பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படக்குழு முதல் நாள் முதல் காட்சியை மதுரையில் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளது. பின்பு செய்தியாளர்களை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளது. அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், “இது ஒரு ஜனரஞ்சகமான படம். எல்லா வயதினரும் பார்க்க வேண்டும் என ஆசையாக எடுத்துள்ளோம். இந்தப் படத்தை மதுரையில் ஏன் முதல் ஷோ பார்க்கிறோம் என்றால் படத்தின் இயக்குநர் மதுரையை சேர்ந்தவர்” என்றார்.
பின்பு அவரிடம் பான் இந்தியா தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பட்டப்படிப்பு படிக்காமல் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். அதை சொல்கிற படம் தான் இந்த படம். இதுவும் ஹிட்டாகி பல இடங்களுக்கு சென்றால் இந்த படமும் பான் இந்தியா படம்தான். என்னுடைய நோக்கம் நல்ல கதையை சொல்ல வேண்டும். நான் நடிக்கும் படத்தில் சொல்ல முடியாத விஷயங்களை நான் தயாரிக்கும் படங்களில் சொல்ல வேண்டும். இந்த படத்தை கமல் சார் மிகவும் பாராட்டினார். ரஜினி சார் அனைவரிடமும் போன் பண்ணி பேசினார். சூர்யா ஜோதிகா தம்பதியினர் பட பிரிவியூவ் ஷோக்கு வந்திருந்தனர். இன்றைய ஹீரோக்கள் ரியோ, மணிகண்டன் போன்றோரும் வந்திருந்தனர். எனக்கு சப்போர்ட்டாக இருக்கும் அனைவரையும் எந்த இடத்திலும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றார்.
பின்பு அவரிடம், சினிமாவில் சிலர் என்னை தடுக்கிறார்கள் என்று இசை வெளியீட்டு விழாவில் பேசியது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது யார் என சொன்னால் யூட்யூப் சேனலுக்கு எக்ஸ்ட்ரா ஒரு விஷயம் கிடைக்கும். அப்படி நான் சொன்னதற்கு காரணம் இன்னொருவரை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. நிறைய விஷயங்களை கடந்து வர வேண்டும் என்பதற்காகத்தான். எல்லாத்துறையிலும் இது போன்ற கஷ்டங்கள் இருக்கும். என்னை பிடித்தவர்களுக்கு நீங்கள் இருப்பதால்தான் அந்த கஷ்டங்களை என்னால் தைரியமாக கடந்து வர முடிகிறது என்பதை சொல்ல நினைத்து சொன்னேன். நான் சுலபமாக நாலைந்து பேரை சொல்லி விட்டு இவர்தான் காரணம் என போகலாம். ஆனால் அது அப்படி அல்ல.. இப்படி ஒரு சூழ்நிலை இருக்கிறது, அதை கடந்து தான் வருகிறோம் என்பதை சொல்வதற்காகத்தான்” என்றார்.
Follow Us