அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதில் வயதான பாட்டி தோற்றத்தில் ராதிகா சரத்குமார் தோன்றியிருந்தார். ஒரு கிராமத்தில் அவர் வட்டி வசூலிக்கும் கரார் பாட்டியாக இருக்கும் நிலையில் அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதை காமெடி எமோஷனல் கலந்த ஒரு படமாக இது இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. இப்படம் முதலில் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பின்பு வரும் 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இப்படத்தை சமீபத்தில் படக்குழுவினருடன் கமல்ஹாசன் பார்த்து மகிழ்ந்தார். மேலும் படக்குழுவினரை பாராட்டினார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பவுனுதாயாக வரும் ராதிகா படுத்த படுக்கையாக கிடக்க அவர் கடைசியாக ஏதோ சொல்ல நினைக்கிறார். ஆனால் அவர் சொல்ல முடியாமல் போக அவர் என்ன சொல்கிறார் என்பதை கண்டுபிடிக்க அவரது குடும்பத்தார்கள் முயற்சிக்கின்றனர். அப்போது ‘கோடியில ஒரு ஆளுக்குத்தான் இது நடக்கும்’ என்ற வசனம் வருகிறது. அதனால் அரிதான ஒரு விஷயம் நடக்கிறது. அது என்ன என்பதையும், இறுதியில் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதையும், குடும்பத்தாரின் முயற்சி வெற்றி பெற்றதா என்பதையும் காமெடி எமோஷ்னல் கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
Follow Us