நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 7ஆம் தேதி நீதிபதி ஆஷா முன்பு வந்த போது, படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்ததாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா, வழக்கின் தீர்ப்பை கடந்த 9ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். இதனால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி, ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் நீதிபதி ஆஷா கடந்த 9ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில், ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவையும் ரத்து செய்தார்.
இந்த தீர்ப்பின் மூலம் விஜய்யின் ஜன நாயகன் படம் விரைவில் திரைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அதனை தொடர்ந்து, தலைமை நீதிபதியின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. இதனால் ஜன நாயகன் படம் வெளியாக தொடர்ந்து சிக்கல் எழுந்தவண்ணமே இருந்தது.
இந்த நிலையில், படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு இன்று (15-01-26) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மசிஹ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ‘இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை. எனவே, ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள். சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வாதத்தை முன்வையுங்கள்’ என்று படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கில் ஜனவரி 20ஆம் தேதியே முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/15/jananayaga-2026-01-15-11-48-10.jpg)