1995 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு திருமணம் அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியது தமிழகம் அறிந்த வரலாறு. சசிகலாவின் சகோதரி மகனும், ஜெயலலிதாவின் அப்போதைய தத்துப்பிள்ளையுமான சுதாகரனுக்கும், சிவாஜியின் மகள் வழிப் பேத்தியான சத்தியலட்சுமிக்கும் நடைபெற்ற இந்த திருமணத்தின்போது, ஜெயலலிதாவும் சசிகலாவும் அணிந்திருந்த ஆபரணங்கள், அந்த திருமணம் நடந்த விதம் உள்ளிட்டவை பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தின. ஆனால், சசிகலா இல்ல திருமண விழாவில் ஜெ. பங்குகொண்டது இது முதன்முறை அல்ல.
இதற்கு முன்னரே சசிகலா வீட்டின் மற்றொரு திருமணத்தையும் ஜெயலலிதா நடத்திவைத்துள்ளார். அதுதான், சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகள் திருமணம். அதாவது டி.டி.வி. தினகரனுடைய மனைவி அனுராதாவின் உடன்பிறந்த சகோதரியின் திருமணம். 1991 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த திருமணமும் அக்காலத்தில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்ட அதேநாளில் நடைபெற்ற இத்திருமணம் குறித்து 2.11.1991 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.
ஜெ நடத்திய சசிகலா வீட்டுத் திருமணம்.
சுவரெல்லாம் சுவரொட்டி மயம். ஆளுயர போஸ்டர்களும் அலங்கார வளைவுகளும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தன.
கடந்த ஒருவாரமாக மக்களின் சகஜவாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுவும் தீபாவளி நேரத்தில் நடத்தப்பட்ட இந்த கோலாகலவிழா ரொம்பவும் மக்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்திவிட்டது. கெடுபிடி வசூல் முதல் அதிரடி வசூல் வரை அமைச்சர்களே ரோட்டில் இறங்கி வசூலைக் குவித்தனர்.
17 ஆம்தேதி வியாழன் இரவு தஞ்சை மாவட்ட எல்லையான அனைக்கரைக்கு ஜெயலலிதா வர முடிவு செய்யப்பட்டது.11 ஆம் தேதி முதலே செயல்வீரர்கள் கூட்டம் போட்டு கட்சிப் பொறுப்பாளர்களை மந்திரிமார்கள் உசுப்பிவிட்டனர்.
15 ஆம் தேதி செவ்வாயன்று மாவட்டத்தில் உள்ள எல்லா நகரங்களிலும் கூட்டம் போட்டு ‘ஜெ’வை எப்படியெல்லாம் ஆடம்பரமாக வரவேற்க வேண்டும் என முடிவெடுத்தனர். இவ்வளவு கார், லாரி கொண்டு வரவேண்டும் என்று கட்டளை இட்டனர்.
மாவட்ட மந்திரிகள் எஸ்.டி.எஸ்., அழகுதிருநாவுக்கரசு ஆகியோர் சகட்டுமேனிக்கு வசூலில் புகுந்து விளையாடினர். அழகு ஒருபடி மேலேயே போய்விட்டார். தஞ்சை மாவட்டத்தை மட்டுமல்லாமல் புதுக்கோட்டை திருச்சி மாவட்டங்களுக்கும் சென்று ஆட்டிப் படைத்தார். பதினைந்தாம் தேதி காலை புதுகை ரோஸ்லேன்ட் வந்த அழகுதிரு., 'ரகுபதி, குழ.செல்லையா’ இருவரையும் வைத்துக்கொண்டு நான் ஆர்.டி.ஓ.வுக்கு சொல்லி விடுகிறேன், நூறு லாரிகளைப் பிடித்துக்கொண்டு அம்மாவை வரவேற்க வாருங்கள்’’ என்று கட்டளை போட்டு விட்டு திருச்சி பறந்தார். தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட கட்சிக்காரர்கள் ஆளாளுக்கு கார், லாரி, வேன், பஸ் என புறப்பட்டு அணைக்கரைக்கு வந்துசேர்ந்தனர்.
பதினேழாம் தேதி ஏழரை மணிக்கு ‘ஜெ’ அணைக்கரை வந்துசேர்ந்தார். பலத்த கெடுபிடி. எம்.எல்.ஏக்கள் கூட ‘ஜெ’ யை நெருங்கி விடாமல் ஏக கெடுபிடி. திருச்சி எம்.எல்.ஏக்களுக்கும் தஞ்சை மாவட்ட எம்.எல்.ஏக்களுக்கும் மோதலே வருமளவுக்கு இருந்தது.
‘ஜெ’ காரைவிட்டு இறங்காமல் காரினுள் இருந்துகொண்டே வரவேற்பைப் பெற்றது கட்சிக்காரர்களிடையே குமுறலை ஏற்படுத்தியது. கும்பகோணம் வழியாக தஞ்சை செல்ல முடிவாகியிருந்ததால் அணைக்கரை முதல் தஞ்சாவூர் வரை சாலைகளில் இருமருங்கிலும் கால்கடுக்க போலீஸார் கண் துஞ்சாமல் இரண்டு நாட்களாக தவம் கிடந்தனர்.
சாலைகளின் இருபக்கங்களிலும் மக்கள் நின்று வேடிக்கை பார்க்க சவுக்குக்கட்டை (பேரிகாட்) தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. பல லட்சம் பணம் அரசுக்கு விரயமானது.
பத்து லட்சம் வரை இதற்கு ஒதுக்கினர். பப்ளிக் டெண்டர் விடாமல் அ.தி.மு.க.வில் உள்ளவர்களுக்கே இது ஒதுக்கப்பட்டது. மாவட்டச்செயலாளர் துரை.திருஞானத்திடம் இதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. கும்பகோணம் பகுதியில் ராமநாதன் எம்.எல்.ஏக்கு எதிராக செயல்படும் குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு டெண்டர் உரிமையை பகிர்ந்து அளித்தார். பொதுப்பணித்துறை ‘காவேரி கோட்ட’த்தின் கீழ்தான் வழக்கமாக இதுபோன்ற வேலைகளை ஒதுக்குவர். ஆனால் அ.தி.மு.க.வினர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பொதுப்பணித்துறையில் உள்ள ஸ்பெஷல் பில்டிங் மெயின்டைன் கண்ட்ரோலில் இந்த வேலையை பெற்றனர். தஞ்சாவூர் முத்துசாமியை பலவந்தமாக வலியுறுத்தி பத்து லட்சத்துக்கு இந்த ஒர்க்கைப் பெற்றனர்.
அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு ‘லம்பாகப்’ பணம் கிடைத்தது. தடுப்பு கட்டப்படாமலும் பணம் பெறப்பட்டது. எஸ்.டி.எஸ்.ஒருபக்கம் தன்பாட்டுக்கு எல்லா ஊர்களிலும் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் வசூல் வேட்டையாடினார். அந்தந்த ஊர் எம்.எல்.ஏக்கள் ‘தங்கள் வசூல்’ பாதித்ததால் அவர் மீது ஆத்திரம் அடைந்தனர். அழகுதிரு.வுக்கும் ராமநாதனுக்கும் ஒரு பஞ்சுமில் வசூலில் தகறாரானது. வர்த்தகசங்கம், தியேட்டர் அதிபர்கள், ஒயின்ஷாப், கேபிள் டி.வி, லாரி, வேன் ஓனர்கள் என கட்டாய வசூல் வேட்டை.
ஆயுத பூஜைகூட செய்ய விடாமல் வாகனங்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டன. சிலகெட்டிக்காரர்கள் இதுதான் சமயமென்று ஆயுத பூஜையே செய்யாமல் கட்சிகாரர்களிடமே ஆயிரக்கணக்கில் வசூல் செய்தனர்.
நீண்ட வரிசையில் கார்களுடன் தஞ்சை வந்தார் ஜெயலலிதா. தங்கும் விடுதியில் இருந்த ‘ஜெ’யை எம்.எல்.ஏக்கள் கூட சந்திக்க முடியவில்லை.
கடற்கரைப்பகுதி என்பதால் ஜெ தங்கியிருந்த ஏரியாவுக்குள் வாகனங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. பதினெட்டாம் தேதி காலை 9.3௦ க்கு சீனிவாசபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் சசிகலாவின் அண்ணன் மகள் திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றார். இந்த திருமண மண்டபம் உள்ள பகுதிவாழ்மக்கள் ஒருவாரகாலம் ஏகக் கெடுபிடிகளுக்கு உள்ளாகினர். அவர்கள் வீடுகளில் உறவினர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. கல்யாணத்துக்கு ‘ஜெ’ வந்தபோது கூட அந்தப்பகுதி வீடுகளில் இருந்து மக்கள் வெளியேவர அனுமதிக்கப்படவில்லை.
தனியார் ஒருவர் வீட்டு திருமணவிழாவுக்கு வரும் முதல்வருக்கு அரசு துறைகளின் சார்பாக வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
‘ஜெ’ வந்துவிட்டுப் போனபின்தான் கட்சிக்காரர்களையே மண்டபத்துக்குள் அனுமதித்தனர். அமைச்சர்களைத் தவிர யாரையும் மனடபத்துக்குள் விடவில்லை.
சசிகலாவின் கணவர் நடராசன் தெருமுனையிலே இறங்கி கால்நடையாகவே மண்டபத்துக்கு வந்தார். அவரை சசிகலாவின் குடும்பம் கண்டுகொள்ளவில்லை.
அரைமணிநேரம் திருமண மண்டபத்தில் இருந்துவிட்டுப் புறப்பட்டார் ஜெ. பதினெட்டாம் தேதி மதியம் நாகைக்குப் புறப்பட்டார். நாகையில் மற்ற எல்லாவற்றையும் விடக் கடுமையான பாதுகாப்பு.
ஒரே சவால் பேச்சாகவே பேசிக் கொண்டிருந்தார் ஜெ. மேடையைச் சுற்றி சாரம் அமைத்து கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏராளமான தங்கம் பரிசாக அளிக்கப்பட்டது. இவ்வளவு பவுனும் தொழில் அதிபர்களிடமும் வியாபாரிகளிடமும் அடித்துப் பிடுங்கிய பணத்தில் வாங்கியதுதான். எஸ்,.டி.எஸ்சை முழுவதுமாக ஓரங்கட்டியிருந்த அழகு.திரு, தன்வீட்டுத் திருவிழா போல இந்த ஆடம்பரவிழாவை நடத்திக் காட்டினார். கட்சிக்காரர்கள்தான் ஜெவை ‘‘திராவிடத் தாயே! காவிரிதந்த கலைச்செல்வியே!’’என புகழ்ந்து நாளிதழ்களில் விளம்பரம் தந்தார்கள் என்றால் அரசு அதிகாரிகள் பலர் ‘‘எங்கள் இதய தெய்வமே! புரட்சிப் பூவே!’’ என்றெல்லாம் விளம்பரம் தந்து தங்கள் விசுவாசத்தைக் காட்டினர்.
‘ஜெ’ வந்து சென்ற மூன்றுநாட்களில் சில நாளிதழ்கள் புத்தகம் போல் வெளியானது. பக்கத்துக்குப் பக்கம் விளம்பரங்கள். சாதாரண பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு வசதி படைத்திருந்தனர்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம். இவர் மகள் பிரபா. இவருக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். அந்தநேரம் கும்பகோணத்தில் டவுன் பிளானிங் ஆபீசராக இருந்த தியாகராஜன் எங்கேயோ தூக்கியடிக்கப்பட்டார். அந்த தியாகராஜன் தனக்கு திருச்சிக்கு மாறுதல் வேண்டும் என கேட்டு அரசு வட்டாரத்தில் அலைந்தபோது சசிகலா காதில் செய்திவிழ தியாகராஜனின் மகன் சிவகுமாரை தன் அண்ணன் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க சசிகலா மூலம் வேண்டுகோள் விடப்பட்டது. தியாகராஜன் ‘‘தான் டிரான்ஸ்பர்தானே கேட்டோம்.பெரிய இடத்து சம்பந்தமே கிடைக்கிறதே’’ என வியந்து திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.
சசிகலாவின் வீட்டுத் திருமணத்தில் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. தனியார் வீடியோ காமிரா நபர் ஒருவரை மட்டும் அனுமதித்தனர். பல நாளிதழ்களின் நிருபர்கள் மண்டப வாசலில் வாழை மரத்தடியில் நின்று கொண்டு உள்ளே செல்லவிரும்பி திருமண வீட்டாரைக் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.
அ.தி.மு.க. கரை வேட்டிக்காரர்கள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.ஜெயலலிதாவின் தஞ்சை விசிட்டுக்காக பல அரசு அதிகாரிகள் தாசில்தார்கள் ஆர்.டி.ஓக்கள் அவரவர் பங்குக்கு வசூலித்துக் கொடுத்தனர். அதிகாரிகளே கட்சிக் கொடி தோரணங்கள சில இடங்களில் கட்டினர். காவல்துறையில் அதிகாரிகள் முதல் சாதாரண கான்ஸ்டபிள்கள் வரை ஒரு வாரம் தூங்கவேயில்லை.
காயிதேமில்லத் மாவட்டத்தின் அனைத்து வருவாய்க் கோட்டங்கள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியை வைத்துக் கொண்டு ‘ஜெ’வை வரவேற்க லட்சக்கணக்கில் விளம்பரத்துக்காக பணத்தை விரயம் செய்தனர்.
செய்திமக்கள்தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தில் ‘‘ஜெ முதல்வராகக் காரணமாய் இருந்த எம்.ஜி.ஆர் படமே இல்லை.’’ முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர். படங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொண்டனர். கட்சிக்காரர்கள் இதைக் கண்டு மனம் வெதும்பினார்கள்.
திட்டமிடாமல் அவசரஅவசரமாக தன் தோழி வீட்டு திருமண தேதியை உத்தேசித்து மாவட்ட பிரிப்பு விழா என்கிற பெயரில் தன் கட்சிக்காரர்கள் வசூல் கொள்ளையடிப்பதற்காக நடந்த ஒரு கூத்து போலத்தான் இது நடந்து முடிந்தது.
இந்த விளைவால் மக்களுக்கு நன்மை விளைந்ததோ இல்லையோ பல அ.தி.மு.க. புள்ளிகள் கணிசமாக சுருட்டிக்கொண்டு கரையேறி விட்டனர். மற்ற மாவட்ட அ.திமு.க.வி.னர் ‘‘தங்களுக்கும் இது போல் வாய்ப்புக் கிடைக்காதா’’ என பெருமூச்சு விடுகின்றனர்.