தமிழகத்தில் பொங்கல் நேரத்தில் பல்வேறு வகையான மஞ்சு விரட்டுகள் நடப்பது வழக்கம். அதில் ஒரு வகையான வடமஞ்சுவிரட்டு தென் மாவட்டங்களில் மிகவும் ஃபேமஸ். அந்த விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த வடம் திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்று இருக்கிறது.
வட மஞ்சுவிரட்டுக்காக மாடுகளை வளர்த்து அதில் ஜெயிக்கும் மாடுகளை மட்டும் தன் வசம் வைத்துக்கொண்டு மற்ற மாடுகளை அடிமாட்டு விலைக்கு தள்ளி விடுவது நட்டியின் வழக்கம். அந்த வகையில் பிறந்து சில நேரங்களேயான ஒரு கண் பார்வையற்ற காளை கன்றை அவர் விற்க அது சிறுவயது விமிலிடம் வந்து சேருகிறது. விமல் அதை தன் தம்பி போல் வளர்த்து பெரிய காளையாக மாற்றி வட மஞ்சுவிரட்டில் அதை பங்கேற்க செய்து அதை வைத்தே வெற்றி கொடி நாட்டுகிறார். இது நட்டிக்கு பிடிக்காததால் அந்த மாட்டை தன் வசப்படுத்த அவர் முயற்சி செய்ய இதனால் விமலுக்கும் நட்டிக் குடும்பத்திற்கும் பகை ஏற்படுகிறது. அந்தப் பகையில் நட்டிக் கொல்லப்படுகிறார். போலீசார் விமலை கைது செய்கின்றனர். இதைத்தொடர்ந்து நட்டியை கொலை செய்தது யார்? விமல் அந்த கொலையை செய்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
ஒரு மைதானத்தில் நடுவில் ஓட்டை போட்டு அதனுள் ஒரு பெரிய பாறாங்கலுடன் ஒரு கயிறு கட்டி சுற்றி வட்டமாக வரைந்து அதில் ஒரு காளை மாட்டை கட்டி அதை வலம் வர செய்து அதை அடக்கும் விளையாட்டாக இந்த வட மஞ்சுவிரட்டு விளையாடப்பட்டு வருகிறது. இதை மையமாக வைத்து ஒரு கதையை உருவாக்கி மண் மணம் மாறாத தென் மாவட்டத்தை சேர்ந்த படமாக இப்படத்தை உருவாக்கி அதை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கேந்திரன். நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பல்வேறு வகையான மதுரை சார்ந்த கதைகளத்துடன் பழிவாங்கல் கதையாகவே இப்படத்தையும் உருவாக்கி இருக்கும் இயக்குநர் திரைக்கதையில் இன்னமும் கூட சுவாரசியத்தை கூட்டி இருக்கலாம். படம் ஆரம்பித்து போகப் போக நாம் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும்படி இருப்பது படத்திற்கு சற்றே மைனஸ்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/07/375-2026-03-07-17-15-12.jpg)
அதேபோல் வழக்கமான பழிவாங்கல் கதையாகவும் அதேசமயம் மஞ்சுவிரட்டு சார்ந்த விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையாகவும் கொடுத்த இயக்குநர் அதில் ஹீரோயிசம் காட்டி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கு ஓரளவு பலன் கிடைத்திருந்தாலும் இன்னமும் கூட இந்த கால கட்டத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதையில் கவனம் செலுதியிருக்கலாம். இக்கால ரசிகர்களுக்கு ஏற்ற சுவாரசியத்தை கூட்டி கொடுத்திருந்தால் இன்னுமும் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும். மற்றபடி நாம் ஏற்கனவே பார்த்து பழகிய விஷயங்களை சற்று போரடிக்காமல் சொல்லியிருக்கிறார். அது படத்திற்கு பிளஸ்.
விமல் கிராமத்து இளைஞராக வீரமிக்க கதாபாத்திரத்தில் சிறப்பான விளையாட்டு வீரராக நடித்து, தனக்கே உரித்தான வழக்கமான நடிப்பை சிறப்பான முறையில் காண்பித்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி சனஷ்கா ஸ்ரீ, வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான விஷயங்களை செய்துவிட்டு வழக்கமான முறையில் சென்று இருக்கிறார். வில்லனாக வரும் நட்டி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் முனீஸ் காந்த் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். ஊரில் பெரிய தல கட்டாக வரும் ஆடுகளம் நரேன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். நண்பராக வரும் பால சரவணன் வழக்கம்போல் கலகலப்பூட்டி இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
டி இமான் இசையில் கிராமம் சம்பந்தப்பட்ட பாடல்களாகவே இருந்தாலும் ஒருமுறை கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது. இருந்தும் பாடல்களில் பழைய இமான் மிஸ்ஸிங். மற்றபடி பின்னணி இசையில் வழக்கம் போல் சிறப்பான முறையில் இசையை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தி. வழக்கமான கிராமத்து பின்னணியில் பழிவாங்கல் கதையாகவே உருவாகியுள்ள இந்த படம் அது போன்ற படம் பார்த்து பழக்கமான ரசிகர்களுக்கு ஏற்ற படமாக மாறி ரசிக்க வைத்திருக்கிறது.
வடம் - அடம்!
Follow Us