சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த மிரட்டல்கள் அனைத்தும் மெயில் மூலமாக டிஜிபி அலுவலகத்திற்கு வந்துள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் மோப்ப நாய்களுடன் சென்று சோதனை மேற்கொள்கின்றனர், முடிவில் அது புரளி என்பது தெரிய வருகிறது.
இதில் இதுவரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதல்வர் இல்லம், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் வீடு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருக்கும் சுங்க இல்ல தலைமை அலுவலகம் ஆகிய இடங்கள் அடங்கும். கரூர் சம்பவத்தை தொடர்ந்து நக்கீரன் அலுவலகத்துக்கும் மிரட்டல் வந்தது.
இவர்களைத் தாண்டி திரை பிரபலங்கள் வீட்டிற்கும் இந்த மிரட்டல் தொடர்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா வீட்டிற்கு மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளையராஜா அலுவலகத்திற்கு வழக்கம் போல் மெயில் மூலமாக டிஜிபி அலுவலகத்திற்கு வந்துள்ளது. இதனடிப்படையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். வழக்கம் போல் சோதனை முடிவில் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.