Advertisment

“கறுப்பு காந்தி ... செங்கொடி சுமந்த சிங்கம்...” - வைரமுத்து இரங்கல்!

17 (56)

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாகப் பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து நல்லகண்ணு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவக் கண்காணிப்பில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இத்தகைய சூழலில் தான் மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 1ஆம் தேதி நல்லகண்ணு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

Advertisment

அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று முன்தினம் (23.02.2026) இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நல்லகண்ணுஅதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று (25.02.2026) மதியம் 01.55 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து, “தோழர் நல்லகண்ணு மறைந்துவிட்டார். சிவப்புக் கட்சியின் கறுப்பு காந்தி இறந்துவிட்டார். எழுந்தாலும் விழுந்தாலும் கடலின் புகழ்பாடும் அலைபோல, கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் செங்கொடி சுமந்த சிங்கம் அவர். கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின்மீது கொண்டிருக்கும் மதிப்புக்கு நல்லகண்ணுவின் வாழ்க்கைமுறை ஒரு காரணம். சுதந்திர இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இன்றுவரை உயிர்ப்போடு இருப்பதற்கு நல்லகண்ணு போன்றோரின் தியாகமே காரணம். செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும். அவர் வாழ்ந்தது
ஒரு நூறாண்டு; அவரை மறக்காது இந்த நூற்றாண்டு. அவருக்கு என் செவ்வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Vairamuthu nallakannu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe