சிலம்பரசன் பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான படமான சிலம்பாட்டம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. மறுவெளியீட்டை ஒட்டி படக்குழு மற்றும் திரை பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் டி.ராஜேந்தர் பேசியதாவது, “என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான், என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா. நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா.
அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறு படங்களுக்கு கூட்டம் வரவில்லை. அது போல இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன், அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வந்தாலும் தள்ளிப்போவேன். அது நான் தரும் மரியாதை. தமிழ் சினிமா ரீ-ரிலீஸில் என் பையனின் சிலம்பாட்டம் பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்” என்றார்.
Follow Us