விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 6ஆம் தேதி காலை அவசர வழக்கு தொடுத்தது. பின்பு அன்றைய தினம் பிற்பகலிலே நீதிபதி ஆஷா தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்திருப்பதாகவும் அதன் காரணமாகவே மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, யார் புகார் கொடுத்தார் என்பதை தாக்கல் செய்ய தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு அடுத்த நாளான 7ஆம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தார். அதன்படி, அடுத்த நாள் புகார் கொடுத்த விவரங்களை தணிக்கை வாரியம் தாக்க செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? சான்று வழங்க முடிவெடுத்த பின்பும் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என பல்வேறு கேள்விகளை அடுக்கினார். இதற்கு, படத்தில் பாதுகாப்பு படையின் சின்னத்தை சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் பல்வேறு பதில்களை தணிக்கை வாரியம் தெரிவித்தது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் திர்ப்பை 09.01.2026 அன்று ஒத்திவைத்தார்.
அதன்படி 9ஆம் தேதி காலை, அதாவது நேற்று காலை, தீர்ப்பை வழங்கினார். படத்திற்கு யு/ஏ 16+ சான்று வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இது வெளியான உடனடியாக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, சென்சார் சான்றிதழ் பெறும் முன்னரே எதற்காக ரிலீஸ் தேதியை அறிவித்தீர்கள், தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக உங்கள் விருப்பத்துக்கு எல்லாரும் செயல்பட முடியுமா? என பல்வேறு கேள்விகள் தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டு, தனிநீதிபதி பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்த சூழலில் பட தயாரிப்பு நிறுவனம் இடைக்காலத் தடை உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் நாளை மறுநாளான 12ஆம் தேதி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/10/452-2026-01-10-14-30-41.jpg)