கடந்த 13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை த்ரிஷாவிடம் இருந்து அவர் வெளியே வர வேண்டும் எனவும் அவர் அவரது குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். 

Advertisment

நயினார் நாகேந்திரனின் இந்த நாகரீகமற்ற பேச்சு சர்ச்சையானது. இதற்கு பலரும் தற்போது கண்டனம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே திமுக பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் த்ரிஷா தரப்பில் அவரது வழக்கறிஞர் நித்யயேஷ் நடராஜ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “எனது கட்சிக்காரரும், புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகையுமான த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில், பின்வருவனவற்றைப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். ஊடகங்களில் பரவி வரும் எனது கட்சிக்காரரைப் பற்றிய மோசமான கருத்தைப் பற்றியது இது. மாநில அரசியலில் உயர் பதவியில் வகிக்கும் ஒருவரால் இதுபோன்ற மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிக்கப்படும் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

Advertisment

அவர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, மேலும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்பதை எனது கட்சிக்காரர் மிகத் தெளிவாகக் கூறுகிறார். மேலும், கடந்த காலத்தில் எனது கட்சிக்காரர் தொடர்ந்து பராமரித்தது போலவே, அரசியலில் அவர் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதத்திற்கு உட்படுத்தக்கூடாது என்பது பொதுவான பழமொழியாகும், மேலும் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது விவாதத்தில் பொறுப்பையும் சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனது கட்சிக்காரரின் பெயரை தேவையில்லாத விஷயங்களில் சேர்க்கப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த த்ரிஷா, “அவமரியாதை எப்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 

Advertisment