ஓமன் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உயிர் சேதங்களும் நடந்துள்ளன. இதையடுத்து, ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்ற சூழ்நிலை அதிகரித்து வருவதால் அங்கு பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பல பயணிகள் துபாயில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்படி சிக்கி தவிக்கும் மக்களுக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவ முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இப்போதைய நெருக்கடி காரணமாக துபாயில் சிக்கித் தவிக்கும் அனைவருக்கும் தங்குவதற்கு ஒரு இடம் இருக்கிறது. உங்களுக்கு இலவசமாக தங்கும் இடத்தை உறுதி செய்கிறோம்.
எந்தவொரு இந்தியராக இருந்தாலும் சரி, அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, தயவுசெய்து எனக்கோ அல்லது துகாஸ்டா பிராப்பர்ட்டிக்கோ மெசேஜ் அனுப்புங்கள். நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பும் வரை இலவசமாக தங்குவதற்கு நாங்கள் உதவி செய்கிறோம்” என்றுள்ளார். மேலும் அந்த வீடியோவின் கேப்ஷனில், “நாங்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்குகிறோம். அதற்கு நிபந்தனைகள் எதுவும் இல்லை. மனிதாபிமானம் மட்டுமே” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது சேவையை பலரும் பாராட்டி வருகின்றன. இவர் ஏற்கனவே கரோனோ காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தவஎ என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us