சின்னத் திரையிலிருந்து, தனது திறமையின் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி கோடி நாட்டியவர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சிறிய கதாபாத்திரத்தில் தொடங்கி பிற்காலத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் தான் யோகிபாபு. 2009 ஆம் ஆண்டு யோகி படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அந்த படங்களில் பெரும்பாலானவை இவருக்குப் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன.
இதையடுத்து, இவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில், மண்டேலா, தர்மபிரபு போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படங்களும் இவருக்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்தன. குறிப்பாக மண்டேலா படம் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்து வந்த இவர், தமிழையும் தாண்டி கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக ஒரு தெலுங்கு திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அங்கு முன்னணி நடிகராக வலம் வரும் வெங்கடேஷ் நடிக்கும் ‘ஆதர்ஷ குடும்பம்- ஹவுஸ் நம்பர் 47’ எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக யோகிபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ நிதி நடிக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிகளைக் குவித்த யோகிபாபு, தற்போது பிற மொழி படங்களிலும் வெற்றிகளைக் குவிக்க இருப்பதாகப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us