விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை(09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. இதையடுத்து தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் படம் தள்ளிபோவதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. மேலும் புது ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தது.
இதனிடையே சான்றிதழ் வழங்காதது தொடர்பாக அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் வட்டாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு தான் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சினிமா வட்டாரத்தில் திரைத்துறை கஷ்டமாப்ன காலத்தில் இருப்பதாக விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். அந்த வகையில் இயக்குநர்கள் அஜய் ஞானமுத்து, ரத்ன குமார், கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் சிபி சத்யராஜ், ரவி மோகன், சிம்பு உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வெங்கட் பிரபு, “என்ன நடந்தாலும் சரி. இது இந்தியத் திரையுலகிலேயே மிகப்பெரிய ஃபேர்வெல் நிகழ்வாக இருக்கப் போகிறது” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் விஜய்யை வைத்து தி கோட் படத்தை இயக்கியிருந்தார். இதுதான் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us