தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவர் நடிக்கும் ‘சேயோன்’ பட ப்ரோமோவும் வெளியிடப்பட்டது. 

Advertisment

இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “எனது பிறந்தநாளுக்கு பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்த கமல்ஹாசன் சாருக்கும், தொல் திருமாவளவன் அவர்களுக்கும், அண்ணன் சீமான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

திரைத்துறை, பத்திரிகை தொலைக்காட்சி, பண்பலை, இனணய ஊடகங்களில் இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் மற்றும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. கமல்ஹாசன் சாரின் தயாரிப்பில், மண் சார்ந்த கதைகளை சொல்லும் சிறந்த கலைஞன் சிவக்குமார் முருகேசனின் இயக்கத்தில் எனது கல்லூரி சீனியரும் 24 ஆண்டுகால நண்பருமான சந்தோஷ் நாராயணனின் இசையில் எனது அடுத்த படமான சேயோன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட படக்குழுவினருக்கும் அதற்கு பேராதரவு அளித்து என்னை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்ததோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்ட உதவிகள் செய்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பின் வழியது உயிர்நிலை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment