தவெக தலைவர் விஜய் கடந்த 4ஆம் தேதி தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே தனது கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தியிருந்தார். அப்போது விஜய்யின் வாகனத்தை அவரது தொண்டர்கள் பலரும் பின் தொடர்ந்திருந்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் வாகனம் மீது மோதி விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் விக்னேஷ் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நண்பருக்கு இடுப்பு எலும்பு முறிந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடாத நிலையில் அதனை பலரும் சமூக வலைதளத்தில் கண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விஜய் அறிக்கை வெளியிடாதது குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யே அறிக்கை வெளியிடவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்” என கொஞ்சம் சிரித்து கொண்டே பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நம்மை நாம் தான் ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேண்டும். ஒரு வாகனத்தை பின் தொடர்ந்து போவது தவறான விஷயம். அந்தளவிற்கு ஏன் இருக்க வேண்டும். பிடித்திருந்தால் மனதிற்குள் வைத்து கொள்ளலாம். அதற்காக உயிரைப் பணயம் வைத்துப் போகக்கூடாது. தயவு செய்து அப்படி செய்யாதீர்கள்” என்றார். கெந்திரன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘வடம்’ படம் கடந்த 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டிய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
Follow Us