பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் அவரது 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இதனால் முத்துராமலிங்க தேவரின் உருவச்சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து, முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவர், “கடந்தகாலத்தில் பெருமைக்குரிய பெரியவர்களின் பெயர்களோடு ஒட்டியிருக்கும் பின்னொட்டு சாதிப்பெயர்கள் என்று கருதப்படக் கூடாது. அவை அந்தந்தக்காலப் புழக்கங்கள் அடையாளங்கள் மற்றும் ஆகுபெயர்கள்.
ஜி.டி.நாயுடுவை நாயுடு என்றே அழைக்கலாம். உ.வே.சாமிநாதய்யரை அய்யர் என்றே விளிக்கலாம். வ.உ.சிதம்பரம்பிள்ளையைப் பிள்ளை என்றே வழங்கலாம். இவற்றுள் எதுவும் அவர்களின் சாதி அபிமானத்தின் சாட்சி அல்ல. அதைச் சாதிக்கு மட்டுமான பெருமிதமாகக் கருதுவதுதான் சமூகப் பிழை. அப்படித்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பட்டப் பெயரும்.
இவை யாவும் அவரவர் காலத்துக் குறியீடுகளே, அவற்றை அழிப்பதற்கு நமக்கென்ன உரிமை? நானோ என் மகன்களோ சாதிப்பெயர்களை இட்டுக்கொள்ள மாட்டோம். என் பாட்டன்களோ என் தந்தையோ இட்டுக்கொண்டதை நாங்கள் எப்படித் தடுக்க முடியும் அல்லது அழிக்க முடியும். சாதிக்கு முன் சாதிக்குப் பின் என்று இரண்டு காலங்கள் உண்டென்று வரலாறு வகிர்ந்து சொல்லட்டும். ஆதலால், ஓங்கிச் சொல்லலாம் தேவர் திருமகன் வாழ்க; தேவர் திருப்பெயர் வாழ்க; தேவர் தியாகங்கள் வாழ்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us