கவிஞர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து திருப்பூரில் கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழாவிற்காக சென்றிருந்தார். அப்போது வழக்கறிஞர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கூட்டத்தில் காலணி வீசப்பட்டது.
இந்தக் காலனியை வீசியவர் 45வயது மதிக்கத்தக்க பெண்மணி. இவர் இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை காவல்துறையினர் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர் பெயர் ஜெயா என்பதும் அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் இதே போன்று தனது பைகளில் பல்வேறு விதமான மனுக்களை வைத்துக் கொண்டு அதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அடிக்கடி தர்ணாவில் ஈடுபடுவார் என்பதும் தெரியவந்தது.
இவர் திடீரென வைரமுத்து இருக்கும் கூட்டத்தை நோக்கி காலணி வீசியதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அந்த காலணி யார் மீதும் விழவில்லை. இதையடுத்து வைரமுத்துவை வழக்கறிஞர்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
Follow Us