நாங்க அப்போவே அப்படி...! மதுசூதனனின் மாஃபியா அட்டகாசங்கள்! 

Crimes committed by the ‘Madhusudhanan’s Mafia’ gang

மாண்புமிகு அமைச்சர்கள் பலரின் ஆரம்பக்கால வாழ்க்கையும் அவர்கள் எவ்வாறு கட்சியில் அடிமட்ட தொண்டரிலிருந்து முன்னேறி அமைச்சர்களாக உயர்ந்தார்கள் என்பதன் உண்மை வரலாறும் வெள்ளை துணியால் மூடப்பட்ட கருப்பு பெட்டியாக வெகுஜன கண்களிலிருந்து மறைக்கப்பட்டிருக்கும். அதுபோல அமைச்சரான பிறகும் அவரின் குற்றச்செயல்கள் பலவும் பதவி நிழலில் மறைந்துகொண்டிருக்கும். அவ்வாறு, அ.தி.மு.க. வில் மிக முக்கிய நபராக இருந்த மதுசூதனின் இருள் பக்கங்களை வெளிச்சம்போட்டுக் காட்டிய கட்டூரை 19.11.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியானது.

Crimes committed by the ‘Madhusudhanan’s Mafia’ gang

கட்அவுட் மந்திரியும், அம்மாவின் அடிதடி மந்திரியுமான மதுசூதனனின் ஆட்டங்கள் அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கின்றன. சிட்டி வில்லனாகத் திகழும் மந்திரி மதுசூதனன் தன்வசமுள்ள அடியாள் கும்பலை மட்டும்மூலதனமாக வைத்து பதவிக்கு வந்தவர். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல மந்திரிக்கு பிரகலாதபாபு என்ற ஒரு தம்பியும் (குட்டி மந்திரி) இருக்கிறார். அண்ணனுடைய பின்னணியில் தம்பி பிரகலாதபாபு செய்யும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கட்டை பஞ்சாயத்து, அடிதடி, சாராய பிசினெஸ், வீடு காலி பண்ணும் வேலை எதுவாக இருந்தாலும் கச்சிதமாக முடித்துக் கொடுப்பார் பிரகலாதபாபு.

இந்த அடிதடி மன்னர்களின் அட்டகாசத்தால் லேட்டஸ்ட்டாக பாதிக்கப்பட்ட சம்பவம் கொஞ்சம் சுவாரசியமானது. பர்மாபஜார் வியாபாரிகள் நான்குபேர் ஒரு மாருதி வேனில் (TCV 2728) மண்ணடியில் இருந்து ராயபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். மண்ணடியில் வியாபார பேரம் சம்பந்தமாக வந்த மந்திரி மதுவின் கைக்கூலி காத்தவராயன் (துறைமுகம் இளைஞர் அணி அமைப்பாளர்) மந்திரி கார் சீட்டின் பின்புறம் அமர்ந்திருக்க, பர்மா பஜார் நண்பர்கள் மந்திரியின் காரைப் பார்த்துவிட்டு டிரைவரிடம் மது அண்ணன் இருக்காங்களா? என உரிமையுடன் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்! மந்திரியை எப்படிடா பேர் சொல்லி கேட்டே? என்று கேட்டு ‘காஸ்ட்லி பானம்’ அருந்தியிருந்த காத்தவராயன் பர்மா பஜார்காரர்களை தகராறுசெய்ய அவர்களும் பதிலுக்கு சத்தம் போட்டு விட்டு ராயபுரம் சென்றார்கள்.

மந்திரியின் காரிலிருந்த காத்தவராயன், கூடவே காரில் அவர்களை விரட்டிச் செல்ல, ராயபுரம் ராயில்வே மேம்பாலம் அருகேயுள்ள அன்னை டிராவல்ஸ் முன்பு பர்மா பஜார் நண்பர்கள் சென்ற மாருதி வேன் நின்றது. அங்கே காரை நிறுத்திய காத்தவராயன் அவர்களைப் பிடித்து தாறுமாறாக தாக்க, பதிலுக்கு அவர்களும் தாக்க காத்தவராயனை நன்கு ‘‘கவனித்து’’ விட்டுச் சென்றார்கள். அடிபட்ட காத்தவராயன் அருகில் உள்ள அடியாட்களை திரட்டிக்கொண்டு தகராறு நடைபெற்ற லொக்கேஷனையும் மாருதி வேன் நம்பரையும் சொல்ல கையில் சவுக்குக்கட்டை பட்டாக்கத்தியுடன் அடிதடி கும்பல் அன்னை டிராவல்ஸ் வந்து கண்ணாடி, சோபா என அனைத்தையும் அடித்து நொறுக்கியது. அங்குள்ள ஊழியர்களுக்கும் உருட்டுக்கட்டை அடி!

தகராறு நடந்தது என்னவோ எங்க டிராவல்ஸ் முன்னாடிதான். ஆனால் சம்பந்தமே இல்லாம எங்க டிராவல்ஸ் உள்ளே புகுந்து கண்டமேனிக்கு அடிச்சாங்க. பர்மாபஜார் காரங்க வந்த மாருதிவேன்கூட குமார் என்பவரோடது. எங்க கிட்ட இருந்துதான் அந்த வேனை குமார் விலைக்கு வாங்கினாரு! என்றார் அன்னை டிராவல்ஸ் நிர்வாகி அசோக். அன்னை டிராவல்ஸ் உரிமையாளர் விஜயகுமார் தி.மு.க.வைச் சேர்ந்தவர். போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை நோ ஆக்ஸன்!

இத்தனை சம்பவத்துக்குப் பிறகும் பர்மா பஜாரைச் சேர்ந்த நீலகண்டன், கண்ணன், ராஜி, காளிதாஸ் நால்வர் மீதும் காத்தவராயன் கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வரமுடியாத அளவில் நான்கு பிரிவுகளில் வழக்குப்போடப்பட்டிருக்கிறது. கூடவே ஸ்டேசனில் நால்வருக்கும் ‘‘அன்பான உபசரிப்பு’’ நடைபெற்றிருக்கிறது. மந்திரியின் சகலை சீனுவாசன்தான் பர்மாபஜார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர். பிறகு ‘‘கவனிப்பு’’ எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?

அண்ணாநகர் சமாச்சாரம் கொஞ்சம் பழசு என்றாலும் படுமோசமானது. அண்ணாநகர் ரவுண்டானா அருகே ஸ்ரீ பிரியா ஜூவல்லரி கடையை நடத்தி வந்தவர் ஸ்ரீதர். வடசென்னையில் உள்ள பெரிய ‘பணபலமிக்க சேட்’ நகைவியாபாரிக்கும் ஸ்ரீதருக்கும் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சிக்கல். மொத்தமாக நகை கொள்முதல் செய்ததில், இருபத்தி ஒரு லட்சம்தான் பாக்கி தர வேண்டும் என்று ஸ்ரீதர் சொல்ல, எனக்கு ஐம்பது லட்சம் தர வேண்டும் என்று பெரிய சேட் சொல்ல இந்த விவகாரம் பஞ்சாயத்துக்கு மந்திரியிடம் போனது.

ஸ்ரீபிரியா ஜூவல்லரி உரிமையாளர் ஸ்ரீதரை மந்திரியின் தம்பி பிரகலாதபாபு அடியாட்கள் சகிதமாகச் சென்று கடத்தி வந்து, நள்ளிரவில் கடையைத் திறக்க வைத்து, கடையில் இருந்த மொத்த நகைகளையும் வடசென்னை பெரிய சேட்டிடம் வாரிக்கொடுத்து, பஞ்சாயத்து தொகையாக பதினைந்து லட்சம் பணமும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். போதாததற்கு ஸ்ரீபிரியா ஜூவல்லரி உரிமையாளர் ஸ்ரீதரையும் மிரட்டி அவருடைய மாருதி கார், வீடு இரண்டையும் தங்களுக்கு எழுதிக் கொடுத்து விட வேண்டும் என்று மந்திரியின் மூலமாக மிரட்ட, ஸ்ரீதரின் மாமனார் கோவையிலிருந்து அலறி அடித்துக்கொண்டு சென்னை ஓடி வந்து, மந்திரி செங்கோட்டையன் மூலமாக மேற்கொண்டு இழப்பு ஏதும் இல்லாமல் செய்திருக்கிறார்.நெற்குன்றம் தி.மு.க. பிரமுகர் கோல்டன் ஜெயசிங் என்பவர் மூலம் ராஜாத்தி அம்மாளை வைத்து ஸ்ரீபிரியா ஜூவல்லரி திறக்கப்பட்டது. ஆனால், திறந்து ஆறே மாதங்களில் கடையை சூறையாடி இழுத்து மூடிவிட்டு சென்று விட்டது மதுசூதனன் கோஷ்டி.

அடிதடி, கட்டை பஞ்சாயத்துகளை தவிர, மந்திரியின் உறுதுணையோடு வட சென்னையில் நகரின் மூலை முடுக்கெல்லாம் கள்ளச்சாராய விற்பனை களைகட்டி வருகிறது. வட்ட துணைச் செயலாளர் மூல கொத்தளம் சுகுமார்,அ.தி.மு.க. பேச்சாளர் அண்ணாமலையின் மேற்பார்வையில் உதயசூரியன் நகர், சத்யமூர்த்தி நகர், ஏரிக்கரை, பெரியார் நகர் போன்ற இடங்களிலும் ஓட்டேரி, மேட்டுப்பாளையம், பட்டாளத்தில் மதுவின் கைத்தடி மத்திய சென்னை ‘‘ஜெ’’ பேரவை துணை செயலாளர் சேகர்பாபு தலைமையில் சாராய விற்பனை ‘ஜாம் ஜாம்’ என நடைபெறுகிறது.

சேகர் பாபுவின் ஓட்டேரி ஒயின்ஸில் இரவுபகலாக இருபத்தி நாலு மணி நேர சர்வீஸ் உண்டு. போலீசும் ‘‘கண்ணு தெரியல;காது கேட்கல;’’ என்று சத்தம் போடாமல் ஒதுங்கிக் கொள்ளும். இதையெல்லாம் ‘‘ஜெ’’யிடம் யார் சொல்வது? மத்திய சென்னை 65 ஆவது வட்டச் செயலாளர் ஜனா, 66 ஆவது வட்டச் செயலாளர் கோபால் இருவரும் மந்திரியின் சாராய பிசினெஸ் விவகாரங்களை பட்டியல் போட்டுக்கொண்டு ‘‘ஜெ’’யிடம் போகப் போகிறார்களாம். ஆனால், அதற்குள்ளாகவே இருவரது பதவிகளையும் பறிக்கும் திட்டத்தை மது கோஷ்டி தீவிரமாக செய்து வருவது அவர்களுக்குத் தெரியாது பாவம்!

எழும்பூர் பகுதிச் செயலாளர் பாலகங்காதரன் சூளை.பி.துரைராஜ் இருவரும் மந்திரி மதுவின் தீவிர விசுவாசிகள். ‘‘எந்த நேரம் எத்தனை குண்டர்கள் வேண்டுமென்று மந்திரி சொன்ன மறு வினாடியே குண்டர் படையை அனுப்பி வைக்கும் திறமையாளர்கள்’’ இருவரும். இதுதவிர எக்மோர், ஓட்டேரி, பெரியமேடு, புரசைவாக்கம், சூளை, பட்டாளம் பகுதிகளில் நடைபெறும் சூதாட்ட (காட்டன்) கிளப்புகளும், மந்திரி மதுவின் உதவியுடன்தான் போலீஸ் தொல்லை எதுவுமில்லாமல் ரெகுலராக நடைபெற்று வருகின்றன.

எண்ணூர் பகுதியில் பிரபலமான கள்ளச்சாராயப் பேர்வழி எண்ணூர் நாராயணன், கட்டை பஞ்சாயத்துக்களில் பிரசித்தி பெற்றவர். இப்போது இவரது வேலைகளை மந்திரியின் தம்பி பிரகலாதபாபு முடித்து வைத்து நாராயணனை அட்ரஸ் இல்லாமல் செய்து விட்டார். லேட்டஸ்ட் நியூஸ்; எண்ணூர் நாராயணன் குடியிருக்கும் தெருவிலேயே அவருக்கு போட்டியாக பதினைந்து லட்சம் விலையில் ஒரு வீடு பிரகலாதபாபு மூலம் மந்திரிக்கு முடிய இருக்கிறது.

admk App exclusive Madhusudhanan mafia
இதையும் படியுங்கள்
Subscribe