பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கி வரும் இவ்விருதை தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டும் கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்குகிறார். அதே வளாகத்தில் கடந்த சில நாள்களாக தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற கலை இயக்குநராக வலம் வருபவர் தோட்டா தரணி. இந்தியாவை தாண்டி ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழில் இவர் பணியாற்றிய நாயகன், இந்தியன், தளபதி, சந்திரமுகி, சிவாஜி, தசாவதாரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களின் கலை அமைப்புகள் தத்ரூபமாகவும் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. நாயகன் மற்றும் இந்தியன் படத்திற்காக தேசிய விருதை இவர் வென்றிருந்தார். மேலும் இவரது பணியை கௌரவித்து 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இந்திய அரசு கொடுத்தது.
Follow Us