ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சுந்தர் சி இயக்குநராக கமிட்டானார். ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காத காரணத்தினால் அவர் வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு கமலுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் நடிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து சமீபத்தில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்படத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது. இதனை படத்தில் நடித்து வரும் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பெங்காலி மொழியில் ஒரு நேர்காணல் கொடுத்த அவர், ஜெயிலர் 2 என பெயர் குறிப்பிடாமல் “மோகன்லால், ஷாருக் கான், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் என ஒவ்வொரு பெரிய கலைஞரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்” என்றுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் ஜெயிலர் 2 என யூகித்து படத்தை ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
Follow Us