திரையரங்குகளில் பார்க்கிங் பிரச்சனை, இந்தியா முழுவதும் இருக்கிறது. அதாவது அதிகமாக வசூலிப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில், முன்னதாக கே.சி.சந்திரசேகரராவ் முதலமைச்சராக இருந்த சமயத்தில் சிங்கிள் திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இதை பின்பற்றின. ஆனால் சிங்கிள் திரையரங்குகள் தங்களுக்கு நிதி சிக்கல் ஏற்படுவதாக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தின. இதையடுத்து 2021ஆம் ஆண்டு பார்க்கிங் வசூலிக்க அனுமதித்து அரசாங்கம் ஒரு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் ஒரு திரையரங்கில் ரூ.20 பார்க்கிங் கட்டணம் வாங்கியதாக பிரேம் ராமாவத் என்பவர் தெலங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சிங்கிள் திரையரங்கில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையையும் ரத்து செய்துள்ளது. அதோடு பார்வையாளர்கள் ஒரு டிக்கெட் வைத்திருந்தால் அவருக்கு பார்க்கிங் இலவசமாக வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
Follow Us