ஃபூட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன் தயாரிப்பில், கோதரி மெட்ராஸ் இண்டர்நேஷ்னல் லிமிட்டட் இணைந்து வழங்க, இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வில்’. ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம்.
இப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் முதன்மைப் பாத்திரத்தில், நீதிபதியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விக்ராந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கறிஞராக பணியாற்றிய எஸ் சிவராமன், தான் சந்தித்த உண்மையான வழக்கை, மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அதில் நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது, “இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எனது தம்பி சௌரப் அகர்வால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். என்னைப்போல அவருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள். சிவராமன் சாருடன் ஏற்கனவே தனிமை படம் வேலை பார்த்துள்ளேன். மக்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து கதை சொல்வார். அவரே வழக்கறிஞராக இருந்தவர். இந்தக்கதையை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். விக்ராந்துடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, காதல் கொண்டேன் ரூ.1 கோடியில் எடுத்து பிளாக்பஸ்டர் ஆனது. மக்களுக்கு எந்த கதை பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி” என்றார்.