முனைவர் முருகு பாலமுருகன்
46
மகர லக்னம் 7-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.
8-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 8-ஆம் வீட்டைக்கொண்டு ஆயுள், ஆரோக்கியம், உழைக்காமல் எதிர்பாரா தவகையில் ஏற்படும் தன சேர்க்கை, மனைவி (அல்லது கணவர்)வழி உறவினர்களைப் பற்றி அறியலாம்.
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 8-ஆம் அதிபதி சூரியன், லக்னாதிபதி சனிக்கு ஜென்ம பகைவர் ஆவார். 8-ஆம் வீட்டதிபதி சூரியன் என்பதால், 8-ல் சூரியன் ஆட்சிபெறுவதும்; 4-ல் சூரியன் உச்சம்பெறுவதும் நீண்ட ஆயுளைத் தரும். சூரியன்- குரு சேர்க்கை பெற்றோ, பார்வை பெற்றோ இருந்தாலும்; சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும்; சுபர் வீட்டில் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும்.
சூரியன் பலம்பெறுவதுடன், லக்னாதிபதி சனியும் பலமாக அமையப்பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும். சூரியன் பாவகிரகச் சேர்க்கை இல்லாமலிருந்து, 6, 8-ஆம் வீட்டில் பாவிகள் இல்லாமலிருந்தால் நீண்ட ஆயுள் ஏற்படுவது மட்டுமின்றி, நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். சூரியன் பலமிழந்தால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள், தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு, இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.
சூரியன் பாவகிரகச் சேர்க்கை பெற்று பலமிழந் திருந்தால், கிரகங்களின் இயல்பிற்கேற்ப உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். 8-ஆம் அதிபதி சூரியன், புதன் சேர்க்கை பெற்று பலமிழந்தால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், நரம்புத் தளர்ச்சி, உடல் பலவீனம், கால், கை வலிப்பு போன்ற நோய்கள் உண்டாகும். சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்றால் நீர்த் தொடர்புள்ள உடல்நிலை பாதிப்பும்; 8-ல் செவ்வாய் அமைந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் விபத்தால் உடலுறுப்புகளை இழக்கும் நிலை, வெட்டுக் காயம், ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும்.
சுக்கிரன் 8-ல் பலமிழந்தாலும்; சூரியனுக்கு மிக அருகில் அமைந்தாலும் ரகசிய நோய்கள், சர்க்கரை வியாதி உண்டாகும். சனி பலமிழந்தால் உடல் பலவீனம், எலும்பு சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப் புகள் உண்டாகும். ராகு- கேது 8-ல் அமைந்தால் செரிமானக்கோளாறு, ஒவ்வாமை, எதிர்பாராத உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும்.
8-ஆம் வீட்டில் ராகு- கேது அமைந்து; உடன் சூரியன், சனி, செவ்வாய் போன்ற கிரகங் களிருந்தால் தவறான சேர்க்கை களால் விஷத்தால் கண்டம் உண்டாகும். செவ்வாய்- ராகு, செவ்வாய்- சனி, சனி- ராகு சேர்க்கை 8-ல் அமைந்தால் விபத்துகள் ஏற்படும்.
8-ஆம் வீட்டில் பாவிகளின்றி, சுபர் பார்வை 8-ஆம் வீட்டிற்கு ஏற்பட்டால் மனைவிவழி உறவினர்கள்வகையில் சுமுகமான உறவிருக்கும். 8-ஆம் அதிபதியான சூரியன் வலுவுடன் அமைந்து, 4-ஆமிடமும் பலமாக இருந்தால் எதிர்பாராத வகையில் தனசேர்க்கை ஏற்படும்.
9-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் வீட்டைக்கொண்டு தந்தை, செல்வம், செல்வாக்கு வசதிவாய்ப்பு, அயல்நாடு யோகம் போன்றவற்றைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
மகர லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி புதன் ஆட்சி, உச்சம் பெற்றோ; சுக்கிரன், குரு போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்றோ இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும். தந்தைகாரகன் சூரியனும் கேந்திர- திரிகோணங்களில் சுபர் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.
பாவகிரகங்களான சனி, ராகு இருவரும் சூரியன் வீடான சிம்மத்தில் இருப்பதும்; சூரியன் சேர்க்கை பெற்றிருப்பதும்- 9-ல் இருப்பதும் தந்தைக்கு தோஷத்தை ஏற்படுத்தும். இதனால் தந்தையிடமும் தந்தைவழி உறவினர்களிடமும் கருத்து வேறுபாடு உண்டாகும். செவ்வாய், சனி பார்வை சூரியனுக்கு இருப்பது நல்லதல்ல.
சூரியன் தனக்கு நட்பு கிரகமான சந்திரன் மற்றும் செவ்வாய், குரு சேர்க்கை பெற்று பலமாக இருந்தாலும்; புதன்- சுக்கிரன், சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் தந்தைக்கு நீண்ட ஆயுள், தந்தைவழியில் பொருளா தாரரீதியான அனுகூலங்கள் உண்டாகும். 9-ல் பாவிகள் அமைந்து, அதன் தசாபுக்தி நடைபெறுகிறபோது தந்தைக்கு பாதிப்புண்டாகும். சூரியன்- புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும்; புதன்- சுக்கிரன், சனி, செவ்வாய் போன்ற கிரகச்சேர்க்கை பெற்று பலமாக அமைந்தாலும் தந்தைவழியில் அசையா சொத்துகள் உண்டாகும்.
9-ஆம் வீட்டில் புதன் பலம்பெற்று, உடன் சந்திரன், குரு அமைந்தாலும்; குரு பார்வை புதனுக்கு இருந்தாலும் செல்வம், செல்வாக்கு அமைவதுடன், பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். புதன் ஆட்சி, உச்சம் பெற்று, உடன் 12-ஆம் அதிபதி குரு சேர்க்கை பெற்றாலும்; 9-ல் சனி, ராகு, சந்திரன் அமைந்தாலும்; புதன்- சுக்கிரன், குரு சேர்க்கை உண்டானாலும் வெளியூர், வெளிநாடுமூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
10-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத் தைக்கொண்டு தொழில், உத்தியோகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
மகர லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரன். 10-ஆம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் 5-ஆம் வீட்டிற்கும் அதிபதியாகி, லக்னாதிபதி சனிக்கும் நட்பு கிரகமாக விளங்குவது அற்புதமான அமைப்பாகும். 10-ஆம் அதிபதி சுக்கிரன் தனக்கு நட்பு கிரகங்களான புதன், சனி சேர்க்கை பெற்று, உடன் ராகுவும் இணைந் திருந்தால் செல்வம், செல்வாக்கு, தொழில்ரீதியான உயர்வுகள், பெயர், புகழ் போன்ற யாவும் சிறப்பாக அமைந்து, சுகவாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும். சனி, புதன், சுக்கிரன் சேர்க் கையோ, சுக்கிரன், புதன் இணைந்து குரு பார் வையோ பெற்று அமைந்து; சுக்கிரன், புதன், சனி போன்றவற்றில் ஏதாவது ஒரு கிரகத்தின் தசை நடந்தால், சொந்தமாகத் தொழில்செய்து மிகச்சிறந்த செல்வந்தராக வாழக்கூடிய யோகம் உண்டாகும். பொருளா தாரரீதியான உயர்வும், சமுதாயத்தில் கௌரவமான நிலையும் கிட்டும்.
அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்குக் காரகன் சூரியன். மகர லக்னத் திற்கு 10-ஆம் வீடான துலாத்தில் சூரியன் நீசம் பெறுவதால், அரசுத்துறையை விட தனியார்துறைகளிலும், சுயதொழில்களிலும் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே அதிகமாக இருக்கும். 10-ல் சூரியன் நீசம் பெற்று, உடன் சுக்கிரன் அமைந்து ஆட்சிபெற்று நீசபங்க ராஜயோகம் உண்டானால், அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் ஓரளவுக்கு அனுகூலம் அடையமுடியும்.
சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று, உடன் சுக்கிரனும் 10-ல் இருந்தால் அரசுப் பணி அமையக்கூடிய வாய்ப்புகள் அமையும். சனி- புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று 10-ல் அமைந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள்செய்து அபரிமித மான செல்வச்சேர்க்கை பெறக்கூடிய அமைப்புண்டாகும்.
சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றால் கூட்டுத்தொழில், கலை, இசை போன்றவற்றின்மூலமாக அனுகூலங்கள்; சுக்கிரன், சந்திரனுடன் புதனும் குருவும் சேர்க்கை பெற்றால் வெளியூர், வெளிநாடுகள்மூலம் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு; சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்றால் கணக்கு, கம்ப் யூட்டர் சம்பந்தப்பட்ட துறை, எழுத்துத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் யோகம்; சுக்கிரன், குரு சேர்க்கை பெற்றால் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய துறைகளில் உயர்வான அந்தஸ்து அமையும்.
சுக்கிரன் வலுவாக அமைந்தால் ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப் படுத்தும் பொருட்கள் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மகர லக்னத்திற்கு 10-ல் மக்கள் செல்வாக்குக் காரகனாகிய சனி உச்சம் பெற்று, சூரியனும் செவ்வாயும் பலமாக அமைந்திருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர்பதவிகள் தேடிவரும்.
சந்திரன்- செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று 10-ல் இருந்தால் மருத்துவத்துறையில் சாதனை செய்யமுடியும். சந்திரன், ராகு சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து, ரசாயனத் துறையில் வல்லுநராக முடியும். 10-ஆம் வீட்டில் குரு, புதன் இணைந்திருந்தால் வாக்கு, பேச்சால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, வக்கீல் தொழில் அமையும்.
சுக்கிரன் வலுவிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால், சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை; சுக்கிரன் பலமிழந்து செவ்வாய்- ராகு, கேது சேர்க்கை பெற்றால் அடிமைத்தொழில் செய்யும் நிலை; சுக்கிரன் பலமிழந்து சனி, செவ்வாய், ராகு, கேது சேர்க்கை பெற்றால் தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி, பொய் சொல்லக்கூடிய சூழ்நிலையால் தொழிலில் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும். 10-ல் பாவிகள் அமைந்து சுபர் பார்வையின்றியிருந்தால் பொய், பித்தலாட்டம் செய்து சம்பாதிக்கக்கூடிய அவலநிலை உண்டாகும்.
11-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 11-ஆம் வீட்டைக் கொண்டு ஒருவருக்கு ஏற்படும் லாபங்கள், மூத்த உடன்பிறப்பு, நட்பு போன்றவற்றைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
மகர லக்னம் சர லக்னம் என்பதால், 11-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். 11-ஆம் அதிபதி சகோதர காரகன் செவ்வாய் என்பதால், பெரும்பாலும் மூத்த சகோதரம் ஏற்படுவதில்லை. செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று, குரு போன்ற சுபகிரகங்களின் பார்வை செவ்வாய்க்கும், 11-ஆம் வீட்டிற்கும் இருந்து, செவ்வாய்- சூரியன் குரு போன்ற நட்பு கிரகச் சேர்க்கை பெற்று வலுவாக அமைந்தால் மூத்த உடன்பிறப்பு அமைவது மட்டுமல்லாமல், அவர்கள்வழியில் பொருளாதாரரீதியான அனுகூலங்கள் உண்டாகும். 11-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் அமைந்தாலும்; செவ்வாய்- சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும் மூத்த சகோதரி யோகம் ஏற்படும்.
சனி, ராகு போன்ற பாவிகள் செவ்வாய் சேர்க்கை பெற்றாலும்; 11-ஆம் வீட்டில் அமையப்பெற்றாலும் மூத்த சகோதர பாக்கியம் இருக்காது. அப்படியிருந்தாலும் பிரச்சினைகள் ஏற்படும்.
மகர லக்னத்திற்கு 11-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்ற காரணத்தால், மற்றவர்களிடம் பட்டும்படாமல் இருக்கக்கூடிய அமைப்பு, அதிக நண்பர்கள் இல்லாத அமைப்பு உண்டாகும்.
லாப ஸ்தானாதிபதியான செவ்வாய் திரிகோண ஸ்தானம் என வர்ணிக்கப்படக் கூடிய 1, 5, 9-ல் அமைவதும்; அல்லது 3, 6, 8, 12-ல் மறைந்திருப்பதும்; சூரியன், குரு சேர்க்கை பெற்றிருப்பதும்; மகர லக்னத்திற்கு யோகக் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும்; பாக்கியாதிபதி புதன் சேர்க்கை பெற்றாலும் பொருளாதாரம் மிகச்சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, தாராள தனவரவுகள் ஏற்படக்கூடிய அமைப்பு, எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். செவ்வாய்- சனி, ராகு சேர்க்கை பெற்று பலமிழந்தால், எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் லாபங்களை எதிர்பார்க்க முடியாது.
12-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 12-ம் வீட்டைக் கொண்டு ஒருவருக்கு ஏற்படக்கூடிய விரயம், அயன, சயன, போகத்தைப் பற்றியும், வெளிநாட்டுப் பயணங்கள் பற்றியும் தெளிவாக அறியலாம்.
மகர லக்னத்திற்கு 12-ஆம் வீடு பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு வீடு என்பதால், குரு கேந்திர- திரிகோணங்களில் அமைந்து, சுபகிரக, நட்பு கிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் விரயங்கள் சுபவிரயங்களாக இருக்கும்.
குரு பலமிழந்து, 12-ல் சனி, ராகு போன்ற பாவிகள் அமைந்தாலும்; பாவிகள் பார்வை 12-ஆம் வீட்டிற்கு இருந்தாலும்; சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று 12-ல் இருந்தாலும் தவறான செயல்கள்மூலம் தனத்தை இழக்கக்கூடிய அமைப்புண்டாகும். 12-ல் பாவிகள் இல்லாமலிருப்பது மிகவும் நல்லது.
12-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால், ஏற்படக்கூடிய விரயங்கள் சுபவிரயங்களாக இருக்கும் அமைப்பு, கட்டில் சுகவாழ்வில் மகிழ்ச்சி, ஒற்றுமை உண்டாகும்.
12-ஆம் அதிபதியான குரு, புதன் சேர்க்கை பெற்று 9, 12-ல் இருந்தாலும்; குரு, புதன் சேர்க்கையுடன் சுக்கிரன் இருந்தாலும்; குரு- புதன், குரு- சுக்கிரன் பரிவர்த்தனை ஏற்பட்டாலும் வெளியூர், வெளிநாடுமூலமாக அனுகூலங்கள் உண்டாகும். குரு, புதன், சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டால் வெளிநாட்டில் தொழில் செய்யக்கூடிய அமைப்பு, வெளிநாடு தொடர்புடைய தொழில் உண்டாகும். சனி, ராகு, சுக்கிரன் போன்ற கிரகங்கள் 12-ல் அமைந்தாலும்; குரு சேர்க்கை பெற்று 6, 9, 12-ல் அமைந்தாலும் வெளியூர், வெளிநாடுகள்மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
(அடுத்த இதழில் கும்ப லக்னம்)
செல்: 72001 63001