கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் குறிப்பாகக் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அவற்றில் பிறகட்சியினரால் பொதுத்தளத்தில் திரும்பத் திரும்ப வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தி.மு.க. வாரிசு கட்சி என்பதும் ஈழப் போரில் தி.மு.க. வின் செயல்பாடுகள் மீது வைக்கப்பட்டும் விமர்சனங்களும். அரை நூற்றாண்டுகளுக்கு மேல் பலரும் பல்வேறு வகைகளில் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்த போதிலும், தொடக்கக்காலத்திலேயே இவற்றிற்குக் கலைஞர் அளித்த பதில்கள் ஆழமானவை. அவ்வாறு 26.11.1992 தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளியான கலைஞர் பிரத்தியேக நேர்காணல், பின்வருமாறு...

Exclusive interview with Kalaignar

Advertisment

ஸ்டாலின் Vs வை.கோ விவகாரம்!

Advertisment

தமிழகம் நாளுக்கு நாள் இருட்டில் வாழ்கிறது. வெள்ளத்தின் கோரம் மின்சாரத்தை அறுத்து விட்டது போல இங்கே, வெற்று ஆடம்பரங்கள் எதிர்கால வெளிச்சத்தையே அறுத்து விட்டது. ஜனநாயக சூழலுக்கு எதிர்க்கட்சிகள் அவசியம். இங்கே சட்டமன்றத்தில் இல்லாவிட்டாலும், மக்கள் மன்றத்திலாவது எதிர்க்கட்சிகள் வலுப்பெற வேண்டாமா? பெரிய எதிர்க்கட்சி தி.மு.க.வில் ஒற்றுமையில்லை. டெல்லிக்கு காவடி யார் வேண்டுமானாலும் தூக்குவார்கள் என்று அவநம்பிக்கை வாதங்கள் விவாதிக்கப்படுகின்றன.

இந்தநேரத்தில் நக்கீரன் உள்ளதை உள்ளபடியே நேரிடையாக வெளிப்படையாகவே கேட்டுவிட முடிவெடுத்தது. அதுதான் தி.மு.க. தலைவருடன் நமது சந்திப்பு. நமது இடக்கு மடக்கு கேள்விகளுக்கெல்லாம் கலைஞர் முகஞ்சுளிக்காமல் அளித்த சிறப்பு பேட்டி;

நக்கீரன் ;

எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் அவர் மேல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினீர்கள். எஸ்.டி.எஸ். ஊர்வலமாகப் போய் கவர்னரிடம் மனுக் கொடுத்தார். ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆர். மேல் ஊழல் புகாரை டெல்லிக்கு அனுப்பினார். ஆனால்,நீங்கள் முதல்வரானதும் அ.தி.மு.க. மந்திரிகள் யார் மீதும் வழக்கோ, விசாரணைக் கமிஷனோ போடவில்லையே ஏன்? உங்கள் மேல் ஜெயலலிதா அமைத்திருக்கிற விசாரணைக் கமிஷன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலைஞர் ;

எம்.ஜி.ஆர்.மேலே பல ஊழல் குற்றச்சாட்டுகளை, எஸ்.டி.எஸ்., ஜெயலலிதா போன்றவர்கள் எழுத்து மூலமாகவே டெல்லிக்கு அனுப்பினார்கள். நாங்க வி.பி.சிங்.ஆட்சிக் காலத்தில் அதையெல்லாம் வாங்கி விசாரணைக்கமிசன்போட்டிருக்க முடியும். அதற்கு மாறாக கடந்த ஆட்சியின் தவறுகளை சட்டசபைல எடுத்துச் சொன்னோம். அப்படிச் சொல்லும்போது கூட இதுக்காக நான் யாரையும் பழி வாங்க மாட்டேன். அது நாகரிகமல்ல என்றும் கூறினேன்.இது நான் அண்ணாவிடம் கற்ற பாடம். அன்றைக்கு ஹண்டே, பக்தவத்சலம் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி அவர் மீது விசாரணைக் கமிஷன் வைக்கணும்னாரு. அதுக்கு அண்ணா, ‘‘இப்ப இங்கே விசாரிச்சதே போதும், தனியா விசாரணைக் கமிஷன் வச்சு பழி வாங்க வேண்டாம்’’ என்று சொல்லி விட்டார். அதேமுறையைப் பின்பற்றித்தான் நானும் நாகரிகமாக நடந்து கொண்டேன். ஆனா,ஜெயலலிதா என் மேல் விசாரணைக் கமிஷன் வச்சுருக்காங்க.

வாழப்பாடிக்கு என் மேல என்ன கோபம்னா, அவர் பல்லவா அறக்கட்டளை மூலம் கல்லூரி ஒன்று ஆரம்பிச்சு, அதுல தவறான முறையில எட்டு,ஒன்பது லட்சம் ரூபாய் எடுத்துக்கிட்டாரு. அவரும் டெக்னிகல் எஜுகேசன் டைரக்டரும் சேர்ந்து கையெழுத்து போட்டுத்தான் பணம் எடுக்கணும். ஆனா வாழப்பாடி அவருக்குத் தெரியாம அந்த பணத்தை எடுத்துக்கிட்டாரு. அதுக்காக தி.மு.க.ஆட்சி காலத்துல அவரு மேல நடவடிக்கை எடுக்கப்பட்டது.அந்தக்கோபத்துல அவரு கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கமிசன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அரசியல் பழி வாங்கும் உணர்ச்சிதான் காரணம்.

அதுதவிர அவர் கொடுத்த புகார்ல எந்த உண்மையும் கிடையாது. ஆனா நாங்க இந்த ஆட்சிமீது கூறும் குற்றச்சாட்டுகள் அப்படி அல்ல. பீர் தொழிற்சாலை தனியாருக்கு கொடுக்கப்பட்டதில் ஊழல். நான்கு கோடி ரூபாய் டான்சி நிலத்தை இரண்டுகோடி ரூபாய்க்கு வாங்கியது அதை விடக் குற்றம். ஸ்பிக்ல அரசுக்கு இருபத்தெட்டு கோடி ரூபாய் நஷ்டம் வர்ற அளவுக்கு ஜெயலலிதா நடந்துக்கிட்டுருக்காங்க! அதை ஏற்றுக்கொள்ளாத சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிதான் பழிவாங்கப்பட்டாங்க. இப்படி ஆதாரப்பூர்வமாக பல குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கோம். இப்படிப்பட்ட ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் என் மீதோ என் குடும்பத்தினர் மீதோ போடப்பட்டுள்ள விசாரணைக் கமிசன்ல கூறப்படவில்லை. தி.மு.க.வைக் களங்கப்படுத்தவே இந்த விசாரணைக் கமிஷன் போடப்பட்டுள்ளது.

நக்கீரன் ;

உங்கள் ஆட்சிக்காலத்தில் ரகுமான்கான் சிறுசேமிப்புத் துறைத்தலைவராக இருந்தார். அதேசமயத்தில் எம்.எல்.ஏவாகவும் இருந்தார். இரண்டு பதவியிலேயும் ஒரேசமயத்தில் இருக்கக் கூடாதுன்னு இன்றைய துணை சபாநாயகர் பொன்னுச்சாமி அன்றைக்கு ஆட்சேபனை தெரிவித்தார். எம்.எல்.ஏ.பதவியை ரத்து செய்யச்சொல்லி கவர்னரிடம் மனுவும் கொடுத்தார். அன்றைய கவர்னர் அலெக்ஸ்சாண்டர் அதைத் தேர்தல் கமிசனுக்கு அனுப்பாமல் தலைமைச் செயலாளரை விட்டு பதில் சொல்லச் சொன்னார். அன்று உங்களுக்கு ஒரு நியதி. இன்று ஜெயலலிதாவுக்கு ஒரு நியதியா?அதே முறைதான் இன்றும் பின்பற்றப்படும் என எழுந்துள்ள விவாதம் பற்றி?

கலைஞர் ;

எம்.ஜி.ஆர்.கூட எம்.எல்.ஏ வா இருந்தப்ப சிறுசேமிப்புத் துறைத் தலைவரா இருந்தாரு. எஸ்.எஸ்.ஆரும் அப்படி இருந்தாரு.அதுக்கெல்லாம் சட்டசபையில திருத்தம் கொண்டு வந்துட்டோம். அது வேறு. இது வேறு. அரசுத் துறையில்காண்ட்ராக்ட் எடுத்து அதன் மூலம் பணம் ஆதாயம் பெரும் விஷயம் இது.

நக்கீரன் ;

நீங்கள் கவர்னரிடம் தந்த ஊழல் புகார்களுக்கு அவர் தந்துள்ள பதில் உங்களை அதிர்ச்சியடையச் செய்ததா?

கலைஞர் ;

ஆமாம். ஆனால், இது அரசியல் அடிப்படையில் நடந்துள்ளது. ஜெயலலிதா டெல்லியில் அத்வானியைச் சந்தித்தவுடன் இரண்டு மாத காலம் பதில் எழுதாமல் இருந்த கவர்னர் மறுநாளே இப்படியொரு பதிலை எழுதியுள்ளார். எப்படியோ, எங்களை நீதிமன்றத்துக்குச் சென்றிட கவர்னரின் பதில் வழிவகுத்துள்ளது.

நக்கீரன் ;

மத்திய உள்துறை அமைச்சர் சவான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்லா இருக்குன்னு சொல்றார். ஆனா, இங்க உள்ள காங்கிரசில் ஒரு தரப்பினர் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுன்னு சொல்றங்க. இது என்ன அரசியல்னு?

கலைஞர் ;

அதான் எனக்கும் புரியல. ஆனா, கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லைங்கிற மாதிரி தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் ரொம்ப நாளாச்சு. தினமும் ஐந்தாறு இடத்துலயாவது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறின்னு நடந்துகிட்டே இருக்கு. உங்க பத்திரிகையை தமிழ்நாடு முழுவதும் ஆளும் கட்சிக்காரங்க பறிச்சு எரிச்சாங்க. உங்க பிரிண்டர் பெரியவர் கணேசன் கூட போலீஸ் சித்திரவதையில இறந்து போனார். தராசு பத்திரிகையில படுகொலை நடந்தது. இதுல வேணுமின்னே ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி மேல பழியைப் போட்டாங்க. இப்ப அந்த பத்திரிகை உரிமையாளரே, ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு தொடர்பில்ல. ஒரு அமைச்சரோட கையால்தான் காரணம்னு அறிக்கைவிட்டு கோர்ட்லயும் சொன்னாரு.

அமைச்சரோட கையால் ஜெயலலிதாவுக்கு பேனர்லாம் வச்சவர்ங்கிறதும் ப்ரூப் ஆயிடுச்சு. ஐ.ஏ.எஸ்.அதிகாரிய ஜெயில்ல வச்சு அவர் கண்டிசன் பெயில்ல போறப்ப நெல்லையில தங்கணும்கிற கண்டிசனும் விதிக்கப்பட்டது.ஆனா,கொலையில நேரடியா ஈடுபட்ட குற்றவாளிகள் அமைச்சரோட கார்லயும், அமைச்சரோட வீட்லயும்தான் இருந்தாங்க. இதிலிருந்து சட்டம் ஒழுங்கு ஒருதலைப் பட்சமா இருக்குங்கறது தெரியவருது. போலீசோட நடவடிக்கைய எடுத்துக்கிட்டா, கே.பி.ராமலிங்கத்தை கைதுபண்ணி மூணு நாலு அண்டர்வேரோட ஜெயிலுக்குள்ள வச்சவங்க,பெரிய சாராய மன்னனான ஈஸ்வரமூர்த்திய கைது பண்ணின உடன ஜாமீன்ல விட்டாங்க.அவரை கைது பண்ணிய போலீஸ் அதிகாரியையும் உடனே டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க.

லாக்கப் கொலைகள், பத்மினி கற்பழிப்பு, வாச்சாத்தியில பதினெட்டு பெண்கள் வனத்துறை அதிகாரிகளாலேயும் போலீசாராலேயுமே கற்பழிக்கப்பட்டு இருக்காங்க. இது மூடி மறைக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போறதுங்கறதை விட அப்படி கெட்டுப் போகும் நேரத்தில் அதை மறைத்து அதில் பாரபட்சமாக நடந்து கொள்வதென்பது அதைவிட பயங்கரமானது.

நக்கீரன் ;

இந்தக் குற்றச்சாட்டுகளை நீங்கள்தானே கூறுகிறீர்கள்.சவான் சட்டம் ஒழுங்கு... திருப்தியாக உள்ளது என்றுதானே கூறுகிறார்?

கலைஞர் ;

ரெட்டை வேசம் போடுறதுல காங்கிரஸ் கெட்டிக்காரக் கட்சி. இன்றைக்கு திடீர்னு பாரதிய ஜனதா மேலே சவானுக்குப் பயம். அதுக்காக இப்படிப் பேசி இருக்கலாம். ஒரு உள்துறை அமைச்சர்ங்கிற முறையில சட்டம் ஒழுங்குகெட்டுப்போனது சவானுக்கு நல்லா தெரியும். ஆனாலும்,அரசியல் ஆதாயத்துக்காக இப்படிப் பேசியிருக்கிறார்.

நக்கீரன் ;

தி.மு.க.வில் நீங்கள் இடதுசாரி, புரட்சிகர மனப்பான்மை கொண்டவர் என்ற கருத்து உண்டு. இளம் வயதில் நங்கவரம் என்ற ஊரில் விவசாயிகளுக்காகப் போராடினீர்கள். ஆனால்,இப்பொழுது புலிகள் விசயத்தில் தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டோம் என்கிறீர்கள்.உங்களை ஏதோ ஒன்று தடுக்கிறது! அந்த ஏதோ ஒன்று பற்றி?

கலைஞர் ;

அந்த ஏதோ ஒண்ணு என்னன்னா ‘‘புலிகள் விசயத்தில் நான் நிறைய ஏமாற்றம் அடைஞ்சிருக்கேன். தமிழ் ஈழ விடுதலை வேணும்னா ஈழத்தில் மக்கள் அமைதியா சுகமா இருக்கணும். நீங்க எல்லாம் ஒண்ணா இருக்கணும்கறதுதான் நான் வச்ச கோரிக்கை. அத அவங்க ஏத்துக்கலை. ராஜீவ் காலத்துல-வி.பி.சிங் காலத்துல ஈழ போராளிகளை ஒண்ணா வச்சு பேசும்போதுகூட ஒவ்வொருத்தரும் மற்றவங்களை குறை கூறினார்களே ஒழிய, அவங்க ஒற்றுமையாகும் வழி தெரியலை. குறிப்பாக எல்.டி.டி.ஈ ஒற்றுமையா செயல்பட மறுத்துட்டதால பேச்சுவார்த்தை முறிஞ்சி போச்சு. எல்லாத்துக்கும் உச்சகட்டமா ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில கொலை செய்யப்பட்ட பிறகு அவங்க தமிழ்நாட்டிலிருந்த பெரும் ஆதரவை இழந்துட்டாங்க. அவுங்க மேல வச்சிருந்த நம்பிக்கையெல்லாம் ஏமாற்றமா போயிடுச்சு.

நக்கீரன் ;

அதனால்தான்,தீவிரவாதக் கருத்துகளை மனதிலிருந்து இழந்துட்டீங்கன்னு வச்சுக்கலாமா?

கலைஞர் ;

எல்.டி.டி.ஈ மேலயோ இதர போராளி இயக்கத்துக்கு மேலயோ இருக்கறதை விட இலங்கைத் தமிழர் நலவால்வுமேல் எனக்கு அதிக அக்கறை உண்டு.

நக்கீரன் ;

தமிழகத்தை விட்டே காங்கிரசை 1967 இல் தி.மு.க. விரட்டியடித்தது. பிறகு அதே காங்கிரசுடன் கூட்டணி அமைத்தீர்கள். 1976 இல் அவர்கள்தான் உங்களை டிஸ்மிஸ் செய்தார்கள். இடையில் உங்களிடமிருந்து எம்.ஜி.ஆரைக் காங்கிரஸ் பிரித்தது.எமெர்ஜென்சி கொடுமைகள் உங்கள் கட்சிக்கும் குடும்பத்துக்கும் உண்டாகின. இந்திராகாந்தியை சிக்மகளூரில் எதிர்த்து அங்கேயே போய் பிரச்சாரம் செய்தீர்கள். மீண்டும் இந்திராவுடன் 80 இல் கூட்டணி அமைத்தீர்கள். எம்.ஜி.ஆர்.ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்தீர்கள். ஆனால், அசெம்ப்ளி தேர்தலில் உண்டான குழப்பத்தில் எம்,ஜி,ஆர்.வென்றார். இப்படி,மாறி மாறி திராவிட கட்சிகளை காங்கிரஸ் கையாண்டு வந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க இனிமேலாவது இ.காங்கிரஸ் தேர்தல் தோழமையை தவிர்ப்பீர்களா?

கலைஞர் ;

198௦ இல் அரசியலில் நாங்கள் ஒரு தவறான முடிவை எடுத்ததை ஒத்துக் கொள்கிறோம். ஆனால், அது தவிர்ர்க்க முடியாததாகி விட்டது. காரணம் ஜனதாஆட்சி பதவி போட்டியால் கலகலத்துப் போச்சு. நான் எமெர்ஜென்சியைஎதிர்த்தாலும், சிக்மகளூர் தேர்தலில் எதிர்த்துப் பிரச்சாரம் பண்ணினாலும், இந்திராகாந்தி ஜெயிச்சு பார்லிமென்ட் மெம்பரா ஆனதும் வாழ்த்து தெரிவிச்சேன் அரசியல் நாகரிகத்தோடு. அதுபோல அந்த அம்மாவோட எம்.பி.பதவிய ஜனதா ஆட்சி பறிச்சப்போ அப்போ தி.மு.க, ஜனதாகட்சியுடன் கூட்டணியா இருந்தபோதும் கூட அத கண்டிச்சு நான் அறிக்கை விட்டேன், ஜனநாயக விரோதம்னு.

அதுபோல அந்த அம்மா 1975 இல் எமெர்ஜென்சி கொண்டு வந்தது தப்புதான்னு மன்னிப்பு கேட்ட பின்னாடி இந்தியாவுக்கு ஒரு நிலையான ஆட்சி வேணுங்கிற எண்ணத்துல அவங்க கூட கூட்டு வச்சோம். அது தவறான முடிவுன்னு எப்ப தெரிஞ்சதுன்னா, பார்லிமென்ட் எலெக்சன்ல தி.மு.க.வை கவிழ்க்கிற எண்ணத்தோடு பணியாற்றினாங்க. ஆர்.வெங்கட்ராமன் எம்.பி.எலெக்சன்ல தென் சென்னையில் ஜெயிச்சதும் தி.மு.க. சட்டமன்ற செயலகத்துக்கு வந்து எனக்கு மாலை கூட போட்டுட்டு போனாரு. அப்புறம் அவரு நிதி அமைச்சரா ஆன பின்பு 1980 இல் சட்டசபை உடன்பாடு ஏற்பட்டது.

பார்லிமென்ட் எலெக்சனப்போ தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரா இளைய பெருமாள் இருந்தாரு. சட்டசபை எலெக்சனுக்குள்ள அவரை மாத்துறதுக்கு வெங்கட்ராமன் முயற்சி பண்ணினார். நான் அதை எதிர்த்தேன்.இளையபெருமாள் ஹரிஜன். அவரை மாற்றினால் கடுமையான விளைவுகள் ஏற்படும்னு இந்திராகிட்ட சொல்லி தடுத்தேன். ஆனா, வெங்கட்ராமன் பிரஷரால இளையபெருமாளை தலைவர் பதவியில் இருந்து எடுத்துட்டாங்க.அப்புறம் சீட்டு பிரிவினையை பத்தி டெல்லியிலே பேசினோம். இந்திரா வெங்கட்ராமனைத்தான் அனுப்பி வைச்சாங்க. நூறு சீட்டு காங்கிரசுக்குன்னு பேசி முடிவு பண்ணினோம். பேசி முடிவு பண்ணிட்டு புறப்படும்போதுகைகுலுக்கிய வெங்கட்ராமன் ‘‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து மூப்பனை ஒழிப்போம்’’னாரு. நான் விருட்டுன்னு கையை உருவிட்டு, ஆரம்பமே சரியில்லையே, இந்த மாதிரி ஒரு எண்ணத்தோட தேர்தல்ல ஈடுபட்டா நல்லா இருக்காதேன்னேன்! அதுமாதிரியே நடந்திடுச்சு. அதுக்கப்புறம் தெரிஞ்சுகிட்டேன். காங்கிரஸ் கலாச்சாரமே இதுதான்னும் புரிஞ்சுகிட்டேன்.

நக்கீரன் ;

இப்போதையை அரசியல் போக்குல தி.மு.க காங்கிரஸ் கூட்டணி ஏற்படும்னு சொல்லப்படுகிறதே?

கலைஞர் ;

மீண்டும் அந்தத் தவறை எப்பொழுதும் செய்ய மாட்டோம். காங்கிரசோடு உறவு எக்காலத்திலும் இனிமேல் கிடையாது.

நக்கீரன் ;

மூப்பனாரோடு உங்கள் அரசியல் உறவு எப்படி?

கலைஞர் ;

அவரு கட்சி வேற. நான் வேற கட்சி. நாங்க நல்ல நண்பர்களா இருக்கலாம். அதுக்காக அரசியல் உறவு என்று சொல்லப்படுவதெல்லாம் தவறு. அவர நான் சந்திச்சே பல மாதமாகுது. அது கூட எங்கயாவது மணவிழா நிகழ்ச்சிகளில் சந்தித்ததுதான்.

நக்கீரன் ;

வை.கோபால்சாமி யாழ்ப்பாணம் போனபோது அவரை கண்டிச்சு அறிக்கை வெளியிட்டீங்க. ஆனா அவருக்குத்தான் சிவகாசி தொகுதியில எம்.பி.சீட் கொடுத்து தேர்தலில் பிரச்சாரம் செய்தீர்கள். அவர் தோற்றபின்பு ராஜ்யசபா எம்.பி.ஆக்கி டெல்லிக்கு அனுப்பினீர்கள். இது அவருடைய மனப்பான்மையை, செயல்பாடுகளை ஆதரிப்பது போலவும் வரவேற்பது போலவும் உள்ளதே?

கலைஞர் ;

அது மனப்பான்மையை ஆதரிப்பதாகாது. அது வேறு விஷயம். கண்டிப்பது வேற. தண்டிப்பது வேற. அவர் செயல் கண்டிக்கப்பட்டது. அதற்காக தண்டிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படல. ஏதோ உணர்ச்சி வேகத்துல போயிட்டாரு. போயிட்டு வந்து எங்கிட்ட வருத்தம் தெரிவிச்சாரு.

நக்கீரன் ;

ராஜீவ் கொலைக்குப் பிறகு தி.மு.க.வில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. இளைஞர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்றும் பெரியவர்கள் கூடாது என்றும் எண்ணுகிறார்கள். அது பற்றி?

கலைஞர் ;

அது தவறான தகவல். ராஜீவ் கொலைக்குப் பிறகு இரண்டு மூன்று தடவை பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் யாருமே தி.மு.க. தலைமைக்கு எதிரான கருத்துகளை தெரிவிக்கவில்லை.

நக்கீரன் ;

புலிகளுக்கு ஆதரவானவர் எனக் கூறப்படும் வை.கோபால்சாமியின் கூட்டங்களுக்கு தி.மு.க. இளைஞர்கள் அதிகமாக வருகிறார்களே அப்ப, புலிகள் ஆதரவு இளைஞர்கள் மனதில் இருக்கிறது என்றுதானே எடுத்துக் கொள்ளமுடியும்?

கலைஞர் ;

கோபால்சாமி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை. அவ்வாறு திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவ்வாறு அவர் ஆதரவா செயல்படுவதா இருந்தா பொதுக்குழுவிலோ செயற்குழுவிலோ வெளிப்படையா சொல்லியிருக்கலாம். அப்படி அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை. (இடையில் நெல்லையில் இருந்து கோபால்சாமி போன். அவரிடம் வெள்ள சேத விபரங்களை கேட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

நக்கீரன் ;

தி.மு.க.வில் இளைஞர் அணியை நீங்கள் ஆரம்பிக்கும்போது ஸ்டாலின் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் கிடையாது. அரசியல் என்னோடு போகட்டும். என்று கருத்து தெரிவித்தீர்கள். ஸ்டாலினும் கே.ஏ.கே.வைகடுமையாக எதிர்த்து தோற்றார். பிறகு வென்று எம்.எல்.ஏ.ஆனார். தி.மு.க.வின் இளைஞரணி அமைப்பாளர் என்ற முறையில் அவருக்கு மந்திரி பதவி கூட நீங்கள் தரவில்லை. அன்றைக்கு நீங்கள் வலியுறுத்திய கருத்தில்தான் இப்பவும் உள்ளீர்களா?

கலைஞர் ;

அதே கருத்தில்தான் இப்பவும் இருக்கேன். தி.மு.க.வில் நானா வந்து யாரையும் வளர்த்துவிட முடியாது. அதனால்தான் தி.மு.க. டிரஸ்டில் கூட கட்சித் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் யார் வர்றாங்களோ அவங்கதான்டிரஸ்டுகளாக இருக்க முடியும்னு ரிஜிஸ்டர் பண்ணியிருக்கோம். ஸ்டாலினையும் மாறனையும் அரசியலுக்கு நான் கொண்டு வரவில்லை. மாறனைக் கொண்டு வந்தது அண்ணா. அண்ணா தென்சென்னை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானதும் தென் சென்னை உறுப்பினர் பதவியை ராஜினாமா பண்ணினார். அப்ப அந்த தொகுதியில் மாறனை நிற்கச் சொல்லி வற்புறுத்தியவர் அண்ணா. அது மாதிரி ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தது வேறு யாருமில்லை. இந்திரா காந்திதான். எப்படின்னா,கட்சி பிரச்சார நாடகத்துல நடிச்சதுக்காக அவனை மிஸாவில் கைது பண்ணி ஒரு வருஷம் ஜெயில்ல வச்சாங்க. அடிச்சாங்க. அதனால்தான் அவன் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டான்.

எதிர்காலத்தில் வாரிசுகள்தான் கட்சி தலைமைக்கு வரணும்கிறது எனக்கு பிடித்தமான முடிவு அல்ல. ஆனால் ஜனநாயக அடிப்படையில் என்ன முடிவு எடுக்கப்படுதோ அத ஏற்றுத்தான ஆகணும்.

நக்கீரன் ;

எதிர்காலத்தில் தி.மு.க.வின் தலைமைப் பதவியைப் பெற இப்பொழுதே ஒரு போட்டி மனப்பான்மை நிலவுகிறதே?

கலைஞர் ;

நான் அவ்வளவு சீக்கிரம் செத்து விடுவேன்னு நினைக்கிறீங்களா? என்னோட வாழ்நாள் அவ்வளவு குறுகியதா இல்ல. எனக்கோ பொதுச்செயலாளர் அன்பழகனுக்கோ வாழ்நாட்கள் குறுகியதாக இருக்காதுன்னு நம்புகிறேன். அப்டி ஏதாவது எங்களை மாற்ற வேண்டுமென்று நினைப்பு யாருக்காவது ஏற்பட்டாக் கூட தி.மு.க. ஜனநாயக ரீதியில் தன்னோட தலைமையைத் தெரிவு செய்து கொள்ளும்.

நக்கீரன் ;

கட்சிக்குள் கோஷ்டி மனப்பான்மை வளருவதாக சொல்லப்படுகிறதே?

கலைஞர் ;

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். மத்திய மாநில உளவுத் துறையினர் தி.மு.க. விரைவாக வளர்ந்து வருவதை கூர்மையாக பார்த்து ஒரு பிளவை உண்டு பண்ண ஆங்காங்கே முயற்சிக்கிறார்கள். அதற்கு என் தம்பிமார்கள் யாரும் இடம்தரமாட்டார்கள் என்ற நம்பிக்கையும், எச்சரிக்கையாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

நக்கீரன் ;

பாரதியஜனதா வெளிப்படையா ஜெயலலிதாவை ஆதரிக்குது. ஜெயலலிதாவும் பாரதிய ஜனதாவை தமிழகத்தில் வளர உதவி செய்வது போல தெரிகிறது. இதை தடுக்க போராட்டம் ஏதாவது நடத்துவீர்களா? வேறு வழியில் எப்படி தடுப்பீர்கள்?

கலைஞர் ;

எல்லாத்துக்கும் போராட்டம் நடத்த முடியுமா? மக்கள்கிட்ட பிரச்சாரம் பண்ணுவோம். தமிழகம் பெரியார் அண்ணா கொள்கைகள் விதைக்கப்பட்ட மண். திராவிட இயக்கத்தோட தாக்கம் நிறைந்த மண். இங்கு ஜெயலலிதாவேநினைத்து செயலில் இறங்கினால் கூட பாரதிய ஜனதா வளர முடியாது.