ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வெளியான படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கல்வி நடக்கும் முறைகேடு மற்றும் போலீஸில் நடக்கும் தவறான என்கவுன்டர் ஆகியவை குறித்து பேசிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் இப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் ரூ.240 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி ஒராண்டை கடந்த நிலையில் பட அனுபவம் குறித்து இயக்குநர் த.செ.ஞானவேல் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், படத்தின் முக்கியமான கலைஞர்கள் ஒவ்வொருவரையும் பற்றி பகிர்ந்துள்ளார். ரஜினி குறித்து அவர் கூறுகையில், “ஜெய் பீம் படத்தால் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட் வேட்டையன். என்னுடைய சினிமா பயணத்தில் புதிய உயரங்களை அடைய அயராது உழைத்து, உச்சங்களை மறுவரையறை செய்யும் ஒரு லெஜண்டை இயக்கும் பாக்கியம் கிடைத்தது, ஒரு முக்கியமான மைல்கல்.
உச்சத்தை அடைந்தவர்களுக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன, ஆனால் ஒருவர் உச்சத்தை அடைந்த பிறகும் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்க நீங்கள்தான் ஒரு அளவுகோலாக இருக்கிறீர்கள். உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி சார். ” என்றுள்ளார்.
மேலும் ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் பற்றி கூறுகையில், “இந்திய சினிமாவின் இரண்டு மறுக்கமுடியாத வாழும் லெஜண்டுகளுக்கு ஒரே நேரத்தில் ‘ஆக்ஷன் - கட்’ என சொல்வது கனவாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தது” என்றார்.
ஃபகத் பாசிக் குறித்து பேசிய அவர், “ஃபஹத்ஃபாசிலுடன் பணிபுரிவது ஒரு நிறைவான கலை அனுபவம். வேட்டையன் படத்தில் அதியன்(ரஜினி) மற்றும் பேட்டரியின்(ஃபகத் ஃபாசில்) கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது, இரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு ஸ்பின் ஆஃப் படம் எடுக்க விரும்புகிறேன்” என்றார். பின்பு அனிருத் குறித்து பேசுகையில், “தலைவர் படம் என்றாலே அனிருத்துக்கு எப்போதும் ஸ்பெஷல் தான், நன்றி ராக் ஸ்டார்” என்றார். தொடர்ந்து படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயரிப்பு நிறுவனம் என அனைவருக்கும் நன்றி கூறினார்.