காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 100 ஆண்டுகளும் மேலாகத் தமிழ்நாடு - கர்நாடகம் இடையே வழக்குகளும் வன்முறைகளும் தொடர்கின்றன. அண்டை மாநிலங்களுடன் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு இடையில் நீரைப் பிரித்துக்கொள்ள வழக்குகள் நடந்த வரலாறும் இருக்கிறது. தற்போது கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்கு ஆற்றுநீரை உறிஞ்சி விற்பது போல் 90களுக்கு முன்பு ‘ஸ்கீம் சிஸ்டம்’ என்ற பெயரில் பெருமுதலாளிகள் வாய்க்கால் நீரை உறிஞ்சி விவசாயிகளுக்கே விற்பனை செய்த அநியாயங்களும் நிகழ்ந்துள்ளன. இது குறித்து விசாரித்த நக்கீரன் 04.04.1992 தேதியிட்ட இதழில் கட்டுரை வெளியிட்டது.

Dispute over river water separation

Advertisment

நஞ்சை இடையாறு.

Advertisment

சேலம் மாவட்டம் கபிலர்மலை தொகுதியைச் சேர்ந்த அழகிய கிராமம். நஞ்சை வயல்கள் நிறைந்து இரண்டு ஆறுகளுக்கிடையே பசுமையாக இருந்ததால் சூட்டப்பட்ட பெயர்.

இன்று பணபலம் மிக்கவர்கள் அரசியல்வாதிகளால் தண்ணீர் வளம் உறிஞ்சப்பட்டு விரைவில் பாலைவனம் ஆகும் சூழலில் அக்கிராமம். காவிரிக் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்து விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்துக்கு ஆரம்பத்தில் காவிரியில் இருந்தே தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தார்கள். விவசாயிகளின் வசதிக்காக நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டதுதான் ராஜா வாய்க்கால்.

ராஜா வாய்க்காலின் கடைமடைப் பகுதிதான் நஞ்சை இடையாறு. ஏறத்தாழ முப்பத்து நான்கு கிலோமீட்டர் தூரம் பாய்கிறது ராஜா வாய்க்கால். வாய்க்காலில் இருந்து பொய்யேரி, கொமராபாளையம் வாய்க்கால்கள் பிரிகின்றன.

பொதுப்பணித்துறைதான் இந்த வாய்க்காலை பராமரித்து வருகிறது. ராஜா வாய்க்காலை பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்தி வரும் விவசாயிகள் ஆயக்கட்டுதாரர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த ஆயக்கட்டுதாரர்கள் பல நூற்றாண்டு காலமாக அரசுக்கு தீர்வை (வரி) கட்டி வருகிறார்கள். தீர்வை கட்டும் ஆயக்கட்டுதாரர்கள் மட்டுமே இந்த வாய்க்காலை பயன்படுத்தும் உரிமை பெற்றிருந்தார்கள்.

1967 வரையிலும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. அதற்குப் பிறகுதான் பிரச்சினை ஆரம்பமானது. காவிரி ஆற்றை ஒட்டியிருந்த நிலத்துச் சொந்தக்காரர்களும், ராஜா வாய்க்காலை ஒட்டி இருந்த நிலத்துக்காரர்களும் காவிரி, ராஜா வாய்க்கால் தண்ணீரைப் பிஸினஸ் ஆக்க ஆரம்பித்தார்கள். அதாவது அரசின் அனுமதி பெறாமலேயே மோட்டார் பம்ப் செட் வைத்து குழாய்கள் மூலம் பக்கத்து வயல்களுக்கும் சப்ளை செய்ய ஆரம்பித்தனர். இப்படி அக்கம் பக்கத்து நிலங்களின் சொந்தக்காரர்களை ஒன்றாகக் கூட்டு சேர்த்துக் கொண்டு ‘ஸ்கீம்’ சிஸ்டத்தை ஏற்படுத்தினர்.

ஸ்கீம் சிஸ்டத்தின் படி மற்ற நிலங்களுக்கு தண்ணீர் கொடுக்க தலைமை ஏற்கும் விவசாயி ஏகப்பட்ட லாபம் அடைவார். உதாரணமாக நூறு ஏக்கர் நிலத்துக்கு ஒருவர் தண்ணீர் கொடுக்க பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவருக்கு நூறு ஏக்கர் விவசாயிகளும் சேர்ந்து பத்து ஏக்கர் நிலம் அல்லது பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்து விடுவார்கள்.

இப்படி தண்ணீர் எடுக்க பல ஸ்கீம்கள் உருவாகின. இதனால் ஆயில் எஞ்சின்கள் மூலமாகவும் மின் இணைப்பும் பெற்று இடையிலேயே நீரை உறிஞ்ச ஆரம்பித்தனர் ராஜா வாய்க்காலை ஒட்டியுள்ள விவசாயிகள். இதனால் தங்கள்பகுதிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்ததால் ஆட்சேபனை செய்தனர் நஞ்சை இடையார் பகுதி ஆயக்கட்டுதாரர்கள்.

இதனால் அரசு 29.8.66 ல் ஒரு ஆணை பிறப்பித்தது. அதன்படி 12.12.62 வரை போட்ட ஸ்கீம்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. புதிய ஸ்கீம்கள் போடக் கூடாது என்றும் அந்த ஆணை கூறியது. ஆனால் தொடர்ந்து ஸ்கீம்கள் போடப்பட்டன. ஆளும் கட்சியில் இருந்தவர்கள் ஸ்கீம்களை தொடர்ந்து அமைத்தனர். கபிலர் மலைத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த செங்கோட்டையன் மட்டும் ஏறத்தாழ ஏழாயிரம் ஏக்கர்களுக்கு ஸ்கீம் சிஸ்டம் போட்டு தண்ணீர் உறிஞ்சிக் கொண்டு இருக்கிறார்.

அடிக்கடி விவசாயிகள் போராட்டம் நடத்தவே 17.5.88 இல் அரசு கண்காணிப்புக்குழு ஒன்றை நியமித்தது. ஸ்கீம்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் போட்டது கண்காணிப்புக் குழு.ஆனால் வழக்கம் போல அரசு கண்டு கொள்ளவில்லை. 1988 இல் நாமக்கல் ஆர்.டி.ஓ.வாக இருந்த தனவேல் ரொம்பக் கஷ்டப்பட்டு சில ஆக்கிரமிப்புகளை அகற்றினார். அதற்குப் பிறகு எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதற்கிடையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சசர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர் கே.பி.கந்தசாமி புதிதாக ஸ்கீம் ஒன்றை ஆரம்பித்தார். அப்படி புதிய ஸ்கீம் போட்ட போது முன்னால் ஆர்.டி.ஓ. தனவேல் பைப்புகளை உடைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறார்.

விளைவு! அடுத்தநாளே அவர் தூக்கியடிக்கப்பட்டார்.

1989 கடைசியில் புதிதாக ஒரு ரூம் கட்டி 2௦5 ஹெச்.பி.ஆயில் எஞ்சின் வைத்து தண்ணீரை உறிஞ்சத் தொடங்கினார் கே.பி.கே. இப்படி தண்ணீரை எடுக்க ராஜா வாய்க்கால் கரையை வெட்டியும் ஹைவேஸ் ரோடுகளின் அடியில் பைப்புகளை பதித்தும் இருக்கிறார். இதனால் நஞ்சை இடையார், கொமராபாளையம், இடும்பங்குளம் போன்ற ஊர்களில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது.

இதற்கிடையில் கே.பி.கந்தசாமி 199௦ ஜூனில் மின் இணைப்பு பெற முயற்சி செய்ய ஆரம்பித்தார். ஏற்கெனவே, பம்ப் செட் மூலம் தங்களுக்கு சேர வேண்டிய தண்ணீர் சட்ட விரோதமாக உறிஞ்சப்படுகிறது. இன்னும் மின் இணைப்பு கொடுத்து விட்டால் சுத்தமாக தண்ணீரே கிடைக்காது என்று முடிவெடுத்த நஞ்சை இடையார் விவசாயிகள் கே.பி.கே.மீதும், அரசு மீதும், மின்சார வாரிய சேர்மன் மீதும் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு எண்: ஓ.எஸ்.81/91.

வழக்கு கோர்ட்டில் இருக்கும் போதே விவசாயிகள் மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களில் இறங்கினார்கள். கலெக்டர் விவசாயிகளின் பிரச்சினையைக் காது கொடுத்து கேட்கவேயில்லை.

இதைப்பற்றி ராஜா வாய்கால் விவசாயிகள் சங்கச் செயலாளர் ந.பெ.வடிவேலன் நம்மிடம், ‘‘காலங்காலமா எங்களுக்கு பரிபூரண உரிமை உள்ள வாய்க்கால் இது. இதை நம்பித்தான் எங்கள் ஊரில் உள்ள ஆயிரம் ஏக் கர் நிலமும் இருக்கு. மூணு போகம் நெல் விளைஞ்ச பூமி இது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைப் பிரச்சினை. இவங்க ஸ்கீம் போட்டு திருட்டுத் தனமா தண்ணியை உறிஞ்சறதுனால எங்க கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வர்றதில்ல. இவங்க தனிப்பட்ட முறையில லாபம் அடையிறதுக்கு எங்க வயித்துல அடிக்கிறாங்க. எட்டு அங்குலம் தண்ணி எங்க கடைமடைப் பகுதிக்கு வரணும்னு 27..5.58 ஆம் ஆண்டே அரசு நிர்ணயம் செய்தது. இவங்க சட்ட விரோதமா தண்ணி எடுக்கறதால எங்களுக்கு வர வேண்டிய தண்ணி வர்றதில்ல. அதனால நாங்க இப்ப நெல் சாகுபடி செய்ய முடியாம கோரைப்புல் போட்டுக்கிட்டு இருக்கோம்.

தி.மு.க. ஆட்சியிலேயே கே.பி.கந்தசாமி க்ரூப் மின் இணைப்பு வாங்க முயற்சி செஞ்சாங்க. நாங்க போராட்டம் நடத்தி தடுத்தோம். இப்ப அ.தி.மு.க. ஆட்சியில உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மூலமா முதல்வரோட கோவில் நிதிக்கு பத்து லட்சம் நன்கொடையும், எம்.எல்.ஏ.சரஸ்வதிக்கு இரண்டு லட்சம் பணமும், பட்டுப் புடவையும் கொடுத்து காரியம் சாதிச்சுருக்காங்க. நாங்க மின் இணைப்பு கொடுக்கக் கூடாதுன்னு சேலம் கலெக்டர் ஆபீஸ் முன்னாடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். ஆனா ஒண்ணும் பலன் இல்லை..மின் இணைப்பு கொடுக்கக் கூடாதுன்னு நாமக்கல் கோர்ட்டுல கேஸ் போட்டோம். ‘கேஸ் பென்டிங்’ இருக்கும்போதே மின்சார வாரிய அதிகாரிகளைசரிக்கட்டி இணைப்பு வாங்கிட்டாங்க. அவங்க காவிரி ஆத்துல இருந்து தண்ணீர் எடுக்கறதப் பத்தி எங்களுக்கு கவலையில்லை. ஆனா ராஜாவாய்க்காலில் இருந்து எடுக்கக் கூடாதுங்கறதுதான் எங்க வேண்டுகோள். இது தொடர்ந்தால் எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்’’என்றார்.

இடையாறு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்.கே.சண்முகம் நம்மிடம், ‘‘ஒவ்வொரு எலெக்சன் சமயத்திலயும் ஒட்டு கேட்டு வர்றவங்க அந்தப்பக்கம் இருக்கறவங்ககிட்ட ஸ்கீமுக்கு வேண்டிய எல்லாம் செய்றேன்னு சொல்லுவாங்க. எங்ககிட்ட ஸ்கீம் எல்லாம் எடுக்க ஏற்பாடு செய்றேன்னு சொல்லி ஓட்டு வாங்குவாங்க. ஆனா ஜெயிச்சப்புறம் அந்தப் பக்கம் சாஞ்சிடுவாங்க. ஸ்கீமுக்கேல்லாம் அப்ரூவல் கொடுக்கட்டும் நான் வேண்டாங்கல. ஆனா எங்களுக்கு தர வேண்டிய தண்ணீருக்கு உத்தரவாதம் தந்து விட்டு தரட்டும்’’ என்றார்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அரசு அனுமதி பெறாமலே ஸ்கீம் சிஸ்டம் போட்டு தண்ணீர் எடுப்பவர்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அல்லது ராஜா வாய்க்காலை ரீ-மாடல் (RE-MODEL) செய்து எல்லோருக்கும்தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நடப்பது அம்மா ஆட்சி. நல்லதைத் தவிர மற்றதெல்லாம் நடக்கும் என்ற பேச்சை மாற்றி நல்லதும் நடக்கும் என ஜெயலலிதா செய்து காண்பித்தால் விவசாயக் குடும்பங்கள் வாழ்த்தும்.