content

ராசி மண்டலம் என்பது கிரகங்களின் சுற்றுப் பாதையாகும். இந்த ராசி மண்டலத்தில் பல நட்சத்திரங்கள் உள்ளன. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒளியிலும் உருவத்திலும் சூரியனுக்கு நிகரானவை. சூரிய குடும்பத்தில் சூரியன் மட்டுமே சுய ஒளியில் பிரகாசிக்கும் நட்சத்திரமாகும். மற்ற கிரகங்கள் சூரியனுடைய ஒளியை பிரதிபலிக்கும் நட்சத்திரங்களாகும். நட்சத்திரங்கள் சூரியனைப்போல் சுய ஒளியில் பிரகாசிக்ககூடியவை என்பதால் கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். எனவே கிரக தோஷங்களை மாற்றி அமைக்கும் வலிமை நட்சத்திரங்களுக்கு உண்டு.

Advertisment

ராசி மண்டலத்தில் சந்திரன் பூமியை 27 நாட்களில் ஒருமுறை சுற்றி வருகிறது. மற்ற கிரகங்களிலிருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சுகளை பூமிக்கு பெற்று தரும் உபகிரகமாக சந்திரன் அமைந்துள்ளது. ராசி மண்டலத்தில் சந்திரன் பூமியை சுற்றி வரும்போது அதற்கு நேர் மேலாக இருக்கும் நட்சத்திரக் கூட்டம் 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. அவையே அஸ்வினிமுதல் ரேவதிவரை உள்ள 27 நட்சத்திரங்களாகும். ஒரு நாளில் எந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு கீழ்நேராக சந்திரன் சஞ்சரிக்கின்றாரோ அந்த தினத்தில் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளை சந்திரன் பூமிக்கு பெற்றுத் தரும். அத்தகைய நட்சத்திர கலைவீச்சுகளை நாம் முழுமையாக கிரகித்துக் கொள்வதன்மூலம் கிரக தோஷங்களில் இருந்து நிவாரண பெறலாம். இதை அடிப்படையாகக் கொண்டுதான் நம் நாட்டில் வாழ்ந்த ரிஷிகள் ஜோதிடத்தில் முகூர்த்தம் என்னும் பிரிவை ஏற்படுத்தினார்கள். ஒரு மனிதன் நல்ல முகூர்த்தத்தில் பிறக்காவிட்டாலும் அவன் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை நல்ல முகூர்த்தத்தில் செய்தால் நிச்சயம் அவன் செய்யும் செயல்கள் தடையின்றி நடக்கும். எனவே முகூர்த்தம் என்பது ஜோதிடத்தை பொருத்தவரை கிரக தோஷப் பரிகாரமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. எந்த நட்சத்திரத்தில் என்ன காரியம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை இங்கு குறிப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சாங்கத்திலுள்ள பஞ்ச அங்கங்களான வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றில் நட்சத்திரம் மட்டுமே தனித்தன்மை வாய்ந்தது. குறிப்பாக பரிகாரம் செய்யும்போது நட்சத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதேபோல் பூமியில் ஜனனமாகும் ஒரு குழந்தை தான் பிறக்கும் ஜென்ம நட்சத்திரம்மூலமாக தன் வாழ்நாளில் அனுபவிக்கவேண்டிய அனைத்து இன்ப- துன்பங்களையும் உடல்காரகன் எனும் சந்திரன் நின்ற நட்சத்திரம் மூலமாகவே அனுபவிக்கிறது. எனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஜென்ம நட்சத்திர வழிபாடுகளை கடைபிடித்தால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

அஸ்வினி

Advertisment

27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அஸ்வினியாகும். இந்த நட்சத்திரம் மேஷ ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி கேதுவாகும். இதில் உச்சமடையும் கிரகம் சூரியனாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி. சமநோக்கு நட்சத்திரம். அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள். இந்த நட்சத்திரத்தின் உருவம் ஆகாயத்தில் குதிரையின் முகம் போல் தெரிவதால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது. இதன் அதிபதி கேது ஞானகாரகன் என்பதால் ஆலய வழிபாடு மற்றும் சாஸ்திர பயிற்சியில் ஈடுபடுவதற்கும் ஏற்ற நட்சத்திரமாகும். அன்று தங்கம், வெள்ளி, வைரம், போன்ற ஆபரணங்கள் வாங்கலாம். இந்த நட்சத்திரம் மனித உடலில் தலைப் பகுதியைக் குறிக்கும். செவ்வாயின் மேஷ ராசியில் தலைமுடியைக் குறிக்கும் காரக கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் மொட்டை அடித்துக் கொள்பவர்கள் இந்த நட்சத்திரத்தில் அடித்துக்கொள்வது சிறப்பு. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க, அரைஞான் கயிறு கட்ட, பூணூல் போட திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாகும். வண்டி, வாகனம், ஆடு, மாடு கால்நடைகள் வாங்க, மாட்டு வண்டி வாங்க, வயல்களை உழுவதற்கும், மரம் நடுவதற்கும் ஏற்ற நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரம் நடப்பிலுள்ள நாளில் சிவபெருமானை வழங்கிவிட்டு அரசு சம்பந்தமான காரியங்களில் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும். அரசாங்கத்தில் உயர் பதவியை அடைய விரும்புபவர்கள், அரசியல் செல்வாக்கு பெறவிரும்புபவர்கள், பெயர் புகழ் அடைய விரும்புபவர்கள் தொடர்ந்து ஆறு மாதகாலம் அஸ்வினி நட்சத்திரம் வரும்நாளில் திருவண்ணாமலை சென்று அங்குள்ள அருணாசலேஸ்வரரை வழிபட்டுவந்தால் நினைத்த பதவியை அடையலாம்.

பரிகாரம்: ஜென்ம நட்சத்திரநாளில் குதிரைக்கு கொள்ளு தானம் வழங்க வாழ்க்கை வளமாகும்.

பரணி

27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் பரணி. மேஷ ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் உருவம் ஆகாயத்தில் அடுப்பு, முக்கோணம் போன்று காட்சியளிக்கிறது. இதில் நீசமடையும் கிரகம் சனி. இந்த நட்சத்திரம் முதன்முதலாக புதியதாக கட்டிய வீட்டில் அடுப்பு வைத்து பால் காய்ச்சுவதற்கும், சாந்தி முகூர்த்தத்திற்கும், செங்கல் சூளைகளில் நெருப்பிடுவதற்கும், மாந்திரீக சக்கரம் வரைவதற்கும், மாந்திரீக தகடுகளை பிரதிஷ்டை செய்வதற்கும், ஆயுதப் பிரயோகம் செய்வதற்கும், போர்புரிவதற்கும் உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் சனிபகவான் நீசமடைவதால் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது பரணியில் வேலைக்கு அமர்த்தினால் குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள். தொழிலாளர்களால் பிரச்சினைகள் வரும்போதும் தொழிலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர் போராட்டங்களை முறியடிக்க உகந்த நட்சத்திரம் ஆகும். இதில் திருமணம் செய்வது சிறப்பல்ல. ஆனால் திருமணத் தடைகள் நீங்க வழிபாடு செய்யலாம். பரணி நட்சத்திரத்தன்று காஞ்சிக்கு தொடர்ந்து மூன்று மாதங்கள் சென்று காமாட்சியை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும்.

பரிகாரம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் வலம்புரிச்சங்கில் புனித நீர் தயாரித்து காமாட்சியம்மன் படத்தின்முன்பு வைத்து அருந்த வாழ்க்கை வளம்பெறும்.

கிருத்திகை

இது ராசி மண்டலத்தின் 3-ஆவது நட்சத்திரமாகும். இது சூரியனின் நட்சத்திரமாகும். இதன் முதல் பாதம் செவ்வாயின் மேஷ ராசியிலும் 2, 3, 4-ஆம் பாதங்கள் சுக்கிரனின் வீடான ரிஷபத்திலும் உள்ளது. கிருத்திகை நட்சத்திரம் ஆகாயத்தில் கத்தி அல்லது வாள் போன்ற உருவத்துடன் காட்சிதருவதால் மரம் வெட்ட, மண் தோண்ட, சுரங்கம் தோண்ட சிறந்த நட்சத்திரமாகும். இது உடைபட்ட நட்சத்திரம் என்பதால் சுப காரியம் செய்ய உகந்ததல்ல. ஆனால் பரிகாரங்கள் செய்வதற்கு உடைபட்ட நட்சத்திரங்களை சிறப்புடையது.

இந்த நட்சத்திரம் கடனுக்கு காரக கிரகமான செவ்வாயின் வீட்டிலும் பண வரவிற்கு காரக கிரகமான செவ்வாயின் வீட்டிலும் உள்ளது. மீளமுடியாத கடன் தொல்லையில் இருப்பவர்கள் தொடந்து ஆறு மாதகாலம் கிருத்திகை நட்சத்திரநாளில் முருகனை வழிபட கடன் தொல்லை நிவர்த்தியாகும். பெண் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். திருமணத்தடை இருப்பவர்கள் தொடர்ந்து ஆறு மாதம் கிருத்திகை நட்சத்திரநாளில் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டுவர திருமணத்தடை அகலும். செவ்வாய், சுக்கிரன் வீட்டை இந்த நட்சத்திரம் இணைப்பதால் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் இந்த நட்சத்திரநாளில் விரதமிருந்து முருகனை வழிபட, தம்பதிகள் மீண்டும் இணைத்து வாழ்வார்கள்.

கிருத்திகை நட்சத்திர ரிஷப ராசியில் சந்திரன் உச்சம்பெறுவதால் உயிர்குல பெண்மணிகள் உயர்ந்த பதவியில் இருக்கும் பெண்களைச் சந்திக்க உகந்த நட்சத்திரமாகும்.

கலைத்துறையினர் மற்றும் கவிஞர்கள் கிருத்திகை விரதமிருந்து சென்னை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை வழிபட்டால், நிச்சயமாக அவர்களுடைய எண்ணம் நிறைவேறும்; புகழின் உச்சிக்குச் செல்வார்கள்.

பரிகாரம்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வறிய நிலையுள்ள ஆடு அல்லது மாடு வளர்ப்பவர்களின் தேவையறிந்து இயன்ற உதவி செய்யவேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406

சந்திராஷ்டம தினங்கள்

சிம்மம்: 31-5-2024 இரவு 11.10 மணிமுதல் 3-6-2024 அதிகாலை 1.40 மணிவரை சந்திராஷ்டமம். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். பங்காளியிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது உத்தமம். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

கன்னி: 3-6-2024 அதிகாலை 1.40 மணிமுதல் 5-6-2024 அதிகாலை 2.15 மணிவரை சந்திராஷ்டமம். நெருங்கியவரிடம் குறிப்பாக கணவன்- மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடிய நேரமாகும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், மனநிம்மதி குறைவுகள் உண்டாகும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையோடு செல்வது நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பைரவர் வழிபாடு நன்மை தரும்.

துலாம்: 5-6-2024 அதிகாலை 2.15 மணிமுதல் 7-6-2024 காலை 7.55 மணிவரை சந்திராஷ்டமம். உங்களது முன்கோபத்தால் வீண் பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடிய நேரமென்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. அசையும், அசையா சொத்துவகைகள் வீண்செலவுகள் ஏற்படும். அஷ்டலட்சுமி வழிபாடு கெடுதியைக் குறைக்கும்.

விருச்சிகம்: 7-6-2024 காலை 7.55 மணிமுதல் 9-6-2024 பகல் 2.07 மணிவரை சந்திராஷ்டமம். உங்களுக்கு எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நேரமாகும். நியாயப்படி கிடைக்கவேண்டிய பணவரவுகள்கூட உடன் இருப்பவர்கள் செய்யும் செயல்களால் தடைப்படும். மறைமுக எதிர்ப்புகளால் உங்களின் நிம்மதி குறைவதுடன் எதிலும் ஈடுபாடற்ற நிலை தோன்றும். புதிய முயற்சிகளைத் தள்ளிவைப்பது நல்லது. சரபேஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.