சென்னை அலுவலகத்திற்கு ஜீவநாடியில் பலனறிய ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். 

Advertisment

அவர்களை அமரவைத்து, "என்ன   காரியமாகப் பலன் தெரிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன்.

"ஐயா, என் உடன்பிறந்த சகோதரர்கள் மூன்று பேர், சகோதரிகள் மூன்று பேர். என் முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீக சொத்துக்கள், மேலும் என் தகப்பனார் சம்பாதித்து வைத்த சொத்து, வீடு, நிலம், தொழில் என நிறையவே உண்டு.  எனது தந்தை இறந்துவிட்டார்.  அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.

குடும்ப பூர்வீக சொத்துகள் இவ்வளவு இருந்தும், எனக்கு முறையாகத் தரவேண்டிய பாகச் சொத்துகளை எனக்கு பிரித்துக் கொடுக்க மறுத்து வருகின்றார்கள். நான் சரியான தொழில் இல்லாமல், வருமானத்திற்கு வழியில்லாமல், சிரமத்துடன் வாழ்ந்துவருகின்றேன். எனது தாய் மற்றும் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், குடும்ப உறவுகள் என அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள்.  ஆனால், நானும், என் குடும்பமும் தனித்து வாழ்கின்றோம்.  என்னையும், என் மனைவி, குழந்தைகளையும் அவர்கள் உறவாகவே நினைப்பது இல்லை. 

Advertisment

எங்களுக்காக பரிந்து பேசி பாகச் சொத்துகளை எனக்கு வாங்கிக்கொடுக்க உறவினர்களும் இல்லை. என் குடும்பத்தாரும், உறவுகளும் எங்களை எதிரிபோல் எண்ணி, ஒதுக்கியே வைத்துள்ளார்கள்.  இந்த நிலைக்கு காரணம் என்ன? எனக்கு முறையாகக் கிடைக்கவேண்டிய பாகச் சொத்துகள் கிடைக்குமா?  தருவார்களா ‌என்று அறிந்துகொள்ளவே வந்தேன். 

அகத்தியர்தான் நல்ல வழிகாட்ட வேண்டும்'' என்றார்.

அகத்தியரை வணங்கி, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். 

ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

அவன் தன் முன்பிறவியில், மூத்த தலைமகனாகப் பிறந்து வாழ்ந்தான். 

அந்த பிறவியில், இவனுக்கு ஒரு தம்பியும், இரண்டு தங்கைகளும் இருந்தார்கள். மூத்தவன் என்பதால், தந்தை- தாயுடன் இணைந்து குடும்ப பொறுப்புகளைச் செய்துவந்தான். தாயும், தந்தையும் இவனை முழுவதுமாக நம்பினார்கள். ஆனால் இவன் பொதுவாக உள்ள சொத்து, நிலம், வீடு என அனைத்தையும் தன் பெயரிலேயே மாற்றிக்கொண்டான்.

 இவனுக்கு திருமணம் முடிந்த சிறிது காலத்திலேயே இந்த சொத்துகளை எல்லாம் நான்தான் சம்பாதித்தேன், உங்களுக்கு பங்கு தரமாட்டேன் என்று கூறி பெற்ற தாய்- தந்தை, உடன்பிறந்த தம்பி, தங்கைகளையும் வீட்டைவிட்டு விரட்டிவிட்டு, இவனும் இவன் மனைவி, குழந்தைகள் மட்டுமே அனுபவித்து சுகமாக வாழ்ந்தார்கள்.

Advertisment

இவனின் இந்த செயலால், சொத்துகளையும், வாழ்ந்த வீட்டையும்‌, இழந்த அவர்கள் உண்ண உணவின்றி, வசிக்க இடமின்றி, சிரமத்துடன் வாழ்ந்தார்கள். கஷ்டத்துடன் வாழ்ந்த நிலையில் இவனின் தாய்- தந்தை, சகோதர- சகோதரிகள் மனம் வெறுத்துவிட்ட சாபம், சகோதர சாபம், பங்காளி சாபம், இப்பிறவியில் செயல்பட்டு அதற்குண்டான தண்டனையாக, இப்பிறவியில், இந்த நிலையைத் தந்து அனுபவிக்கச் செய்கின்றது.

குடும்ப உறவுகளும், ஊரில் பெரிய மனிதர்களும் எனக்காகப் பரிந்து பேசமாட்டேன் என்கின்றார்கள் என்று கூறினான். முன் பிறவியில் இவன் தன் குடும்பத்தாருக்குச் செய்த பாவத்தை சுட்டிக்காட்டி, அவர்கள் படும் கஷ்ட நிலையை உறவுகளும், பெரியவர்களும் இவனிடம் கூறியபோது அவர்கள் வாழ்க்கைக்கு, கொஞ்சமாவது சொத்து, நிலங்களைக்கொடு என்று கூறியபோது, இவன் அவர்கள் பேச்சைக்கேட்டு மதித்து எதுவும் தரவில்லை.  அதனால் இந்த பிறவியில் இவனுக்காகப் பேசவோ, உதவி செய்யவோ யாரும் முன்வரவில்லை.

இந்த சகோதர சாபப் பாதிப்பு நீங்கி, வருங்கால வாழ்க்கை நல்ல விதமாக அமைய சரியான நிவர்த்தி முறைகளைக் கூறுகின்றேன்.  அதனை முறையாகக் கடை பிடித்து வாழ்ந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை செழிப்பாக அமையும் என்றார்.

அவன் மனைவி சாப நிவர்த்தி வழிமுறைகள் என்று அகத்தியர் கூறுகின்றார். இதுவரை கோவில் வழிபாடு, விரதம், பூஜை, தானம், தர்மம் என்று நிறையச் செய்து விட்டோம், அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இனி பரிகாரம் என்று செலவுசெய்ய பணமும் இல்லை. மேலும் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் வரை இவரின் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்தார்கள்.  திருமணம் முடிந்தபின்பு பாசத்துடன் வாழ்ந்தார்கள். திருமணத்திற்குப்பின்பு வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள்.  இதற்கும் அகத்தியர்தான் காரணம் கூறவேண்டும்.

மகளே ஒருவரின் கர்மவினை, பாவ- சாப பாதிப்புகள், அவர்களின் திருமணத்திற்குப் பின்தான் செயல்படத் தொடங்கும்.  இவன் தன் திருமணத்திற்குப்பின்பு மனைவி வந்தபின்புதான், குடும்பத்தினருக்கு பாவம் செய்து அவர்களை வீட்டைவிட்டு வெளியேற் றினான். அந்த நிகழ்வுதான் இப்போது மனைவி வந்தபின்பு உங்களை வெளியேற்றி தனித்துவிடச் செய்கின்றது.  ஒவ்வொரு மணிதனுக்கும், திருமணத்திற்குமுன்பு ஒரு வாழ்க்கையும், திருமணத்திற்குப்பின்பு வேறு ஒரு வாழ்க்கையும், குழந்தைகள் பிறந்தபின்பு வாழ்வில் ஒரு வித மாற்றமும் உண்டாகும் என்பதை புரிந்துகொள்.

 மகளே, இந்த அகத்தியன், உன் வாழ்வில் சிரமங்கள் தீர வழி காட்டுவான் என்று நம்பி வந்துள்ளாய். உன் சிரமம், கஷ்டம் தீரத்தான் வழிசொல்ல வேண்டுமே தவிர, பரிகாரம் செய்யச் சொல்வது, கடவுளை வணங்கச் சொல்வது என் வேலையல்ல. ஒருவரின் பூர்வஜென்ம பாவ- சாபப் பதிவுகள், பூஜை, யாகம், சாந்தி, தானம், தர்மம் செய்வதால், கடவுள் வழிபாட்டினால் தீராது என்று கூறிவிட்டு, அவர்களின் சகோதர- பங்காளி சாபம் நிவர்த்தியாகவும், வருங்கால வாழ்க்கை செழிப்புடன் அமைய, நடைமுறை வாழ்வில் கடைபிடித்து வாழவேண்டிய வழிமுறைகளையும், சில பிரார்த்தனை களையும் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

செல்: 99441 13267