கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால், ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த சனிக்கிழமையன்று (28-02-26) தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலில் ஈரான் தலைநகர் தெக்ரானின் பல பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதலை நடத்தியது. இந்த பதில் தாக்குதல் கடுமையானதாக இருந்து வரும் நிலையில், இஸ்ரேல் கடுமையான சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களால், கடுமையான உயிர் இழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் வெளியாகி, அதில் மக்கள் அலறும் சத்தம், நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகளைக் காண முடிகிறது. இந்த தாக்குதல்களில் பல ஆயிரம் மக்கள் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது. இது உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், போரை ஏற்க முடியாது, அது மனிதக் குலத்திற்கு எதிரானது என்று பலரும் போர் குறித்தான தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்துவும், போர் மனிதக் குலத்திற்கு அழிவைத் தான் ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில், தனது ஸ்டைலில் ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும். மனிதர்களின் தோள் வலிமையைத் தாண்டித் தொழில் நுட்பப் பிசாசுகளின் கைகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டது போர். அணு ஆயுத அழிவுகள் அனுமானிக்க முடியாதபடி இருக்கும். பைத்தியக்காரன் இழுக்கும் நேர்கோடு எப்போதும் நேராக வாராது; போரும் அப்படித்தான். நமது சாப்பாடும் தூக்கமும் ஏதோ ஒரு நாட்டின் நகர்வோடு முடிச்சுப் போடப்பட்டுவிட்டது. ஈரானின் ‘ஹோர் முஸ்’ நீரிணை மூடப்பட்டுவிட்டால் தெற்காசியாவின் ரத்தஓட்டமே சீர்கெட்டுப்போகும். ஒவ்வொரு வீட்டு உண்டியலும் களவாடப் படும்.
மூளும் போர் நீளும் போராக இல்லாமல் நிறுத்தப்பட வேண்டும். ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் நாற்காலிகளில் ஏறிநின்று பேசவேண்டும். ‘போர் ஒழிக’ இல்லையேல் ஒவ்வொரு நாட்டுச் சூரியனும் மூடப்படும். தொலைக்காட்சிகளின் போர்க் காட்சிகளை வாண வேடிக்கையென்று காணவேண்டாம் யாரும். அதுவே சொந்த வீதியில் நடந்தால் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். எல்லா மனிதரும் போருக்கு எதிரான பதாகையாக வேண்டும்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us