தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான நடிகை ராஷ்மிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நாளை(04.03.2026) ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என ஏராளமானோருக்கு விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதி நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர்.
இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா தனது சொந்த ஊரான தெலுங்கானாவில் உள்ள தும்மனபேட்டாவிற்கு மனைவி ராஷ்மிகா மற்றும் குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள தனது வீட்டின் கிரஹப்பிரவேசம் மற்றும் சத்யநாராயண விரத பூஜையை நடத்தினார். இதில் பேசிய அவர், ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்தார். அதாவது அப்பகுதியில் இருக்கும் 44 அரசுப் பள்ளிகளில் பத்தாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை தரவுள்ளதாக தெரிவித்தார்.
இதனை தனது அறக்கட்டளை மூலம் செய்வதாக தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடி இல்லாமல் மாணவர்கள் கல்வியை பயில வேண்டும் என இந்த உதவியை செய்வதாகக் கூறினார். மேலும் இனிமேல் தனது கிராமத்திற்கு தவறாமல் அடிக்கடி வருவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட அந்த ஊர் மக்கள் விஜய் தேவரகொண்டாவை வெகுவாக பாராட்டினர். திருமணம் முடிந்த பிறகு உடனடியாக அறிவிக்கப்பட்ட இந்த உதவித்தொகையால் விஜய் தேவரகொண்டா அந்த ஊர் மக்களின் அன்பை பெற்றுள்ளார்.
Follow Us