விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாக இருந்த படம் ஜனநாயகன். இப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. படத்திற்குத் தணிக்கை சான்று கிடைக்காததால், படத்தை வெளியிட முடியாமல் போனது எனக் கூறப்பட்டது. படத்தின் சில காட்சிகள் ஆட்சேபனைக்குரியதாக இருப்பதாகவும், அதனால் இப்படத்தை மறு ஆய்விற்கு அனுப்ப இருப்பதாகவும் தணிக்கை வாரியம் தெரிவித்திருந்தது. இருப்பினும், இப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்று அளிக்கத் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக்கோரி உயர் நீதி மன்றத்தை நாடியது படக்குழு.
இந்த வழக்கில், ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சாறு வழங்க வேண்டுமென்று தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்தது தணிக்கை வாரியம். இதன் காரணமாக உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தணிக்கை சான்று பெறவேண்டி உச்சநீதிமன்றத்தை நாடியது படக்குழு. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கிற்கான நிவாரணத்தைப் பெற உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு அறிவுறுத்தி, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. பின்பு, மீண்டும் இந்த வழக்கு கடந்த 20ம் தேதி உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில், தணிக்கை வாரிய உறுப்பினர் சான்று வழங்க ஆட்சேபனை தெரிவித்ததாகவும் அதனால் இந்த படத்தை மறு ஆய்விற்கு அனுப்பியுள்ளதாகவும் தணிக்கை வாரியத்தின் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதே நேரத்தில், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகாததால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் படக்குழு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us