தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்வி ஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சில படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு ஒருதலைபட்சமாக விருது வழங்கியுள்ளதாகவும் இயக்குனர்கள் பா.ரஞ்சித், கெளதம்ராஜ் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இவ்விருது வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (13-02-26) நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அனைவருக்கும் விருதுகளோடு சான்றிதழும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரம், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்கு ரூ.1.25 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “இந்தியாவிலேயே ரொம்ப ஒரு வைப்ரண்டான ஒரு துரை என்றால் நம்முடைய தமிழ் திரைப்பட துறை என்று சொன்னால் அது மிகையாகாது. வருட வருட ஒவ்வொரு ஜானரிலும் ஒவ்வொரு முக்கியமான் படங்களை நம்முடைய தமிழ் திரையுலகம் வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டையும், சினிமா மற்றும் டிவி துறையையும் பிரித்து பார்க்க முடியாது. அதற்கு சிறந்த உதாரணம், தமிழ் திரையுலகினுடைய மிக மூத்த கலைஞர் என்.எஸ். கிருஷ்ணனின் பெயரின் அமைந்திருக்கக்கூடிய அரங்கத்தின் தான் இந்த நிகழ்ச்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம். கலைத்துறை சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் கடந்த மூன்றரை, நான்கு வருடங்களாக எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்வதில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியை என்னால் தவிர்க்க முடியவில்லை.
ஏனென்றால், உங்களில் இருந்து உருவாகி வந்தவன் நான். இன்னும் சொல்லப்போனால் ரொம்ப நாளுக்கு பிறகு பள்ளி வகுப்புக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கிறது. அந்த உரிமையோடும், பெருமையோடும் உங்களை எல்லாம் சந்திக்க நான் வருகை தந்திருக்கிறேன். இந்த விருதுகள் அறிவிக்கப்பட்ட உடனே நிறைய விமர்சனங்கள் வந்தது. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஒரே பதில், பல ஆண்டு காலமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. நம்முடைய முதல்வர் பொறுப்பேற்றவுடன் உடனடியாக இந்த விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் கே.பி.கே வாசுகி தலைமையில் ஒரு தேர்வு குழுவை நம்முடைய முதல்வர் அறிவித்தார். அந்த தேர்வு குழுவினுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் தான் இன்றைக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது. எனவே முழுக்க முழுக்க கிரெடிட் பேஸில் தான் இந்த விருதுகள் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. கலைத்துறையில் இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும், விருது அறிவித்து கொடுத்தோம் என்றால் ஒரே நேரத்தில் எல்லோருக்கும் கொடுக்க முடியாது. எனவே, விருது பெற்றவர்கள் தமிழ் கலைத்துறைக்கு எவ்வளவு பெருமைகளை தேடி தந்து கொண்டிருக்கிறீர்களோ, அதே போல் அதே அளவுக்கு மற்றவர்களும் நிச்சயமாக நம்முடைய தமிழ்நாட்டுக்கு பெருமைகளை தேடி தந்து இருக்கிறார்கள். அவர்களுக்கான அங்கீகாரம் நிச்சயமாக உரிய நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/13/udhacine-2026-02-13-20-15-21.jpg)