'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் விஷால், இந்நிறுவனம் சார்பில் 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் படம் வெளியிடும் பணிகளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்தது. இறுதியாக லைகா நிறுவனத்திற்கு விஷால் 30 சதவீத வட்டியுடன் ஏற்கனவே அவர் கொடுக்க வேண்டிய 21.29 கோடி பணத்தை கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது லைகா நிறுவனத்திற்கு வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்பு ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விஷால் மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில், ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய 6 வார கால அவகாசம் கேட்டு விஷால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
Follow Us