Advertisment

“பல வருட வலி, கண்ணீர்...” - திலீப் விடுதலை குறித்து பாதிக்கப்பட்ட நடிகை அறிக்கை

20 (34)

கேரளாவில் 2017ஆம் ஆண்டு ஒரு மலையாள நடிகை 6 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடைமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. 8 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப்பை விடுதலை செய்தது. இதில் முதல் குற்றவாளி பல்சர் சுனிலுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்பு மற்ற ஐந்து குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 

Advertisment

இந்த தீர்ப்பில் திலீப்பின் விடுதலை கடும் விவாதத்துக்கு உள்ளானது. மலையாள நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன் மற்றும் ரீமா கலிங்கல் உள்ளிட்ட பலரும் தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இவர்களோடு பெண்கள் நல அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே கேரளா அரசு சார்பில் திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். 

Advertisment

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த புகார் கொடுத்த நடிகை தற்போது நீதிமன்ற தீர்ப்பு குறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “8 ஆண்டுகள் 9 மாதங்கள் 23 நாட்களுக்கு பிறகு மிக நீண்ட வேதனையான பயணத்தின் முடிவில் இறுதியாக ஒரு சிறிய வெளிச்சத்தை காண்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதற்காக நான் நன்றி உணர்வாக இருக்கிறேன். இந்தத் தருணத்தை என் வலியை பொய் என்றும் இந்த வழக்கை ஒரு புனையப்பட்ட கதையென்றும் கூறி வருபவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நீங்கள் இப்போது மன அமைதியுடன் எப்படி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

குற்றம் சாட்டப்பட்ட ஏ1 எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்று இப்போதும் கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன் அது முற்றிலும் பொய்யான தகவல். அவர் என் ஓட்டுநர் அல்ல என் ஊழியரும் அல்ல எனக்கு தெரிந்தவரும் அல்ல. 2016ல் நான் நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்திற்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்ட ஒரு அறிமுகம் இல்லாத நபர். அந்த நேரத்தில் அவரை ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே சந்தித்து இருக்கிறேன். இந்த குற்றம் நடக்கும் நாள் வரை அவரை அதன் பிறகு சந்திக்கவே இல்லை. தயவுசெய்து தவறான கதைகளை பரப்புவதை நிறுத்துங்கள். இந்த தீர்ப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் அது என்னை ஆச்சரியபடுத்தவில்லை. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே. ஏதோ சரி இல்லை என்று நான் உணரத் தொடங்கினேன். 

குறிப்பிட்ட குற்றவாளியின் விஷயத்தில் வழக்கு கையாளப்பட்ட விதத்தையும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் வழக்கறிஞர் தரப்பும் கவனித்தது. பல ஆண்டுகளாக இந்த நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று தெளிவாக சொல்லி நான் பலமுறை உயர்நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறேன். இந்த வழக்கை அதே நீதிபதியிடம் இருந்து மாற்றுவதற்கான ஒவ்வொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. பல வருட வலி, கண்ணீர் மற்றும் உணர்ச்சி போராட்டங்களுக்குப் பிறகு நான் ஒரு வேதனையான உண்மையை உணர்ந்துள்ளேன். இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை. இறுதியில் மனிதர்களின் தீர்ப்புகள் முடிவுகளை எவ்வளவு வலிமையாக வடிவமைக்க முடியும் என்பதை இந்த தீர்ப்பு எனக்கு உணர்த்தியது. ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை என்பதையும் நான் அறிவேன். 

இந்த நீண்ட பயணம் முழுவதும் எனக்குத் துணையாக நின்று அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் அவதூறான கருத்துக்கள் மற்றும் பணம் பெற்றுக் கொண்டு எழுதப்பட்ட கதைகள் மூலம் என்னை தொடர்ந்து தாக்குபவர்களே உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை தொடர உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. இந்த விசாரணை என்பது நீதிமன்றம் மீது நான் நம்பிக்கை இழந்ததற்கான காரணங்களை சொல்கிறேன். முதலில் எனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. இந்த வழக்கில் மிக முக்கியமான ஆதாரம் - மெமரி கார்டு நீதிமன்ற காவலில் இருந்த போது மூன்று முறை சட்ட விரோதமாக அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது. 

அடுத்ததாக இரண்டு அரசு வழக்கறிஞர்கள் இந்த வாரத்தில் இருந்து விலகினர். நீதிமன்ற சூழல் அரசு தரப்புக்கு விரோதமாகிவிட்டது என்று தெளிவாக கூறினர். நீதிமன்றம் பாரபட்சமாக இருப்பதாக அவர்கள் உணர்ந்ததால் இந்த நீதிமன்றத்தில் இருந்து நீதி எதிர்பார்க்க வேண்டாம் என்று இரண்டு பேருமே தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினார்கள். அடுத்ததாக மெமரி கார்டு சிதைக்கப்பட்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும் நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டதன் விளைவாகவே விசாரணை அறிக்கை எனக்கு வழங்கப்பட்டது. 

அடுத்ததாக நான் ஒரு நியாயமான விசாரணைக்காக போராடிக் கொண்டிருந்தபோது இந்த வழக்கை அதே நீதிபதியே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மனு தாக்கல் செய்தார். இது என் மனதில் இன்னும் ஆழமான சந்தேகங்களை எழுப்பியது. அடுத்ததாக எனது கவலைகளை தெரிவித்தும் தலையீடு கோரியும் இந்திய குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் கடிதங்கள் எழுதினேன். பொதுமக்களும் ஊடகங்களுக்கும் முன்பு வழக்கில் என்ன நடக்கிறது என்பதை நேரடியாக பார்க்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளை திறந்த வெளியில் நடத்த வேண்டும் என்று நான் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது” என முடித்துக் கொண்டார். 

Actress Dileep
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe