சூரி தற்போது செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கும் ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தவிர்த்து ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் முன்னதாகவே அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ரிலீஸாவதில் தாமதம் நீடிக்கிறது.
இந்த நிலையில் சூரி மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தான் கடந்து வந்த பாதை குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, “2009இல் வெண்ணிலா கபடி குழு படம் வெளியானது. அதற்கு முன்பு காதல் படத்தில் முதல் முறையாக நடித்தேன். அதேபோல் அஜித் சாரோட ஜி படத்துலயும் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பேன். வெண்ணிலா கபடி குழு பட ரிலீஸ் ஆனபோது பரோட்டா காமெடி சீனுக்கு தியேட்டரே கைதட்டி ரசித்தது. எனக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கி அழ ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை வளர்ந்தது கல்யாணம் நடந்தது குழந்தை பிறந்தது.
என்னுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள், அவமானங்கள், அசிங்கங்கள் எல்லாமே இருந்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட நான் முயற்சியை கைவிடவில்லை ஆசைப்பட்டு ஜெயித்தவனை விட அடிபட்டு ஜெயித்தவன் தான் அதிகம்” என்றார். இதனிடையே ஒரு சம்பவத்தை பகிரும் போது கண்கலங்கினார். அது குறித்து அவர் பேசியதாவது, “பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்தது. எனக்கு டிரஸ் அளவு எடுத்தபோது கை, காலெல்லாம் நடுங்கி கண்ணு கலங்கியது. திடீரென அந்த கேரக்டருக்கு இன்னொருத்தர ரெக்கமண்ட் பண்ணிட்டாங்க. உடனே சட்டையை கழட்டுங்கன்னு சொல்லிட்டாங்க. அதே இடத்தில் சட்டையை கழட்டினேன்” என்றார்.
Follow Us