நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

Advertisment

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் படம் வெளியிடும் பணிகளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்தது. இறுதியாக லைகா நிறுவனத்திற்கு விஷால் 30 சதவீத வட்டியுடன் அவர் வழங்க வேண்டிய ரூ.21.29 கோடி கொடுக்க வேண்டும் என கடந்த ஜூனில் நடந்த விசாரணையில் உத்தரவிடப்பட்டிருந்தது. 

Advertisment

அந்த உத்தரவை தற்போது அமல் படுத்த வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு புதிய வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா தரப்பு, ‘விஷால் தற்போது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மகுடம் என்ற ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். எனவே அந்தப் படத்திற்கு அவர் பெறப்படும் தொகையை நீதிமன்றத்திற்கு டெபாசிட் செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விஷால் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.