அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய்,சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நேற்று முன் தினம் நடந்தது. அதோடு விஜய்யின் கடைசி படம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் ‘தளபதி திருவிழா’ எனும் பெயரில் அங்கு இசை கச்சேரியும் நடந்தது. இதனாலும் விஜய்யின் கடைசி படம் என்பதாலும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை கோலாகலமாக்கினர். கிட்டத்தட்ட 80,000 பேர் கலந்து கொண்டனர். இதூ மலேசியா சாதனை புத்தகத்தில் அதிக பேர் கலந்து கொண்ட நிகழ்வாக இடம் பிடித்தது.
இந்நிலையில் கேரளாவில் படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கேரள விநியோக உரிமையை வாங்கிய எஸ் எஸ் ஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் ஜனநாயகன்படத்தின் முதல் காட்சியை அதிகாலை 4 மணிக்கு தொடங்க அனைத்து விதமான முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டோம்.
தொடக்கத்தில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் எழுந்துள்ள சில சிக்கல்கள் காரணமாகவும் தற்போதைய சூழ்நிலை காரணமாகவும் அந்த 4 மணி காட்சி ரத்தாகியுள்ளது. அதற்கான அனுமதியை தற்போது பெற முடியவில்லை. அதனால் கேரளாவில் ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி காலை 6:00 மணிக்கு தொடங்கும். கேரளாவில் உள்ள அனைத்து விஜய் ரசிகர்களிடமும் திரையிடலில் ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஜனவரி 9ஆம் தேதி முதல் காட்சியை ரசிகர்கள் முழு மனதுடன் ஆதரித்து மாபெரும் வெற்றி பெறச் செய்வார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கேரள விஜய் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்.
Follow Us