக ஏமாற்றுவது, இளம் பெண்களை வழிமாறி தவறாக நடத்துவது என சட்டம் தடுக்கும் செயல்களை மட்டுமே செய்வர். இவ்வமைப்பினருக்கு நியாயமாக நடப்பது எப்படி என தெரியவே தெரியாது. அதற்காக சிறையில் களி தின்னுவார்கள் என எண்ண வேண்டாம். சிறையில் இருந்து சிட்டாக பறந்து வெளியேவருவது எனும் வித்தை தெரிந்தவர்கள். சாரநாதர் சூரியன் அசுபத்தன்மை பெற்றிருப்பார்.
நாடி ஜோதிடம்: சூரியனை தந்தை என்றும் ராகுவை பாட்டனார் என்றும் கூறுகிறது. எனவே இவ்வமைப்பு கொண்டவர்களின் தந்தைக்கும் தாத்தாவுக்கும் ஆகவே ஆகாது. சிலரின் பாட்டனார்கள் அகட விகடம் செய்து, பெரிய ஆளாக இருப்பர். சிலரின் தந்தை, வெளியே தெரியாமல் ஒரே இடத்தில், இருப்பர். சிலருக்கு தந்தைக்கும், உங்களுக்கும் எப்போதும் கருத்து வேற்றுமையும், முட்டல் மோதலும் இருந்துகொண்டே இருக்கும். சிலர் கண் பிரச்சினையால் பாதிக்கப்படுவர்.
பரிகாரம்: சங்கரன் கோவில் அல்லது சூரியனார்கோவில் சென்று வழிபடவும். ஞாயிறுதோறும், அருகிலுள்ள நவகிரகத்தில் ராகுவுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
(அடுத்த இதழில் அஸ்தம், சித்திரை, சுவாதி)