சரத்குமார் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ள படம் ஆழி. இப்படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில், தேவிகா சதிஷ், இந்திரஜித் ஜெகன், தாமரைச் செல்வி, வையாபுரி மற்றும் ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடலை மையமாய் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இப்படத்தினை, இயக்குனர் மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார். மேலும், 888 புரொடெக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் ஆழி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார், தற்கால சினிமா குறித்துப் பல முக்கிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதாவது, "சினிமா படங்கள் மற்றும் ஓடிடி படங்கள் என நடிகர்கள் வித்தியாசம் பார்க்கக் கூடாது. எந்த ஊடகமாக இருந்தாலும், அதில் நமது சிறப்பான நடிப்பை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்று தான் என்ன வேண்டும். கால மாற்றத்திற்கு ஏற்ப, நாமும் நம்மைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
அதோடு, தற்காலத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்து, திரையில் வெளியிடுவது என்பது ஒரு சவாலான விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக, ஓடிடி தளங்கள் படத்தை வாங்கிய பிறகே, படத்தைத் திரையில் வெளியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறி, படம் வெளியான 50 நாட்களுக்குப் பிறகு தான், ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும். அப்போது தான் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள். தியேட்டர்களில் தான் ரசிகர்களின் உண்மையான ரசனையை நாம் புரிந்துகொள்ள முடியும்" என்று கூறியிருந்தார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படம் வருகின்ற 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Follow Us