திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது 1929ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 98வது ஆண்டு ஆஸ்கர் விழா 2026 மார்ச் மாதம் நடக்கவிருக்கிறது.
ஆஸ்கர் விழாவில் ஆங்கில மொழி திரைப்படங்களை தவிர்த்து சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் மற்ற நாட்டு மொழி படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தங்களது நாட்டின் அதிகாரப்பூர்வ படம் என ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து இந்தி படமான ‘ஹோம்பவுண்ட்’(Homebound) படம் அனுப்பட்டது. இது தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அடுத்து நாமினேஷனுக்கான இறுதி பட்டியலில் போட்டியிடுகிறது. இந்த பட்டியலின் முடிவுகள் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது.
இந்த போட்டியில் பொதுப் பிரிவில் சில பிரிவுகள் இருக்கிறது. இதில் அனைத்து மொழி சார்ந்த படங்களையும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் அனுப்பலாம். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. அதாவது ஜனவரி 1 மற்றும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அமெரிக்காவின் ஆறு பெருநகரங்களில் குறைந்தது ஒரு நகரத்திலாவது திரையிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் அத்திரையரங்கில் குறைந்தபட்சம் 7 நாட்கள் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என இன்னும் சில விதிமுறைகள் இருக்கிறது. இந்த வகையிலே ராஜமௌலி - கீரவாணி கூட்டணியில் வெளியான ‘நாட்டு நாட்டு’(ஆர்.ஆர்.ஆர்) பாடல் சிறந்த பாடலுக்கான விருதை வென்றது.
அந்த வகையில் பொதுப் பிரிவிகளுக்கு போட்டியிடும் படங்கள் குறித்த விவரங்களை ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்தாண்டு 317 படங்கள் போட்டியிடுவதாகவும் அதில் 201 படங்கள், சிறந்த திரைப்படம்(Best Picture) பிரிவில், போட்டியிட தகுதிப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அந்த தகுதிப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 5 படங்கள் இடம் பெற்றுள்ளன. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’(தமிழ்), ‘காந்தாரா சாப்டர் 1’(கன்னடம்), ‘தான்வி தி கிரேட்’(இந்தி), ‘சிஸ்டர் மிட்நைட்’(இந்தி) மற்றும் அனிமேஷன் படமான ‘மஹாவதார் நரசிம்மா’ ஆகிய படங்கள் ஆகும். இதே பிரிவில் கடந்த ஆண்டு நடந்த 97வது ஆஸ்கர் விருது விழாவில் சூர்யாவின் ‘கங்குவா’ அனுப்பப்பட்டது. ஆனால் அடுத்தக் கட்டத்துக்கு செல்லவில்லை.
இந்த தகுதிப் பட்டியலில் தமிழ் படமான டூரிஸ்ட் ஃபேமிலி இடம் பெற்றுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படக்குழுவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow Us