அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான படம் சிறை. இப்படத்தில் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இவரோடு விக்ரம் பிரபு, அனிஷ்மா, அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்ரம் பிரபுவுக்கு இது 25வது படம். இசை ஜஸ்டின் பிரபாகரன்.
இப்படத்திற்கு டாணாக்காரன் பட இயக்குநர் கதை எழுதி சுரேஷ் ராஜகுமாரியுடன் திரைக்கதையும் எழுதி இருக்கிறார். மேலும் உண்மை சம்பவ கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. வேலூரில் ஐந்தாண்டுகளாக விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் அக்ஷயை, சிவகங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்த பஸ்ஸில் அழைத்து செல்கிறார் போலீஸ் ஏட்டு விக்ரம் பிரபு. இவர்கள் செல்லும் வழியில் அறிமுக நாயகன் அக்ஷய் பஸிலிருந்து தப்பி ஓடி விடுகிறார். அவரை விக்ரம் பிரபு அண்ட் டீம் வலைவீசி தேடுகின்றனர். இதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு அவரை கண்டுபிடித்தாரா, இல்லையா? கொலை குற்றவாளி அக்ஷய் தப்பிக்க காரணம் என்ன? அவருக்கு நீதி கிடைத்ததா, இல்லையா? என்பதே சிறை படத்தின் கதை.
இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 23ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது. இது குறித்து பேசிய விக்ரம் பிரபு, “இந்தப் படம் என்னுடைய 25 ஆவது படமாக அமைந்ததில் சந்தோஷம் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அதற்கு நன்றி” என்றார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்தால் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us