அஜித்தின் 50வது படமான ‘மங்காத்தா’ நேற்று உலகமெங்கும் ரீ ரிலிஸானது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடனும் கொண்டாட்டத்துடனும் வரவேற்றனர். இவர்களோடு படக்குழுவினரான இயக்குநர் வெங்கட் பிரபு, வைபவ், மகத் உள்ளிட்ட பலரும் திரையரங்கில் படம் பார்த்து ரசித்தனர்.
படம் பார்த்து முடிந்த பின்பு வெங்கட் பிரபு ரசிகர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். அப்போது ரசிகர்கள் ‘மங்காத்தா 2’ குறித்த கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “அஜித் சொன்னால் ஓகே தான். முதல் பாகத்தை அவர் தான் சொன்னார். இரண்டாம் பாகத்தையும் அவர் தான் சொல்ல வேண்டும்” என்றார். உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அஜித் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். படம் பொறுத்தவரை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த மாதத்தில் இருந்து ஒரு படம் நடிக்கவுள்ளார். இதனை முடித்துவிட்டு அடுத்த படம் குறித்தான முடிவை எடுப்பார்.
‘மங்காத்தா’ படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இப்படத்தில் அஜித்தோடு அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவரது இசையில் வெளியான பாடல்களும் குறிப்பாக தீம் மியூசிக்கும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் முன்னதாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான கதையும் அஜித்திடன் சொல்லிவிட்டதாக 2022ஆம் ஆண்டு வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கடுத்து அது அடுத்தக்கட்டத்துக்கு நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் அதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பதால் வெங்கட் பிரபுவின் பேச்சு ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.
Follow Us