பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே கமல் ஹாசன், சூர்யா - ஜோதிகா, அட்லீ உள்ளிட்ட பல பிரபலங்கள் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “படம் மிகவும் அருமையாக இருந்தது. முதல் பாதி கலகலப்பாக இருந்தது. அந்த ஆம்புலன்ஸ் சீனில் இருந்து ஆழமாக சென்று இரண்டாம் பாதி முடிவில் மறக்கமுடியாத பிளாக்பஸ்டர் படமாக மாறியது. மேலும் இறுதியில் பேராசை, கல்வியறிவின்மை, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற பல கருப்பொருள்கள் படத்தை மணிமகுடமாக மாற்றியது. இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்கு பாராட்டுக்கள். அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக எழுதப்பட்டிருந்தன, நடிகர்கள் தேர்வுவும் சரியாக இருந்தது. அனைவரின் நடிப்பும் கூர்மையாக இருந்தது. உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய அறிமுகம்.
ஒரு நடிகராக ராதிகாவின் திறமையை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இந்த படம் உண்மையிலேயே அதை அடுத்த படிக்கு எடுத்துச் செல்கிறது. நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்தின் தரத்தை உயர்த்தியது, அதோடு அவரது வித்தியாசான அணுகுமுறை படத்துடன் நன்றாக ஒன்றிணைந்தது. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது பாராட்டுகள். இந்த அர்த்தமுள்ள மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கியதற்காக சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸிற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us