இயக்குநர் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து இன்னும் பெயரிடாத படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் கதை காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக இருக்குமென கூறப்படுகிறது. இப்படத்தை துர்கா ஆர்ட்ஸ் பேனரில் கே.எல். நாராயணா தயாரிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும் பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முதலில் ஒடிசாவில் துவங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கென்யா நாட்டில் நடக்கவுள்ளது. இதற்காக கென்யா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முசலியா முடவாடியை ராஜமௌலி நேரில் சந்தித்து பேசியிருந்தார். இப்படத்தின் முன்னோட்டம் வரும் நவம்பரில் வெளியாகவுள்ளதாக கடந்த மகேஷ் பாபுவின் பிறந்தநாளன்று ராஜமௌலி தெரிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் முகம் மறைத்தபடி சிவனின் திரிசூலம், நந்தியின் சிலை அடங்கிய டாலரை அணிந்திருக்கும் ஒரு நபர் இடம்பெற்றிருந்தார். அதன்படி நவம்பர் 15ஆம் தேதி ‘க்ளோம் ட்ரோட்டர்(Globe Trotter)’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்வு நடக்கவுள்ளதாக அறிவித்தார். இதையடுத்து அந்த நிகழ்வின் முன்பாகவே கடந்த 7ஆம் தேதி பிரித்விராஜின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ‘க்ளோம் ட்ரோட்டர்(Globe Trotter)’ என்ற தலைப்பில் ஒரு பாடலை அவர் வெளியிட்டுள்ளார். இப்பாடலை ஆஸ்கர் வென்ற கீரவாணி இசையமைக்க பாடகியும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் மற்றும் கால பைரவா ஆகியோர் பாடியுள்ளனர். சைதன்யா பிரசாத் எழுதியுள்ளார். ‘க்ளோம் ட்ரோட்டர்’ நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடக்கவுள்ளது. மேலும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
Follow Us