நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 7ஆம் தேதி நீதிபதி ஆஷா முன்பு வந்த போது, படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்ததாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தணிக்கை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா, வழக்கின் தீர்ப்பை கடந்த 9ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். இதனால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி, 9ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஆஷா, படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். மேலும் மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவையும் ரத்து செய்தார்.
இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனடியாகவே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தலைமை நீதிபதியின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியம், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்தது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கில் ஜனவரி 20ஆம் தேதியே முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படி நாளை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளது. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவதால் அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் முக்கிய வழக்காக பார்க்கப்படுகிறது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/12-23-2026-01-19-20-01-04.jpg)