ஆரண்ய காண்டம் படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது வென்று கவனிக்கத்தக்க இயக்குநராக மாறினார் தியாகராஜன் குமாரராஜா. இப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றிருந்தார். இது அவருக்கு முதல் தேசிய விருது. 

Advertisment

இப்படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் பெரிதாக வெளிவரவில்லை. இடையில் குட் நைட் மணிகண்டனை வைத்து ஒரு படம் இயக்குவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதைதொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடந்த டிசம்பரில் கூறப்பட்டது. மேலும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் எனவும் சொல்லப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே தவலில் சொல்லப்பட்டது போல் விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் படம் இயக்குகிறார். இப்படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் எழில்மதியுடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்கிறார் தியாகராஜன் குமாரராஜா. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், கிஷோர் மற்றும் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி நடிக்கிறார்கள். இதில் ராஜ் பி ஷெட்டி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இசை இளையராஜா. 

‘பாக்கெட் நாவல்’ எனும் தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படம் தமிழ், கன்னடம் உட்பட நான்கு மொழிகளில் வெளியாகிறது. 

Advertisment